செவ்வாய், 28 ஜூன், 2011

ஒருநா ஒருப்பொழுது



ஒருத்தன் ரெண்டு பேரா இருந்தாச் சமாளிக்கலாம்! அடவொரு ஐந்நூறு ஆயிரமுன்னாச் சுதாரிக்கலாம். நெனைச்சாப்பிடி ங்கொண்ணகாரம் பட்ட கடன் மூணு லட்சங்குடு நாலு லட்சங்குடுன்னா எங்கயிருந்து அவுக்கறது? இந்த நேரம் பாத்து இவ வேற வவுத்த நோவுதுன்னு மூணு நாலாப் பெணாத்திக்கிட்டு கெடக்கறா! ஒரேப் பிள்ள போதுண்டின்னுச் சொன்னன் கேட்டாளா? எச்சித்தண்ணிக்கு எதுத்தண்ணி வக்கு இல்ல மாளாத சொத்து வீணாப்போவுது பையன் வேணும், பையன் வேணுமின்னா, இப்ப பட்டுக்கிட்டுருக்கறா.
கூலிக¢காரம் பொழப்புல நோக்காடு ஒரு நோவு நோடியின்னா அந்தண்ட இந்தண்ட நவுர முடியிதா?ங்கொம்மாள கூட்டிக்கிட்டு வாடின்னா ஆயலோக்க அவளுக்கு சேலம் ராவு ஆசுபத்திரியிலதான் நொட்டணுமாம். ஜம்பஞ் ஜல ஜலங்குது மொள்ள மொளு மொளுங்குது.
இங்கு ஒவ்வொருத்தணும் அஞ்சி உருவா பச்ச நோட்ட கண்ல பாக்கறதுக்குள்ள குண்டியில சீக்கட்டிக்கிது. அவ அவ அப்பமூட்லயிருந்து அதக்கொண்டாரா, இதக்கொண்டாரா உப்பு புளி மொளவாக் காயிலயிருந்து சகலமுங் கொண்டாரா! நம¢பளுக்கு ஆத்தர அவசரத்துக்கு ஒரு பக்கம் போவ வர தொணக்கி ஒரு ஆளு வேணுமின்னா வெண்ண வெச்சி உருவணும். என்னைக்கும் கண்ட நாயந்தானே இது, கெடந்து தொலையிது.
ஒம்போதுப் பிள்ள பெத்தவளுக்கு தலச்சம் பிள்ளக்காரி மருத்துவம் பாத்த கதையா அந்த பாடமாத்திங்களுக்கு என்னா மயிரா தெரியிது? எதயும் அத்துப்படியா தித்துமானம் பண்டுதுங்களா? நாம்பு நாம்பா மாத்தர! கொலாயச் சுத்திச் சுத்தி வற ஊசி, ஏத்தி காசப்புடுங்கதாம் பாக்குதுங்க.
மட்டக்கார மாதுப்பிள்ள மவனுக்கு காசக்குளுரு வந்து எடப்பாடிக்கி கொண்டி ஒரு டாக்டரிண்ட ஊசி போட்டதுதாஞ் சாக்கு! ஏப்பா பையனுக்கு மேலுப்பூரா பத்துபத்தா தோலு உரிஞ்சிக்கிட்டு வருதே நல்லம்பாம்பு சட்டையாட்டம்! இங்கயிருந்து சேலம் நாலு ரோட்டுக்கு ஓடி சுந்தர்ராசி ஆசுப்பத்திரியில சேத்தி ஒன்ற லட்சம் செலவு பண்டனதுதான் தொச்சம் பையந் தெளிச்சியாவல. இன்னைக்கோ, நாளைக்கோன்னு இழுத்துக்கிட்டு கெடக்குது! இந்த ரட்சணத்துல ஊசி போட்ட மவராசன.
“என்றா தாயோலி இப்பிடி பண்டிப்புட்டி”ன்னு நாயங்கேட்டா.
“டேய் ஆசுபத்திரியிலிருந்து பையன உசுரோட கொண்டு போவ மாண்டிங்கடா”ன்னு ஆளு வெச்சி மெரட்டறானாம். காசக் குடுத்துட்டு காண்டுப்புண்டய பாத்தியா?
இவுத்த இருக்கற குருவா கெழவியிண்ட கையக் குடுத்தா வவுத்துல இருக்கறத ஆணா, பொண்ணான்னு கண்ட வெச்ச மாதர சொல்லிப்புடுவா... ம்... கொறத்திப் புள்ள பெத்தா கொற வந்தான காயந்திங்கனும்?
“பொறப்படறீப்பிள்ள சேலத்துக்கு”ன்னு
நானு எங்க கருவாச்சிய இழுத்துக்கிட்டு காரு ஏறி மேச்சேரி வர்ரதுக்குள்ள அவிங்க அம்மாக்காரி தகோலுத் தெரிஞ்சி பையிங் கையிமா மூட்டக்கட்டிக்கிட்டு வந்துட்டா, மவள என்னம்மோ ஆசுபத்திரியில கெடயில போடறாப்ல. இந்த திருடி மலயாமூட்லயிருந்து போனுபோட்டுச் சொல்லியிருப்பா
“வாடி ஆயா என்னப்பெத்தவளே! இந்த கால கண்ட ஐயன் சேலங்கூட்டிக்கிட்டு போறான். திலும்பி கூட்டியாரதுக்குள்ள என்னய கொன்னாலுங் கொன்னுப்புடுவாண்டி”ன்னு எங்க மாமியாளக் கண்டாவே எனக்கு பொச்சி வாயெல்லாம் எரியும். வவுத்துப்பிள்ள கீழ நழுவறாப்பல பேசுவாளே ஒழிய காரியத்துல ஒண்ணுமிருக்காது.
ஒரு ரெண்டு வருசத்திக்கு மிந்தி எங்கூட்டுக்காரி நெறமாசம், கட்டுச்சோறு ஆக்கிப்போட்டு அவிங்கப்பமூடு கூட்டிபோயிந்தாங்க. அந்தெட்டு எங்கூட்டாளி செந்திலான் வூடுகட்டி சம்ரட்ண வெச்சிருந்தான் திலுப்பூர்ல. நானு வர்லயின்னாலும் அவன் வுடல.வாடா வாடான்னு ஒரேத் தொந்தரவு. சேரி தெலையிது எங்கூட்டு அக்கப்போருலயிருந்து ஒருநா கண்ணுக்கு மறப்பா எங்கியாச்சும் இருந்துட்டு வர்லாமுன்னு கௌம்பனன்.
போற தடத்துல மேட்டூருக்குப் போயி இவளப் பாத்துட்டு ரெண்டு பழங்கிழம் வாங்கிக் குடுத்துட்டு போலாமின்னு போனா, ஏப்பா இந்த கொலவாரிங்க ஒண்ணுங்கூட வூட்ல இல்லப்பா. எங்கியோ பெரிய காரியம் ஆயிப்போச்சின்னு இவள ஒருத்தியும் தனியா வுட்டுட்டு போயிரிச்சிங்க. பொம்பள மேலு வேற மினுமினுன்னுருக்குது, மொவற வேற வெளுத்து சொரந்துக்கிட்டுருக்குது. எந்நேரம் வேணுமின்னாலும் புளள் பொறந்துக்கும் ஆருக்கண்டா?
எனக்குன்னா திலுப்பூரு போவ மனசே இல்ல. இருந்தாலுஞ் செந்திலாங்கிட்ட வர்ரன்னு சொல்லிப்புட்டமே... மடியிலிருந்த மூவாயிரத்த எடுத்து இந்த காமாலச்சிக்கிட்ட எதுக்கும் செலவுக்கு வெச்சிக்கடின்னு குடுத்துட்டு “பத்திரமாயிருப்புள்ள விடிஞ்சதும் ஓடியாந்துடறன் ”ன்னு வண்டியேறி நான் அந்தண்ட போவ, இவுளுக்கு இந்தண்ட புள்ள நோவு கண்டுருக்குது.
என்னாப்பண்டுவா? ஒரு சுடுதண்ணி வச்சிக்குடுக்கக்கூட ஆளு இல்லாம வூட்டுக்குள்ற குறுக்கு மறுக்கா நடந்துகிட்டே மவ நோவு பொறுக்கமாட்டாம துடியா துடிச்சிக்கிட்டு இருந்துருக்கறா. அவ சின்னப் பொறந்தவன் அக்காளச் சித்தய பாக்கறதாம் அழுவுறதாஞ் சித்தய! அவனுக்கு என்னாத் தெரியும் பாவம் அறியாப் பையனுக்கு? எந்தச்சாமி புண்ணியமோ! பக்கத்தூட்டு மாங்காக் காரம்மா இந்த தாக்கல கேட்டவ கடயப் போட்டது போட்ட வாக்குல வுட்டுட்டு மவங்காரன ஒரு வண்டி கொண்டாரச் சொல்லி இவள ஏத்திக்கொண்டி கவுருமெண்டு ஆசுபத்திரியில சேத்தியிருக்கறா.
விடிய, விடிய முக்கி பிள்ளப்பெத்த நோவுக்கூட எம்பொண்டாட்டிக்கி பெருசில்ல, இப்பிடி வாயும் வவுறுமா இருக்கறவள இட்டாந்து சீருப்பாக்கறதுக்கில்லாம ஒண்டி ஒரியா வுட்டுட்டு அப்பமூடு ஊருமேல போயிட்டாங்களே, அந்த மொடமசுரு புடிச்சவன் கண்டாரக் கழதையின்னு வந்து நேந்தப்படி பேசனா என்னா வதுல சொல்லறதுன்னு அழுது கிட்டிருந்திருக்கறா.
கெழக்கு வெளுக்கும் மிந்தியே நானும் ஓடியாந்துட்டேன். எம்மவள பாத்தன். கோவங்கீவமெல்லாம்போன எடந்தெரியல. ஆரையும் பேசல, எதயுஞ் சொல்லல.
அப்பறம் ரெண்டு நாளு கழிச்சி இவளோட ஆயாளும், பொறந்தவனும் மெட்ராசியிலிருந்து ஆடிக்கிட்டு வந்தாங்க. வந்தவுங்க எதோ ஆளு அம்பு இல்லாத தாவுல மவக்காரி நல்ல விதமா பிள்ள பெத்துக்கிட்டாளேன்னு சந்தோசப்படறத வுட்டுட்டு வந்த வெசயில.
டேய் ஆர்ரா பிள்ளய சீன்ரத்துல கொண்டாந்து தள்ளுனது? பூமா ஆசுபத்திரியில எம்மவ பிரசவத்துக்கு அஞ்சாயிரம் பணங்கட்டி டோக்கனு வாங்கியிருக்கறன். இந்த நாத்தத்துல வேண்டா, தூக்குங்க தூக்குங்க! காரக்கூப்புடுங்க பிளசரக் கூப்புடுங்க அங்கயிங்கன்னுச் சும்மா குதிக்கறாங்க. அதுவும் இவப்பெரிய பொறந்தவனுக்குன்னா இடுப்புல வேட்டியே நிக்கல. ஹும் இவிங்க புண்ட வருச எனக்கு தெரியாதா?
“பிள்ள கொலாய மூடிக்கிட்டு கம்முகு இருக்கச் சொல்லு! வலி பொறந்தா ஒதவி ஒத்தாசிக்கு எசவில்லாம என்னாப்பண்டுவான்னு துளிக்கூட கருக்கட இல்லாம தலச்சம்பிள்ளத்தாச்சிய வுட்டுட்டு அவிங்க ஊருபெரயாணம் போனதே பெரிய்ய குத்தம். பொறவு இங்க வந்து அது நோனி இது நோனின்னு எச்சாப் பேசனாங்க... செத்தாலும் இலல் பொழச்சாலும் இல்லன்னு ஒரேடியா கழிச்சிக்கட்டிப்புட்டு ஆசுபத்திரியிலயிருந்து இப்பிடியே உன்னய கூட்டிக்கிட்டுப் போயிருவஞ் சாக்கிரிதி! உன்னு மரிகேதிக் கோசரம் வேணும் வௌயனுமின்னு பாக்கறன்”னு நானு எங்கூட்டுக்காரியிண்ட ஒரே வார்த்தயாச் சொல்லிப்புட்டான்.
வெத்துவேட்டு நாயம், வெறும் பழம பேசறதுல மட்டுமில்ல எங்க மாமியா ஒரூட்ட ஒமபோது வூடாப் பண்றதலியும் கெட்டிக்காரி.
அண்ணந்தம்பி நாங்க அஞ்சாறுப்பேரு. ஆளுக்கு தக்கனப் பாடு! அவரவருச் சம்பாதன. ஓராளுப் பன்னாட்டு எல்லாம் ஒட்டுக்காத்தான் இருந்தம்.
எனக்கு கண்ணாலம் ஆன புதுசு. ஓகாதியோ என்ன கருமாந்தரமோ! மொத நோம்பிக்கி கூப்புட மாமியாக்காரியும், நங்கையாக்காரியும் வந்துருந்தாங்க. தவுசு நாடகத்துல வர்ற பேரண்டச்சி வேசமாட்டம் எம்பொண்டாட்டியோட அக்காக்காரி நல்லாப் பெருஞ்சாதிப்பொம்பள. கரும்புக்காட்டுக்கு நெருப்பு வச்ச மாதிரி நெறம். தண்ணியக் கழுவி நெவுலப் பூமியிலப் பொதைக்கிற ரகம். நோம்பிக்கின்னு வூடு வாசச் சுத்தம் பண்டி துணிமணி தொவச்சி சாமானஞ்சட்டெல்லாம் வௌக்கி கமுத்தி வெச்சிருந்தாங்க. வந்தவங்க ரெண்டுபேரும் ஒரு பக்கமாயிருந்து நோட்டம்போட்டாங்க. சனி மூலையில கோந்திருந்தவங்க இருந்தாப்பிடியிருந்து எங்கூட்டுகாரிய கட்டிப் படிச்சிக்கிட்டு அழுதாங்க பாரு ஒரு அழுவாச்சி ச்சும்மா ஏங்கி ஏங்கி அழுவறாங்கப்பா! அழுவாச்சியோட அழுவாச்சியா எங்க மாமியா “அய்யோ கண்ணு அல்லா வேலயும் நீயேத்தாஞ் செய்யணுமா? வஞ்சிக் கொடியாட்டம் வளத்தனனே! மாடா ஒழைச்ச் ஒடாத் தேயிறியே மவளே”ன்னு நீலிக்கண்ணீரு வடிச்சா.
கூடமாட வேல செஞ்சவிங்க காதுல இது வுழுந்தா அவிங்க வவுறு வாயி பத்துமா பத்தாதா? ஏப¢பா பத்தாயிரம் இருவதாயிரம் போட்டு கண்ணாலம் பண்டிகிட்டு வர்ரவன் பொம்பளைய சாமியூட்ல வெச்சி பூப்போட்டு பூசையா போடுவான்? ஒடம்பு வளையாம ஒரு வேல வெட்டி செய்யாம நெவுலடி நாத்தாட்டம் இவிங்க குந்தன தாவுல குந்திக்கிட்டு இருக்க ஆளு அம்பு வெச்சி வேலப்பண்ட நாம்பென்னா குபேரமூடா? நாஙகூப்புட்டுச் சொல்லிப்புட்டன. “விருந்தாட வந்தமா, வவுறாறத் தின்னமான்னு வந்த சோலியப் பாத்துக்கிட்டு போயிக்கிட்டேயிருக்கனும். நடுப்பற குசலம்பேசி வூட்ல குச்சி முறிச்சி போடற நெனப்போட ஆராச்சும் இந்தவூட்ல அடியெடுத்து வெச்சா மானங்கெட்டுப் போயிரு”மின்னு.
அப்புறம் ஆறு மாசம் ஒரு வருசம் நோம்பியாவுது நொடியாவுது ஒருத்தியும் எந்த விசேசத்துக்கும் எங்கூட்டுப்பக்கம் தல வச்சிப் படுக்கல. ஊரான ஊருக்கு மணிக்கி ஒம்போது வண்டி, பத்து வண்டி வந்து போனாலும் பாழாப் போன சந்தக் கூட்டத்துல சனம் பஸ்சுக்குள்ற ஏற முடியிதா? நல்ல நாளுலியே நெலத்துல கால ஊனி நடக்கமாண்டா, ஒடற பஸ்சிலியா இவ ஒவஞ்சி நிக்கப்போறா.
மிந்தி ஓராடம் மாமனாருக்கு வருசாந்தரங்கும்பட நானும் அவளும் எங்க குட்டிப்பிள்ளயும் மேட்டூருக்குப் போனம். பதனாறு கமானத்தாண்டி சேலம் கேம்ப்பு திலுப்பத்தல கிட்டு பஸ்சு டைவரு போட்டாம்பாரு பிரேக்கு! ரெண்டாளுச் சீட்டியிலக் குந்தியிருந்தவ பிள்ளயோடப் போயி படிக்கட்டுல வுழுந்தா. கண்ண மூடி கண்ண தொறக்கறதுக்குள்ள ரெண்டு உசுருங் காணாமப் போயிக்கும். நானோடி பிள்ளயத்தூக்கனதும் வுட்டன் இவுளுக்கொரு அப்பட்ட பொம்பளைக்கி அத்தன அசால்ட்டு மயிரு! புடிமானங் குடுத்து ஒக்காரத் தெரியாதா? உருசுப் போனாலும் போயிட்டுப்போவுது, ஒரு நாள்ல அழுது தொலச்சிப்புடலாம். காலு, கையி ஒடஞ்சி கட்லோடக் கெடந்தா பீயி, மூத்ரம் அள்ளி... அந்தச் சீரெழவ ஆரு கண்ல பாக்கறது?
நாலு பஸ்சு, அஞ்சி பஸ்ச வுட்டுட்டு அதுப் பொறவு ஒரு பஸ்சுல ஏறனம். எங்க பொடுசலையும் அவளையும், அவிக ஆயா¬யும் ஒருத்தாவுல குந்த வெச்சிட்டு நானுப்போயி தனியா ஓரெடம்பாத்து ஒக்காந்திக்கிட்டன். மடியில ங்கெண்ணங்காரங் கேம்பரா மூணன்னங் கெடந்தது. இந்தப்பிள்ள சில்லி வண்டு பண்ற ராவுடியில அதெயெங்கியாச்சும் உளுக்காட்டியுட்டுட்டா? ஒரு உருவா? ரெண்டு உருவாயா?
ஒவ்வொண்ணும் பத்தாயிரம், பாஞ்சாயிரம்! நேரங்கண்டு வவுத்துக்கு சோறு குடிக்காம, முடிச்சுப்போட்டு முடிச்சிப்போட்டு சேத்தி வெச்சி வாங்கனப்பண்டம். அத்தன வெலப் போட்டு வாங்கியொண்ணும் வீணாப்போவல. முட்டுவலிக்கி தவுந்த வருமானம். போன பக்கம் வந்த பக்கம், ஒரு கண்ணாலங் காரியம், சீருசெனத்தி, வூடு சம்ரட்ன எவுத்த திலம்புனாலும் சீத்தாராமம் போட்டாத்தான்.
அதோட நின்னிருந்தா இந்த அவகேடு வந்துருக்காது பாழாப்போன சீனிமா ஆச மவன பழி எடுத்துப்புடிச்சி. ஆறேழு வருசமா, அப்பனாயா, பெத்து பொறப்பு பொண்டாட்டி பிள்ளைங்கன்னு ஆரோடயும் ஒட்டு ஒறவு இல்லாம சேலத்துக்குப் போறது, மெட்ராசிக்கி போறது.. ஆரு ஆரையோ சினேகிதம் பண்டி பட முந்தா புடிச்சான். அதல ஒரு பத்தும் நூறும் சம்பாரிச்சான். படிப்படியா மின்னுக்கு வந்தான். மெட்ராசி பசாருல ஒரு வூடு வாங்கனான், ஆளு அம்பு சேந்தது. ஆருக்கண்ணு பட்டுச்சோ! எவுரு கண்ணுபட்டுச்சோ! இல்ல அந்த ஆண்டவனுக்கே பொறுக்கலையோ! ஆத்தூருக்கு அக்கட்ட பெரம்பலூரிண்ட சிமிட்டி ராரி அடிச்சி, துள்ள துள்ள போயிச்சேந்துட்டான். முப்பத்தியேழு வயசி ஒரு வயசா? பாழுஞ் சீவம் போவயில எப்பிடித் துடிச்சதோ! மவராசன் என்னான்னா நெனச்சானோ! தாயோலி ஊருக்கு வந்தா ஒரு நிமிசம் வூட்ல நிப்பானா? கூட்டாளிங்க கூட்டாளிங்க... அவிக கொலாயிப் பொறனச் சுத்துவானே ஒழிய அப்பனாத்தா, பொறந்தவ மாரு ஆரும் அவங்கண்ணுக்கு தெரியாது. ஒக்காந்து அவிங்களோட ஒரு வார்த்தப் பேச மாட்டான். வீதி வாசக்கால்ல நின்னு ங்கெம்மாக்காரி
“கண்ணு வந்து ஒருவாச் சோறு குடிச்சிபுட்டு போடா”ன்னு வேண்டாத நாளு இல்ல. நிக்க நேரமில்ல, நிக்க நேரமில்லன்னுப் பொட்டியத் துக்கிக்கிட்டு ஒடுவாஞ் சண்டாளன்.
செத்தவன வாரிக்கொண்டாந்து நடு வூட்லப் போட்டு எடுக்கல நிக்க நேரமில்ல நிக்க நேரமில்லன்னு எரிக்க கொண்டுப் போயிட்டாங்க.
தோளுமேலேயேத் தூக்கிக்கிட்டு திரிஞ்சானே அவம்பிள்ள! பாவம், அது அப்பங்காரன் மொவத்தவக் கூட பாக்கல தூங்கி முழிக்கறதுக்குள்ளே கட்ட வெந்துபோச்சி. இருக்கறமுட்டும் வாங்கித் தின்ன நாயிங்க இன்னைக்கி எங்கிட்ட லட்சம் வாங்கனான், கோடி வாங்கனான்னு கழுத்துக்கு துண்டு போடறாங்க. நம்ப பொழப்பே நாறிக்கிட்டு கெடக்குது. இதுல எங்கப்போயி கடந்தீக்கறது? சீட்டுக்காரம் பொண்டாட்டி பணம் வல்லையின்னா மருந்தக் குடிக்கறன், மாயத்தக் குடிக்கறன்னு நேத்து ராத்திரி ஒரே ஆர்ப்பாட்டம். நாயக்காரனங்க வந்து எதோ கொஞ்சங் கொஞ்சமா அவஞ்சொத்த வித்தாச்சும் கடங்கட்டுன்னு நாயஞ்சொல்லிப்புட்டு போயிட்டாங்க. எத விக்கிறது? அரநாக்கவுறு மொதக் கொண்டு அடமானமுன்னு அங்கபோயி பாத்தப்பறந்தாஞ் தெரிஞ்சது. என்னாப் பண்டுவ? எதக்கண்டு கடங்கட்டுவ? உள்ளது இந்த கேம்பரா. ரெண்டு மூணு டிவிப்பொட்டி. அதப்பத்தி நாம்பென்னதக் கண்டம்? தலமேல தூக்கி விக்காத கொறயா சுத்தாத எடமில்ல. அடிமாட்டு வெலைக்கி கேக்கறாங்க மனசொம்பல, பூராம்அவன் ரத்தமாச்சே...
புது பைட்டேண்டுல எறங்கி அவிங்கள ஆசுபத்திரிக்கி மொள்ள நவுத்திக்கிட்டு வர்றதுக்குள்ள கண்ணாமுழி பிதுங்கிப் போச்சி. சொந்த ஆசுபத்திரின்னு தாம் பேரு! ஊருப்பட்ட நோவுக்காரனெல்லாம் ஒட்டா வந்து குமியராங்கடாச் சாமி! அதத கெவுணிக்க தனித்தனி ஆளு.
இவளக்கொண்டி ஒரு பொம்பள டாக்டரிண்ட காட்னா,அவ ரத்தமும், மூதரமும் சோதிச்சக்கிட்டு வரச்சொல்லி சீட்டு எழுதிக் குடுத்துட்டா. அதும்பொறவு கேணு வேற எடுத்துப் பாக்கணுமாம்.
என்னாக் கல்லெடுப்பா! ஒவ்வொண்ணுக்கும் சாரியில நின்னு, நின்னு, காலே மரத்துப் போச்சி. எல்லாம் முடிஞ்சி கேணுப் போட்டு பாத்தா, படம் நல்லா வுழுவலியாம், வவுறு நம்ப தண்ணிக் குடிச்சப்பொறவு திலிப்பியொருக்க எடுக்கச் சொல்லிப்புட்டா அந்தப் பொம்பள. மறுக்கா படம் எடுக்கறவனப் போயி பாத்தா,
“என்னம்மா உங்களோட ஒரே ரச்ச போயிட்டு பொறைக்கி வாங்க”ன்னுப்புட்டான். அவனச்சொல்லியும் புண்ணியமில்ல. அவஞ் சூத்துப்பொறன அஞ்சாறு ரைனு.
சரிசரின்னு இவுளுக்கும் அவிகம்மாளுக்கும், பிள்ளைக்கும் அவுத்தியே ஆளுக்கொரு சோத்துப் பொட்டணமும், அதோட துளித் துளி மழக்காயிதத்துல சர்பத் வித்தாங்க அதயும் ரெண்டு வாங்க கையில துருத்தி,
சோத்தத் தின்னுப்புட்டு நெவுல்ல குந்தியிருங்க. நாம்போயி இந்த கேம்பரா எங்கியாச்சும் வெளையாவுமான்னு பாத்துட்டு வரன்னு சொல்லிப்புட்டு நானு சோட்டானுக்குப் போனு போட்டான். மேட்டூருல அய்ட்டி படிக்கக்குள்ள சேலங் கேம்ப்லயிருந்து எங்கூட ஒரு மலையாளத்தானும் படிச்சான். செரியான நெனப்புக்காரன். எதயும் அவங்கண்ணுப் பாத்திச்சின்னா கையி செய்யும். ஐயோன்னு போனா ஆருக்கும் ஒரு ஒதாரண நெனைக்கிறவன். அவந்தான் இவத்த சேலம் நாலுரோட்டுண்ட போட் டாக்கட, லேடியாக்கட, டேப்புக்கட வெச்சிருந்தான்.
எதனாலும் இந்தச் சாமானத்தப் பாத்து வித்தக்குடுறான்னு மிந்தியே ஒருநாக் கேட்டிருந்தன். அவனும் சேலம் வந்தா வாடான்னு சொல்லியிருந்தான். இவிக தின்னு கை கழுவறதுக்குள்ள பையன் பரோர்னு வண்டிப்போட்டுக்கிட்டு வந்துட்டான்.
பத்ரம் பத்ரமுன்னு
எங்கூட்டுக்காரியிண்டச் சொல்லிப்புட்டு, மாமியார்க்காரி என்னா ஏதுன்னு கேக்குமின்ன வண்டியேறிக் குந்திக்கிட்டான். வண்டியோட்ட எங்கப்படிச்சானோ ரோட்ட வழுக்கிக்கிட்டு சல்லுனு போவுது சக்கரம். அவங்கடைக்கிப் போயி சேர்றதுக்குள்ள பையனுக்கு அஞ்சாறு போனு வந்துட்டது. வண்டிக்கி எண்ணப் புடிக்கலாமுன்னு ஒரு பங்குல நிறுத்தனாம்பாரு அவுத்திக்காலியும் போனு கினிகினியிங்க
“பொட்டாப் பொழுதுக்கும் அடிச்சே இருக்குதே! அத எடுத்து பேசித் தெலையிடாச் சித்த“”ன்னு நானுச் சத்தம்போட, அவம் பேசிப்புட்டு வைக்குமிந்தி மொவற சுண்டிப்போச்சி.
“என்றா சமாச்சாரம் ஆர்ரா மாப்ள போனுல?” நாங் கேக்க
“நம்ப மணியவிங்க அம்மாதாண்டா பேசினிச்சு. நாமக்கல்லு மோகனூருல போன வாரந்தாண்டா அவனுக்கு பொண்ணு பாத்து உறுதி செஞ்சம். அந்தப்பிள்ளய வேண்டான்னுப்புட்டு, அதாரோ இன்னொருப்பிள்ளய கூட்டியாந்து வூட்ல வெச்சிக்கிட்டு அவளத்தாங் கண்ணாலஞ் செஞ்சிக்கவன்னு அடம் புடிச்சி ஆட்டங்கட்றானாம். அவிங்க சித்தப்பமூட்ல பஞ்சாயத்தாம். கையோட வர்றச் சொல்றாங்க. வர்றியா ஓரெட்டு போனதும் வந்தரலாம்”மின்னான்.
நானுங் சேரியிங்க வண்டித்திலுப்பி அன்னதானப்பட்டிக்கி வுட்டான். எங்களோட மணி, மணியின்னு இன்னோருப் பையனும் படிச்சான். மலையாளத்தாங்கூட அவனும் இரும்பாலைக்கி போயிக்கிட்டிருந்தான் வேலைக்கி. அவங்கூட்டு நல்லது கெட்டதுன்னா மலையாளத்தாந்தான் மொகாம எதயும் மின்ன இருந்துச் சேய்யிவான்.
அட அப்பா! அங்கப்போயிப் பாத்தா, அது வூடா சந்தக்கடையான்னே தெரியல. மணிப்பையனோட அப்பன் ஒருபக்கங் கத்தறான், அவிங்கம்மா ஒரு பக்கம் அழுவுறா, அவம்பொறந்தவன் ஒரு பக்கங் கத்தறான் அவஞ் சித்தப்பனும், சித்தியும் ஒரு பக்கம் பேசறாங்க, இவனொருபக்கம் நாம்போயி சாவறங்கறான். அவங்கூட்டியாந்தானே இஷ்டக்காரி அந்தப்பிள்ள ஒரு பக்கம் நாம்போயி கரண்டுல கைய வெக்கிறங்குது.
நாயங்கண்டு பேச முடியல. ஒண்ணுக்கு ஒண்ணு ஆரும் வுட்டுக் குடுக்கறாப்பல இல்ல. எரியறதத் தணிச்சா கொதிக்கறது அடங்குமின்னு அந்தப் பிள்ளய கூட்டிப்போயி சேட்டந் தனியாப் பேச்சிக் குடுத்தான். அதுவும் நாயம் மேல நாயம் போட்டதாட்மிருக்குது. ஒண்ணும் வேலைக்காவல வந்ததும்
“ஏண்டா ஒரு பொட்டப்புள்ள பாவத்த கையேந்தற”ன்னு மணிப்பையஞ் செவுனியக்கட்டி வுட்டாம் பொலிச்சின்னு ஒரு அர
“வராத நாய ஏங்கவுறு போட்டு இழுக்கணும்? வாண்டான்னா இவன வுட்ருங்க. பிரியமில்லாம அந்தப்பிள்ளய இவனுக்கு நாம்ப கட்டி வெச்சா மறுக்க திருட்டு நாயி எங்கியாச்சும் ஓட்டம் புடிச்சி வுட்டுட்டான்னா அந்தப்பிள்ள பொழப்பு பாழாப் போயிரும். நிச்சியத்தோட கண்ணாலத்த நிறுத்திப்புடுங்க. இந்தாம்மா பொண்ணு! பெரியவிங்க கோவந் தாழட்டும். அப்பறம் ஒரு நல்ல நாளாப்பாத்து கண்ணாலங் கார்த்திய வெச்சிக்கலாம் நீப்போயி தாயோடப் புள்ளயாச் சேரு. கொஞ்சம் வுட்டுப்புடி ஆயா மவராசி!” ன்னு ஆளாளுக்கு பித்தி சொல்லிப்புட்டு மணிப்பையனக் கொண்டி அந்தப்பிள்ளய பஸ்சு வெச்சுட்டுட்டு வரச்சொன்னம். போனவம் போனவனே! வவு நேரமாவியும் பையன் வரவேயில்ல.பையனும் பிள்ளயும் எங்கியாச்சும் எஸ்சு ஆயிட்டாங்களா என்னமோன்னு திலுப்பி அவனத் தேடிகிட்டு ரெண்டுபேரும் பைட்டேண்டுக்கு வந்தா டாப்பிங்குக்கு மின்ன ஒருக்கட்யா மரத்தடிய ரெண்டுங்களும் அழுத கண்ணும் சிந்துன மூக்குமா நிக்குதுங்க. ஆனமுட்டும் அவிங்களக்கு தேறுதலச் சொல்லி புள்ளய பஸ்சு ஏத்தி வுட வந்தமா, ஏப்பா அந்நேரம் ஒரு போலிசு வேனு எங்களத் தாண்டிப்புட்டு மேக்க புர்ர்ருன்னு பறந்து போனது, போன வெசயில திலும்பி கெழக்க வருதே! வண்டியில குந்தியிருந்த சர்க்கிளும் ஏட்டும் என்னா ஏதுன்னு நெதானிக்கிறதுக்கில்லாம, ஏறுங்கடா வண்டியில, ஏறுங்கடா வண்டியிலன்னு குண்டாந்தடியில முட்டி முட்டியா குடுக்கறாங்களே பெட்டு!
ஆன்னு வாயத்தொறக்க வுடல மவராசனுங்க. வண்டி நூறுல டேசனுக்குப் பறக்குது. அட வெட்டுப்பழி குத்துப்பழியின்னாக்கூட இத்தன கெடுபுடி இருக்காதேர எனத்துக்குடா இவுனுங்க மல்லுக்கூட்டி நாலுப்பேத்தயும் டேசனுக்கு கொண்டு போறாங்கன்னு ஒண்ணும் பிருவே சிக்கல.
அட அங்கப்போயி எறங்கனமா... வாரவம் போறவனெல்லாம் தாட்டுப்பூட்டுன்னு குதிக்கறான். ஐயா வரட்டும் ஒரு கேசு எழுதறங்கறான். அந்தப்பிள்ளய ஒருத்தரு மாத்தி ஒருத்தரு மொறச்ச் பாக்கறதும், மணிப்பையனுக்கு ஒரு ஈடு வைக்கிறதும், காரித்துப்பாத கொறயா எங்களப் பேசறுதுமாவே இருக்கறாங்க.
அவிங்கக்கிட்ட வாயத்தொறந்து பேச முடியல எதச்சொன்னாலும் அந்த கொலகாரப் பாவிங்க நம்பல. அடவொரு போலிச்சிக்காரன் வந்ததும் அந்தப்பிள்ளய “ஏண்டிப் பொம்பள உனக்கு எவ்ள ஏத்தமிருந்தா பொச்சிக்கடியில டேசன வெச்சிக்கிட்டு, நட்ட நடு பசாருல ரேட்டு பேசுவ? உனக்கெல்லாங் கொலுவ காய வச்சி சொறுவனாத்தாண்டி அடங்குவ”ன்னாம் பாத்துக்க அப்பத்தான் எனக்கு.
ஓஹோ இந்த மாமாப்பசங்க ஆளு நெலவரந் தெரியாம அத்தாந்தாரமா நம்ப நாலுப்பேத்த பிராத்தலு கேசுன்னு புடிச்சாந்துட்டாங்கடான்னு, ரெவலா நெப்புப்பட்டது. அட ஆண்டவனே சென்றாயா நாம்ப நெனச்சி வந்தது என்னா? இங்க நடக்கற காரியம் என்னா?ஆசுபத்திரியில பொண்டாட்டிக்காரிய தன்னப்பாலவுட்டுட்டு நம்பளுக்கு எனத்துக்கு இந்த வேல? அவக்காதுக்கு இதுபோனா என்னா நெனைப்பா? அட அவிங்கம்மாக்காரிதான் என்னாச் சொல்லுவா? நெனைக்க நெனைக்க எனக்குன்னா அப்பிடியே நெரிஞ்சி முள்ளு மேல நிக்கற மாதிரி இருக்குது.
என்னு ஆயுசுக்கும் நானு ரெண்டே ரெண்டு தக்கந்ததான் டேசனு படி ஏறியிருக்கறன்.
எங்கவூடு, குண்டியாமூடு, கங்காணியூடு மூணு வூடும் ஒட்டுச்செவுரு. அந்தக்காலத்துல ஒரூட்டுப் பங்காளிங்க அண்ணந்தம்பி மூணு பேரும் சேந்து ஒட்டா வூடு கட்டியிருந்துருக்கறாங்க. இதுல கங்காணியூடு மட்லுந்தான் ஆதிரியிலிருந்து குடியிருக்கறவங்க. நாங்களுங் குண்டியானும் அவரவுரு வெலக்குடுத்து வாங்கனது.
வூட்ட வெல பேசயில அதும்பேர்ல எதனாச்சும் வில்லங்கம் இருக்குதான்னு அவனுங் கண்டுக்கல, நாங்களுங் கண்டுக்கல. இருந்திருந்தாப்பிடி ஒருநாளு வந்து என்னூட்டு முட்டும் அத்துப் பிரிச்சி கூரையடி ரெண்டு அடி நெலம் உடுன்னா நடுவூட்ட இடிச்சிப்புட்டு நாங்க என்னாப் பண்றது?
இந்தக குண்டியான்ன...
சலதாரய அடைக்கிறான். தட வழியில விவசாய முள்ள வெட்டிப் போடாறான். ஆம்பளைங்க வூட்ல இல்லையின்னா பொம்பளைங்கள ஆயா, அம்மான்னு பேசறான். என்றாப் பண்றது? என்னிக்கி இருந்தாலுந் தலவலி தலவலிதாண்டா புள்ள இல்லாதவங்கிட்ட எனத்துக்குடா ஓரியாட்டம் தொலைஞ்சி போவுட்டும்! அவனுக்கு ரெண்டடி நெலம் வுட்டுத்தொலையிங்கடான்னு ங்கண்ணங்காரஞ் சொன்னதும் ச்சேரின்னு நாங்களும் ஒத்துக்கிட்டம். அந்த எட்டுல என்ற தங்கச் சிக்கி வேற கங்கணப்பொருத்தம் கூடிக்கிச்சி. சேரி கண்ணாலம் முடிஞ்சப்பொறவு வூட்ட இடிக்கலாமின்னு குண்டியாங்கிட்ட வாய்தா கேட்டம். அவனுஞ் செரியின்னுதாஞ் சொன்னான். அட ஆரு அவனுக்குச் சொல்லிக் குடுத்தாங்களோ, என்னாச் சமாச்சாரமோ ஏப்பா மாப்ள திடீருனு குறுக்கத் திலும்பிக்கிட்டாம்பா.ஒரு நாளு எங்க தாயி தண்ணி வாத்துக்கிட்டு இருக்க, குண்டியாங் குடிச் சிப்புட்டு வந்து போதையில ஏப்பா நல்லா இத்தாச்சோட்டு கருங்கல்ல பொடக்காலியில்ல தூக்கி போடறதா? எம் பொறந்தவ வீறுவீறுன்னு கத்தி பப்பார, அடுப்படியிலிருந்த எங்கூட்டுக்காரி ஓடி,
“ஏண்டா குடிகாரா, இப்டி கல்லெடுத்து எய்யற? படாத எடத்துல பட்ருந்தா வயசிப்பிள்ள கதி எனத்துக்காவறது? எதுக்குடா அக்குறும்புல அழியற”ன்னு கேட்டதுதாம் மாயம்...
ஏப்பா ஆசாரியூட்டு கரக்கட்டுல இருந்து கருங்கல்லு ச்சும்மா விர் விர்ருன்னு பறக்குதாம்.
பொம்பளைங்க விரும்புத்தி புடிச்சாப்ல நின்ன வாக்குல நிக்க, ஒருக்கல்லு எங்கம்மா பாதத்துல வுழுந்து நச்சிப்புடிச்சி. ராவு டூட்டிக்குப் போயிட்டு வந்து தூங்கிட்டிருந்தவன் என்றா ரவுசாவுதேன்னு அதற பதற எந்திரிச்சோடிப்பாத்தாங் கெம்மா காலடியில நத்தமா போவுது. எங்கயிருந்து வந்ததோ அத்தன வெறி, போன வெசயில குண்டியான கீழத்தள்ளி மிதி மிதின்னு மிதிச்சம்ப்பா.
அவ்வளவுதாங் குண்டியான் ஓடனதும் அவம் பங்காளி பொன்னுச்சாமி வாத்தியாரு மவன் செலுவராசயும், குட்டப்படி ரத்தனம் பிருசங்கிட்டுப்பைனையுங் கூட்டிக்கிட்டுப் போயி நங்கோலி டேசன்ல கேசு குடுத்துட்டான். அதோட வுட்டாங்களா? ஊடுநம்ப கல்லெடுத்து இட்டவன ஒருத்தேவிடியாப் பையனும் ஏஅ என்னான்னு கேக்கல.
ஒண்டி குடியா ஊரவுட்டுப் ஊரு பஞ்சம் பொழைக்க வந்தவிங்க எப்டிறா எங்க ஆள கை தீண்டலாமின்னு நாயம் வேற வெச்சிட்டாங்க. ஒன்ற மாசமா டேசனுக்கு இழுக்கடிச்சி உருவா மூவாயிரத்த வாங்கித் தின்னு வழிச்சி நக்கனப் பொறவு பிரச்சன முடிஞ்சது.
ரெண்டாவது தக்கம், எம்பொறந்தவ கண்ணாலத்துக்கு பதனஞ்சி நாளுக்கு மின்ன நங்கோலி கோவாலு வாத்தியாரூட்டு அச்சாபீஸ்ல பத்திரிக்க அடிக்கக் குடுத்துருந்தம். ஒருநாபொழுது முச்சூடும் குந்த வெச்சிட்டிருந்துட்டு அந்தியோடத்தான் அடிச்சிக் குடுத்தாங்க. அத வாங்கி வலப்பையில வெச்சிகிட்டு சந்தப்பேட்ட திலுப்பத்துல நானு பஸ்சுக்கு நின்னுக்கிட்டிருந்தன். அன்னிக்கிங்கறப்பெட்டுக்கு கரட்டிப்பட்டிக்காரன் எவனோவொரு நாதேரி கொள்ளிச்சட்டி கச்சிக்காரனாம். சேலம் சீலநாக்கம்பட்டி பைபாஸ்ல லாரி மோதி செத்துப்போயிட்டானாம். போனவன் அவம்பொச்சி மண்ணோடப் போயிட்டான். இங்க ஊரேப் பூராந்தெரண்டு பைட்டேண்டு முக்குல அவம்போட்டா படத்த வெச்சி பூசப்பண்டிக்கிட்டு போற வார காரு வண்டிங்கள நிறுத்தி, பிட்டு நோட்டீசு ஒட்டிக்கிட்டு ஒரே அமர்க்களம், அட்டகாச்ம், அக்கப்போர எடுக்க முடியல.
ஒரு ஆறுமணி சுமாருக்கு அவத்திக்கி சலண்டபுரம் நரசிம்மன் டாக்கிட்ரு மேட்டூரு போவ வந்தாரே இல்ல, மேச்சேரி போவ வந்தாரோ தெரில. காரு போட்டுக்கிட்டு வந்துக்கிட்டிருந்தாரு.
எங்க தம்பி லோகனுக்கு கூத ஆப்பரேசன் அவரிண்டதாஞ் செஞ்சம். போவ வர பழக்கம். நல்ல மனுசன். இல்லாதவங்களக் கண்டா எளவுற பித்தி. இந்தக கொலவாரிங்க கையக்காட்டி ப்ளசர நிறுத்தம்பிடி அவரு கட கன்னியத்தாட்டி அந்தால்ல பத்தடி தள்ளிப்போயி நிறுத்தனாரு.
அதுதாம்ப்பா காரணம் வேற ஒண்ணுமில்ல. பிளுபிளுன்னு பத்து பதினஞ்சி டிக்கிட்டுங்க ஓடி உள்றயிருந்த மனுசன வெளிய இழுத்துப் போட்டுக் குப்பு குப்புன்னு குப்பறாங்கப்பா. பக்கத்துல இருந்த போலிசுக்காரனுங்க அவிங்கள வேண்டான்னுந் தடுக்கல வெலக்கியும் வுடல. நின்னுக்கிட்டு மனசார அநியாயத்த வேடிக்கப்பாக்கறானுங்களே, நானு ஓடிப்போயி.
அடேய், சாமி சாமியா இருப்பீங்களாம். அவரு கெவுருமெண்டு டாக்கிட்ருடா, வுட்ருங்கடா, வுட்ருங்கடான்னு தொண்டத்தண்ணி வத்த முட்டுங் கத்றன். என்னயத் தூக்கி கொடிக்கம்பத்தடிய போட்டுட்டானுங்க. நரசிம்மனும் சாதாரண ஆளு இல்ல. நல்லக்கண்ணு ஒருக்கோடியா ராமதாசி மவன் அம்புமணி முட்டும் போனு போட்டு பேசறாரு.அங்கப்பேசி இங்கப்பேசி எங்கியெங்கியோப் பேசி கடைசியில எஸ்.பி.முத்துமாணிக்கத்துக்கு போனுப்போயி, அவரு அங்கயிருந்த போலிசிகாரனக் கூப்புட்டு என்னய்யா கலாட்டுன்னு கேட்டா,அடிமேல அடிவாங்கி ஒதடு பிஞ்சி நத்தம் ஒவமலக்கல்லாட்டம் ஒரு மனுசன் நின்னுக்கிட்டு இருக்க, ஒண்ணும்மே நடக்கலங்கறானே அந்த சண்டாளன். அயோக்கியப் பசங்கள சாமானியத்துல வுடக்கூடாதுன்னு போயி டேசன்ல பேசு எழுதிக் கொடுத்துட்டு வந்தம் மனுசனுக்கு பல்லு போயி பவுடுஒடஞ்சி கடவாயி கிழிஞ்சதுதாம் மிச்சம்.
மத்தியானம் மணி ஒண்ணுக்குப் போனவிங்க நின்னு சலிச்சிருக்க, ஊரு பாராவுக்கு போயிருந்த இனிசுபெட்டரும் இன்னும் நாலஞ்சி போலிசிக்காரனங்களும் இருட்டுக்கட்ட வந்தாங்க. அதுல ஒரு போலிசிக்காரன் மணிப்பையனுக்கு தெரிஞ்சவனாம்.
உள்ளத ஒண்ணுவுடாம அவங்கிட்டச் சொன்னம். அவம்போயி இனிசுபெட்டருக்கிட்ட என்னாப்பேசனானோ, மணியவிக அம்மாளையும், அப்பனையும், சித்தப்பங்காரனையும் வரச் சொல்லி, இதுதாஞ் சங்கதின்னு எழுதிக்குடுத்தப் பொறவு, மணியோட இஷ்ட்டக்காரிய ஓராளு அவங்க ஊர்ல வுட்டுட்டு அந்தூரு போலிசு டேசன்ல ஒப்பம் வாங்கியாரச் சொன்னாங்க. இந்த மட்டுஞ் சொன்னதே போதுண்டாஞ் சாமின்னு மணிப்பையன் அவிங்கம்மாளையும் அப்பனையும் அந்தப்பிள்ளயோட கருநாடகாவுக்கு போவ தாட்டிவுட்டுட்டு நானும், சேட்டனும், மணியும் பழைய பைட்டேண்டு வந்தம். எனக்குன்னா ஆத்ரம் அடங்கல.
“ஏங்க என்னாதாங் கெவுருமெண்டு உத்தியோகமின்னாலும் போலிசிக்காரனுங்களுக்கு இத்தன அகராதி ஆவாதுங்க. எதனாச்சும் மக்க மனசருன்னு ஒரு மரியாதி வெச்சி பாக்கறானுங்களா? ஒரு நாயம் நெகாருன்னு தீர்மானமா தெரிஞ்சி பேசறானுங்களா? ஒண்ணுமில்லாத பழமைக்கே இப்டி பங்கம் பண்டிப்புட்டாங்களே. பொறவு போலிசிக்காரன சனம் சாபிக்குதுன்னா ஏஞ்சாபிக்காது”ன்னு நானுப்பேச, அந்தப் போலிசி.
“நூத்துல ஒரு வார்த்தைங்க நீங்க சொல்றது. ஆனா மணிக்கேசுல நானாயிருந்தாலும் அப்பிடித்தாஞ் செஞ்சிருப்பன்”ங்கறான்.“என்னாங்க கேசு கேசுன்னு சும்மா மெரட்டறீங்க? எதுக்கு கேசு போடறதுன்னு வேண்டாம். கூட நாங்கயிருக்க அவனொரு தப்பு தண்டாவும் பண்டலீங்களே”ன்னு நானு வசூலுக்கு பேச.
“இப்ப பண்டலீங்க, போன மாசம் எட்டாந் தேதி ஏற்காட்டு ஓட்டல்ல வெச்சி இவனையும் அந்த பிள்ளயையும் பலான கேசுல புடிச்சாங்க. தந்தி பேப்பர்ல எல்லாம் போட்டு நாறிச்சே நீங்க பாக்கலீங்களா? மறுபிடி இங்க வந்து அந்த வேலய ஆரம்பிச்சிட்டாங்களோ என்னமோன்னு சந்தேவப்பட்டுத்தான் உங்களையுஞ்சேத்தி புடிச்சாந்துட்டாங்களாட்டமிருக்குது”ன்னு அவஞ் சொல்ல
எனக்குன்னா குப்புன்னு மேலெல்லாம் வேர்த்துப்போச்சி. ஒட்டிக்கிட்டிருந்த வண்டிய நிப்பாட்டி சேட்டன். “எறங்குடா ங்கோயா”ன்னு மணிப்பையங் காதக்கட்டி அப்பனாம் பாரு ஒரு அப்பு ஏழு சென்மத்துக்கும் இன்னும் நாலு ஈடு வெச்சான். பின்ன என்னாப் பின்ன? இத்தன கோளாறும் இவனக்கொண்டு நடந்துருக்குது.
நாம்ப பண்ணாத குத்தம் பண்டானாப்ல அஞ்சு உருசும் பதற பதற டேசன்ல நிக்க, ஒரே வொரு வார்த்தச் சொல்லாம புடிக்காம இவனும் ஒண்ணுந்தெரியாத சின்னக் கண்ணனாட்டம் குட்டு வுடாம நமப்ளோடயே நின்னுக்கிட்டு இருந்துப்புட்டானே படவா! இவன் ஆரு தலய திங்க மாட்டான்?
நடு ரோட்ல அவன வுட்டடிச்சிப்புட்டு நானும் மலையாளத்தானும் ராவு ஆசுபத்திரிக்கி வந்தம். கண்டதும் என்னய கட்டிப்புடிச்சிக்கிட்டு எங்கூட்டுக்காரி, சீத்துப்பூத்துன்னு அழுதா வவுறு எறங்கிப்போச்சாம், பாவம் ம்... நானு கோவணம் அவுத்த நேரஞ் செரியில்ல.

கருத்துகள் இல்லை: