புதன், 13 ஏப்ரல், 2011

தாய்க்கி பிள்ளையேதடாதண்ணி கெணத்துக்கு முறைமையேதடா சாரங்கதாரா!கூத்துக்கலைஞர் கொத்தாபாளையம் குருநாத வாத்தியார் குறித்தொரு பதிவு.

சேலம் மாவட்டத்தில் பூரல்கோட்டை கருப்புசெட்டி என்றால் அழுதபிள்ளை வாய் மூடும்.வன்னிய சமூகத்தில் மாத்திரமல்ல,மற்ற இடைச்சாதியினர் மத்தியில் மேலதிக செல்வாக்கும், ஆதிக்கமும் பெற்றிருந்தவர்.கோனூர் பஞ்சாயத்தில் ஒரு குட்டி ராசாவாக கோலோச்சி வந்த அவர் வெள்ளைப் புரவி ஏறி ஊர் பவனி வருகையில் கைச்சொடுக்கும் சாட்டையொலி மக்களுக்கு அசீரிரி!.உதிர்க்குஞ் சொல் வேதவாக்கு!. மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் நிர்வாகப் பாத்தியதை சம்மந்தமாக நடைப்பெற்ற வழக்கொன்றில் அந்த ரணபத்ரகாளியே வந்து இவர்பட்சமாக சாட்சி சொன்னதாக பெருங்கதையாடல்கள் இங்குண்டு. மனிதனின் எச்சிப்பால் குடித்து வளர்ந்தது தான் சாதியென்றாலும் அதனின்று இப்பூலகில் ஜனித்தவன் அவன் எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருக்கட்டுமே! தப்பித்தல் அரிது.இதற்கு கருப்பு செட்டியும் விதி விலக்கல்ல!( பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் பெரிதல்லவா?) பூரல்கோட்டையில் பிறக்கப்பட்ட பறையன், சக்கிலி, குறவன் (அவர்கள் சின்னச்சாதிகள் என்றே இட்டு வழங்கப்படுகிறார்கள்)மட்டுமல்ல உடுத்தியிருக்கும் இடுப்புவேட்டி, கால்செருப்பு ,தலைமுண்டாசு,மொட்டைக் கோமணம் முதற்கொண்டு அவர் ஆக்கிணையை சிரமேற்கொண்டொழுக வேண்டும். அன்றேல் மண்மேல் மனுசன் சீவிப்பது யதேஷ்டம்!இப்படியாகத்தானே கருப்புசெட்டியின் ராஜ்யபரிபாலனத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டி வேடமாரியம்மன் கோவிலில் சோமாரக்கிழமை ஊர் பெருந்தனக்காரர்கள் கெவுளி வாக்கு கேட்டுச் சொல்ல, இறங்கு பொழுதில் அன்றைக்கெல்லாம் ஒருசிந்தியிருந்த ஊர்தோட்டி வட்டப்பாறையில் நின்று நோம்பிச்சாட்டை துடும்படித்து அறிக்கைச் செய்தால் சுற்றியுள்ள ஆண்டிக்கரை, தானம்பட்டி,மேட்டுத்தானம்பட்டி, கந்தனூர், சாவடியூர்,குள்ளமுடையானூர்,நரியனூர்,மல்லிகுந்தம், பூரல்கோட்டை,காலாண்டியூர், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பதினெட்டு கிராமங்களில் உள்ள மாரியம்மனுக்கு அந்தந்த ஊருக்குண்டான வழமொறை,வாமூல் என்னென்னவோ அந்தப்படியே நோம்பி சாட்டிவிடுவார்கள். இந்தப்பிரகாரமாகத்தானே பூரல்கோட்டை மாரியம்மனுக்கு காதறுத்து* ,கம்பம் நட்டு*, கம்பளிக்கூத்தாடிச்* சாட்டிய பதினைந்து நாள் சாட்டுக்கு அன்றாடம் பனிரெண்டு வகை தாளத்திற்கு சாரிக்கு எவ்வேழுப்பேர், பதினாறு சாரியாக நின்று இளவட்டங்கள் ஆடும் மாரியாத்தா ஆட்டத்தில்(சேவாட்டம்) ஊரே அல்லோகலப்பட்டுக்கொண்டிருந்தது. பதிமூன்றாம் நாள் திங்கள் அம்மன் அழைப்பு, பதினான்காம் நாள் செவ்வாய் இராவிளக்கு, கடைசிநாள் புதன் பகல் விளக்கு, அந்தியில் அலகு குத்து,பூங்கரகம், அக்னி கரகத்தோடு வண்டிவேசம், குதிரை வேசம்,நரி வேசம், வாணவேடிக்கை என்று இந்த அமர்க்களம் போதாதென்று குருநாதவாத்தியாருக்கும் வெற்றிலைப்பாக்கு கொடுத்திருந்தார்கள் கூத்தாட. மூணேகால் உரூவா ஒத்திக்கு காந்த விளக்கை கொண்டுவரும் சேலத்துக்காரன் இன்னும் வந்துசேர்ந்திருக்கவில்லை. பார்க்கின்றவரைக்கும் பார்த்துவிட்டு கொடுவாள்முனையில் மேட்டூர் பழம் மல்லை சுற்றி பந்தம் முடைந்து சீமெண்ணையில் நனைத்து பற்ற வைத்து அதையிருவர் வாகாக பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர். அதிகாலையிலிருந்து அந்திவரை குடித்த ஒருமரக்கள்ளுக்கும் செலவுச்சாமான்கள் ஏதுமின்றி வெறும்குறுமிளகிட்டுப் பிரட்டிய வெள்ளாட்டுக்கறிக்கும் அமைந்த தோதில், இன்னும் துளி, இன்னும் துளியென ஒரம்பரை சரம்பரைகளை உற்றார் உறவினர் வஞ்சனையின்றி உபசரிக்க, அதில் நெகிழ்ந்து போய் நாலுவாய்ச்சோற்றினை எச்சாக உண்ட மயக்கத்தில் சனம் ஒருவிதமான கிறக்கத்துடனேதான் கூத்துப்பார்க்க காத்திருந்தார்கள்.பூசைப் போட்டாயிற்று, பொட்டி மத்தளத்தை வெளியே எடுத்து வைத்தாயிற்று, களரிக்கூட்டி கூத்தும் துவக்கமாயிற்று. பாத்திரங்களை பங்கு வைத்துப் பிரித்துக் கொடுத்தப்பின்பு வரிசைக்கூத்தாகயிருந்தால் குருநாதவாத்தியார் வேசங்கட்ட உக்காருவதற்கு முன்பு காற்றாட சற்றெங்காவது ஒதுக்குப்புறமாக துண்டை விரித்து கண் அயர்வது வழக்கம்.முந்தி தோன்றிய கோமாளி வேடதாரியும் உடன் தர்பாரான தலை வேடதாரியும் துருவதாளத்தில் ஆடிக்கொண்டிருக்க சபை அந்த ஆட்டத்தில் மெய்ம்மறந்து அமர்ந்திருந்தது. கூத்தாடிகளுக்கு ஆக்கிப்போடவா நான் தாலிக்கட்டி நீரு வைத்துக்கொண்டேன் என பெண்டாட்டிக்காரி பிணங்கிக்கொண்டுவிட்டதால் வந்திருந்த ஆட்டக்காரர்களை வீட்டிற்கு ஒருவராக சோத்துக்கு அனுப்பியதில் பந்தி விசாரிக்க முடியாமல் போயிற்று.அதும்போக ஊர் முகாமியாக தானிருக்க, உள்ளூரில் விசேசம் நடந்துக்கொண்டிருக்க கூத்தாடிகளுக்கு ஒரு நாலணாவோ, எட்டணாவோ எனாங்கொடுக்காமல், ஒரு வெற்றிலைப்பாக்கு பொகையிலை நறுக்கு வாங்கிக்கொடுக்காமல், கொட்டாங்குச்சியில் வார்த்துக்கொடுக்கும் டீத்தண்ணியோ, ஒரு சுக்குத்தண்ணியோ ஏற்பாடு பண்டாமல் இருந்துவிட்டால் இதுகாறும் செய்து வந்த பண்ணாட்டுத்தனத்திற்கு அதனாலொரு பின்னம் நேர்ந்துவிட்டால் எதைக்கொண்டு அதனை ஈடுக்கட்டுவது? கவுண்டா கவுண்டான்னா ஓய்ங்கிறான்! ஒராளுக்கு சோறுடான்னா ஊகூங்கறாண்டா இந்தூரு கவுண்டன்! என்று மணியக்காரர் வீட்டில் கை நனைத்துவிட்டு வருகையில் ஏவிடியம் பேசிய எடக்கு பிடித்த கூத்தாடியொருவன் அதை எத்தனை ஊரில் போய்ச்சொல்லுவானோ! என்ற விசனமும் சேர்ந்துகொள்ள, எதற்கும் ஓருப்பூட்டு எட்டி பார்த்துவிட்டு போகலாமென்ற கட்டாசாரத்தில் ஊர் மந்தைக்கு அவர் தனது சாரட்டுவண்டியை திருப்ப விளைந்தது வம்பு! முக்கியஸ்தர் உக்காருவதற்கென்று தருவிக்கப்பட்ட நாற்காலியில் தன் சரீகலத்தை ஓய்வாக சாய்த்திருக்க ஒருகணமுமவருக்கு இருப்புக்கொள்ளவில்லை. பத்துத்தலை ராவணேசன் கொலுவில் பதிக்கெட்ட குரங்கு வால்கோட்டையிட்டு அமர்ந்தாற்போல ஒண்ணானப்பட்ட பண்ணாடி தன் எதிரே மத்தளமடித்த பறையனும்,குழலூதிய பறையனும் பெஞ்சுப்போட்டு குந்தியிருப்பதா? காண மனம் ஒப்புமா? அண்ணாருக்கு கோபம் வந்து கண்கள் சிவந்தால் அடிப்பொடிகள் சும்மாயிருப்பார்களா? "ஆரடா கூத்தாடி? எவண்டா வாத்தியாரு? ஊளச்சாதி கழுதைங்களா! ஒங்க பொச்சிக்கெட்டக் கேட்டுக்கு அட்டாலிக் கேக்குதா? மண்ணுல குந்தி மத்தாளமடிக்கிறதுன்னாதாங் கூத்தாடும்! இல்ல தல தனியா முண்டந்தனியா கெடக்கும்!" என்று மிரட்ட மத்தாளக்காரர் பள்ளிப்பட்டி பெருமாளும், குழல்காரர் வேலாயுதமும், பெட்டிக்காரரோடு மூவரும் விரித்துப்போட்ட கோணிப்பைமேல் சத்தமில்லாமல் உட்கார்ந்து வாசிக்கலாயினர். இந்த அமளி துமளியில் தூக்கம் கெட்ட குருநாதன் முழித்தெழுந்தார். விசயம் தெரிந்தது, வேறுப் பேசவில்லை. மானம் மருவாதி கெட்டு கூத்தாடமாட்டேன்! என்று கூத்தை நிறுத்தி விட்டார். வந்தது சண்டை! கூடியது பஞ்சாயத்து! கண்டால் கையெடுக்கும்படி விதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவனின் குரல் கேட்க நாதியற்று காற்றில் கரைந்துப் போனது. தளரவில்லை குருநாதன்," சாமி நீங்க படியளக்கற பரமேஸ்பரனா இருக்கலாம்! பதனெட்டுப்பட்டிக்கி ராஜனா இருக்கலாம்! பெரிய்ய நாயாதிபதியா இருக்கலாம்! நீங்க தொட்டு இழுத்தாதான் மேச்சேரித்தேரு மறு அடி நகருங்கறது உம்மயாக்கூட இருக்கலாம்! அது பத்துப்பேரா ஒத்துக்கிட்ட சங்கதி! அதுல உங்களுக்கு பவுருண்டு! பங்கு பாத்தியமுண்டு! அவுத்த உங்க பேச்சி செல்லும்! கூத்து உங்களுக்கு தெரியாத பொருளு! அங்க என்னய படைச்ச பிரம்மாப் பேச்சின்னாக்கூட நானு வெச்சிக்கமாட்டன்! ஜதியும் சுதியும் புருசம் பொண்டாட்டி மாதர! புருசங் கட்லு மேலயும், பொண்டாட்டி பாயி மேலயும் படுத்திருந்தா சம்சாரம் நெறக்குமா?நானு நின்னுக்கிட்டுப் பாடி அவிங்க ஒக்காந்தி அடிச்சா மேளக்கட்டு நல்லாயிருக்குமா? ஆஞ்சியோஞ்சிப் பாக்காட்டி நாயஞ்செத்துப்போவுங்க! நேந்து நெரவுங்க செத்த!" என்க, அவருதவிக்கு எழுந்து நின்ற சனத்திரளைக்கண்டு கருப்புச்செட்டியாரும் தணிந்து நிதானித்து," டேய் இவனென்றா தெரிஞ்சப்பொருளு, தெரியாதப்பொருளுன்னு புது நாயம் போடறான்? ஒண்ணும் பிருவாத் தெரியிலியே! கூப்புடுறா வாயாடிப்பூசேரிய! வாக்கு கேட்டு அவஞ் சொல்ற மாதரச் செய்வம்." என்றுமருளாடியை அழைத்து சாமி வருந்தினர். உடனே அம்மன் பிரசண்டமாகி பூசாரி மீதிறங்கி,"எளச்சவிங்கன்னு எளக்காரமா நெனைக்காதீங்கடா! அவிங்களும் எம்மக்கமாருதாண்டா! ஒசக்க ஒக்காந்தி அடிக்கச் சொல்றா!" என்று தீர்க்கபிரச்சனை முடிவுக்கு வந்து அந்த இரவு மட்டுமல்ல, தொடர்ந்து அந்த வட்ட வாகறையில் ஏழு ராத்திரி கூத்தாடினாராம்!. கலைஞனுக்கு தன் சுயத்தை விட்டுக்கொடுக்காத மன உறுதி வேண்டும். குருநாதன் கலைஞர் மாத்திரமல்ல நல்ல மனிதரும் கூட.எடப்பாடி தாதாபுரம் காட்டுவளவைச் சேர்ந்த குருநாதனுக்கு உடன்பிறந்தோர் ஐந்துபேர். மூன்று தமையன்கள், இரண்டு தமக்கைகள்.தந்தை வீரய்யனுக்கும்,தாயார் பாவாயிக்கும் செல்லப்பிள்ளையாக வளர்ந்த குருநாதனின் பால்யகாலம் சேட்டைகளும், வாய்த்துடுக்கும், விளையாட்டுப் புத்தியும் நிரம்பியதாக இருந்ததினால் திண்ணைப்பள்ளிக்கூடமும் அங்கிருந்த முரட்டு வாத்தியாரும் அவருக்கு வேப்பங்காயாய் கசந்துப் போனதில் வியப்பேதுமில்லை.பிறகு தன் மாமன் மகனுடன் சேர்ந்து அரிச்சுவடிகளை தானே வாங்கிப் படித்துக்கொண்டு வந்தவருக்கு அதன் நீட்சியாக பிற்காலத்தில் கூத்துப்பிரதிகளை படைக்கும் அளவிற்கு அந்த கனமுள்ள வாசிப்பனுபவம் கைக்கொடுத்திருக்கிறது. பள்ளி நிழல்தானுறியாத தன் மகன் எண்ணற எழுத்தற துருசாகப் படிப்பதை பார்த்த தந்தையாருக்கு ஓரெட்டில் சந்தேகம் மண்டி பையனுக்கு பைத்தியமென்று ஊரெல்லாம் தூற்றிவிட, சொந்தக்கார பெரியவர்கள் இருவர் குருநாதனை சோதித்து அப்பாமர தகப்பனின் ஐயம் போக்கியுள்ளனர். தாதாபுரம் கரட்டுப்பெருமாள் கோயிலுக்கு செலவடை கொன்னவாயன்* அவர்கள் வந்து அலங்காரம் வரிக்க லைட்டு கம்பத்தடியிலிருந்து அதைப்பார்த்தவருக்கு கூத்தின் மேல் ஆர்வம் பிறந்திருக்கிறது. பிறகென்ன எந்த ஊரில் கூத்தென்றாலும் கிழடு கிண்டுகளோடுஅரையில் மொட்டக்கோவணம்,தோளில் மேல் சுண்டு சகிதமாக, நடைத்துணையாகச் செல்லும் வாத்தியாரையும் முதல் ஆளாக அங்கேப் பார்த்துக்கொள்ளலாம். கண்டதை காலாடிப்பார்க்க, காதால் கேட்டதை வாய்ப்பாட ஆடு மாடு மேய்க்குமிடமெல்லாம் குருநாதனுக்கு கூத்தாடும் சபையாகிப்போனது. ஆசை பித்தாகி ஆட்டுவிக்க, உள்ளூரில் குடியிருந்த பழைய கூத்தாடி பொன்னான் வாத்தியாரிடம் இவர் வேண்டியதற்கிணங்க, அவராடிய துரோபதை துயில் கூத்தில் முதன்முறையாக அர்ச்சுனன் வேடங்கிட்ட, கரட்டுப்பெருமாள் முன்னிலையில் குருநாதனவர்களினுடைய அரங்கேற்றம் நடந்தேறியிருக்கிறது.பின்தொடர்ந்த நாட்களில் சொந்தமுயற்சியில் தன் வயதொத்த சகாக்களுடன் சத்தியவதிக் கல்யாணம், கிருஷ்ணன் பிறப்பு,போகவதி கல்யாணம் போன்ற கூத்துக்களைப் பயின்று நிகழ்த்தி வந்தவருக்கு பதினாறு வயதில் மேச்சேரி சடையன் வாத்தியாரின் பாஞ்சாலக் குறவஞ்சி கூத்தைப் பார்த்தப் பிற்ப்பாடு ஓர் திருப்பம்! அதில் சடையன் புனைந்த குறத்தி வேடத்தாக்கத்தில் தானும் சிலவருடங்கள் பெருங்கொண்ட பெண் வேடங்களை விரும்பியேற்று அவைத்தோறுந் துலங்கி கோரிய வாலிபத்தில் மூண்ட இருபது வயதிலெல்லாம் தக்கப்படியான கூத்தாடி என்று பேர் எடுத்து விளங்கியிருக்கிறார். அன்று தொட்டு இன்று வரை அறுபதாண்டு காலங்களுக்கு மேலாகியும் இக்கலைச்சங்கின் சங்கநாதம் ஓயாது தொனித்தபடியேயிருக்கிறது. எனது விடலைபருவத்தில்தான் வாத்தியாரின் கூத்தைப் பார்க்க வாய்த்தது. அப்பொழுது எனக்கு பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கும். ஏர்வாடியிலிருந்து மாதநாயக்கன்பட்டிக்கு விருந்தாடப் போயிருந்தோம். காது குத்து- கல்யாணம், நோம்பி- நொடி,வீட்டுச்சாமி- காட்டுச்சாமி,தேரு-தெவம் என்று வந்துவிட்டால் மேச்சேரி பகுதிகளில் ஒரம்பரை அழைப்பு என்றவோர் சம்பிரதாயம் இன்றளவும் உண்டு. விருந்துக்கு கூப்பிடுவதென்றால் சும்மா அல்ல! ஒரு ஊரில் விசேசமென்றால் பெண்டுகள் பேசிவைத்து முப்பது நாற்பதுபேர் ஒன்றிணைந்து அக்கம்பக்கமோ, தூரந்தொலைவோ அதெங்கிருந்தாலும் உறவினர் வீட்டுக்கு கட்டெறும்புச்சாரிப்போல் படையெடுப்பார்கள்.ஒரு வீட்டில் எத்தனைப் பேரிருந்தாலும், சிட்டாமுட்டிகளானாலும் சரியே அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே "நோம்பிக்கி வாங்க! நோம்பிக்கி வாங்க! என நெஞ்சார அழைத்து மனதார விருந்தளிப்பார்கள். அந்தச்சோலி, இந்தச்சோலி என்று சாக்குச்சொல்லி காரியத்தின் பேரில் விருந்துண்ண வாராதவர்களை "கொன்னவாயன் சமா- குருநாதன் சமா, சடையன் சமா- சின்னாளு சமா,பாப்பம்பாடி சமா- கன்னந்தேரி பச்சமுத்து சமா கூத்தாடுது சோத்துக்கு வராட்டிப்போவுது! கூத்துப்பாக்கவாச்சும் வந்துட்டு வருவீங்களாம் வாங்க" நோம்பி கும்பிடுவதின், விருந்திடுவதின் சிறப்புக்கூறாக கூத்தை முன்வைத்து அழைப்பதும் வழமை. ஆண்கள் கறிபோட, பெண்கள் சாந்தறைக்க என மாயாத வேலைகளை பகிர்ந்துக் கொள்ளும்போதே கோப தாபங்கள், குற்றம் குறைப்பாடுகள்,கஷ்ட நஷ்டங்கள், உதவி ஒத்தாசைகள் பரஸ்பரம் பரிமாறி ஒருவருக்குள் ஒருவர் இளைப்பாறிக்கொள்வார்கள். பேச்சு திசைத் தப்பி வார்த்தை தடித்து சண்டையிட்டு மண்டை உடைத்துக் கொள்வதும் நடக்கும்.குருநாதவாத்தியாரின் சமாவினரை வைத்து பள்ளத்து கட்டேறுப்பன்* தெவத்துக்கு அன்று "வன்னியன் பிறப்பு" கூத்து வைத்திருந்தார்கள். முன் வந்த பாத்திரங்கள் களைத்து ஓய்ந்த மூன்று மணி கருக்கல், அங்கமெலாம் தீயெரிய அதிவீரவன்னியனாக குருநாதன் சபையில் தோன்ற உக்கிரமாகி தகித்தது.சுமார் இரண்டரை மணிக்கூறுகள் ஆயிற்று அந்த பாத்திரத்தின் தர்பார் விருத்தாத்தங்கள் முடிவதற்கென்றாலும் கூடிய அச்சபையினின்று ஒருவரும் அசைந்தவர்களில்லை. பார்த்தகண் பூக்கவில்லை, கேட்ட காதடைக்கவில்லை! கைகள் பொத்தி, வாய் பதைக்க பக்தி சிரத்தையோடும், தொற்றவைத்த பதட்டத்தோடும் கூத்தை கண்டு களித்திருந்தோம்.இரண்டாம்முறை குருநாத வாத்தியாரைச் சந்தித்தது கரும்பு சாலியூர் ஊத்துக்கோம்பை மாரியம்மனுக்கு* 'சாரங்கதாரா ' கூத்தாட வந்தபோது. உடாங்கனை கனவு நிலையென்னும் 'வாணாசூரன் சண்டை' எனுமோர் கூத்தைப்போன்றே சாரங்கதாராவும் புழக்காட்டத்திலிருந்து அருகி மறைந்து வருமொரு கூத்து. அர்ச்சுனன் மகன் அபிமன்யு, அபிமன்யு மகன் பரிச்சித்து, பரிச்சித்து மகன் ஜனமேஜெயன், ஜெனமேஜெயன் மகன் சுரேந்திரன், சுரேந்திரன்மகன் நரேந்திரன். இந்த நரேந்திர மன்னன் சபையில் தோன்றுவது முதல் மகன் சாரங்கன் சித்திரத்தைக் காட்டி சித்ராங்கியை நயவஞ்சகமாக ஏமாற்றி மணம் முடிப்பது,அந்த ரகசியத்தை மைந்தனிடம் சொல்லப்படாதென்று மந்திரிகுமாரானாகிய சுபந்திரனை நிர்ப்பந்தஞ் செய்வது, மந்திரிகுமாரனும், சாரங்கனும் புறாப்பந்து விளையாடுவது, எதிர்பாரா சந்தர்ப்பத்தில் சாரங்கனின் மணிப்புறா சித்ராங்கி மடியில் தஞ்சமடைய, மீள புறாவைப் பெறும் பொருட்டு சாரங்கன் அந்தப்புறம் ஏகுவது, சித்திரத்தில் கண்டவன் இவனென துணிந்து சாரங்கனை சித்ராங்கி புணர்ச்சிக்கு அழைப்பது, மறுத்தவன் வெளியேற, வெஞ்சினங்கொண்டவள் சாரங்கன் மீது வீண்பழிப் போடுவது, மனையாட்டி சுமத்தும் குற்றத்தை ஆராயாமல் நரேந்திர மன்னன் மகனை மாறுகை, மாறுகால் வாங்குவது ஈறாக இந்த கட்டங்களெல்லாம் வாத்தியார் நடத்தும் சாரங்கதாரா கூத்தில் செறிவார்ந்தபகுதிகள். கதையோட்டத்தின் பல நிலைகளை குருநாதனும் அவர்தம் சகாக்களும் மெனக்கெடாமல், இயல்போட்டம் மாறாமல் அந்த புராதான காலத்தை கரைந்து நிற்றல் வழி அப்படியே கண்முன் நிறுத்தியப் பாங்கு அசாத்தியமானது.மூன்றாவது முறை நேரிட்ட சந்தர்ப்பத்தில் வாத்தியார் வல்லிய இடுங்கட்டில் மாட்டிக்கொண்டிருந்தார்.காப்புக்கட்டு முடிந்து தை பிறந்துவிட்டால் ஆடிமாதம் முடியும் மட்டும் ஊரில் இருக்கப்பட்ட சாமிகளுக்கு கொண்டாட்டத்திற்கு குறைவிருக்காது. காமாண்டாருக்கு* படையலிட்ட கரிநாளன்று சாட்டப்பெறும், ஏழு நாள் சாட்டென்றாளும் சரி, பதினைந்து நாள் சாட்டென்றாளும் சரி அதில்விழும் வியாழக்கிழமை மாமூலாக கூத்து நடத்தியே தீருவார்கள். ஊர்ப்பெரியத்தனக்காரர்கள் அவரவர்கள் நேமித்துக்கொண்ட ஜமாக்களுக்கும் இன்னும் பிறவுள்ள புதுமை விரும்பிகளுக்கும் அடிக்கடி மூளும் போட்டி பொறாமை, சண்டை சச்சரவுகளிடையே ஆனைச்சண்டையில் கொசு நசுங்குவதுப்போல வாத்தியார்கள் சிக்கி தத்தளிப்பார்கள். நெருக்கடி மிகுந்த இச்சூழலில் அம்மாபேட்டை சரஸ்வதி ஜமா பெரியத்தலைகளான கனகராஜி வாத்தியாரும், கணேசவாத்தியாரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் ஒரே நாளில் ஆரியக்கவுண்டனூரிலும், குருவரெட்டியூர் அண்ணாநகரிலும் ஆடும்படிக்கு வெற்றிலைப்பாக்கு வாங்கிவிட்டார்கள். சரியானபடிக்கு நிறைந்த தருணம் வேண்டி வேண்டி அழைத்தாலும் மாற்று ஜமாவிலிருந்து ஒரே ஒரு ஆளைப் பெயர்க்கமுடியவில்லை. முன்பணம் கொடுத்தவர்கள் அம்மாபேட்டை அந்தியூர் பிரிவு ரோட்டில் வண்டிப்போட்டுக்கொண்டு வந்து மணிக்கணக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். செய்வதறியாது கையைப் பிசைந்துக் கொண்டு நின்றிருந்தவர்களுக்கு முடை நீக்கிய ஆபத்தாந்தவனாக வந்துச் சேர்ந்தார் குருநாத வாத்தியார்! ஒரே (அபிமன்னன் சுந்தரி மாலை) கூத்தை இரண்டு நிகழ்விடங்களிலும் வைத்துக்கொள்ளலாமென்றும், வேடதாரிகளை மாத்துக்கட்டில் (இங்காடியவர் அங்கு, அங்காடியவர் இங்கு ) பாகமேற்கப் பண்டலாமென்றும், பின்னித்தி மேளத்தோடு இருப்பவர்களை தன்னோடுத் தாட்டிவிடுமாறு பணித்தவர், பன்னிருவர் இருக்குமிடத்தில் வெறும் அறுவரை இட்டுக்கொண்டு ஊர்போய்ச் சேர்கையில் இரவு மணி பத்து. கூத்துப் பார்க்கப் போன நான் ஓட்டை டிவியெஸ் வண்டியில் விடிய விடிய ஆரியக்கவுண்டனூருக்கும் அண்ணாநகருக்கும் சவாரியடித்து சலித்து ஓய்கையில் வாத்தியார்,அறம் புகழ் ஈன்ற நகர்அரசுக்கு உரிமையானஅபிமன்னராஜனிதோவந்தேன்சபையை நாடிஎன துடியாக தர்பாராகிக்கொண்டிருந்தார். என் உறக்கச்சடைவை கண்ட சுப்ரமணி(அம்மா பேட்டை கணேச வாத்தியாரின் சோதரர்) சுபத்திரை வேடமிட்டாடிக்கொண்டிருந்தவர் சுருக்கமாக தன் டூட்டியை முடித்துக்கொண்டு வந்த சுருக்கில் அங்கிருந்த இச்சிமரத்திட்டில் என்னை இளைப்பாறச்சொல்லிவிட்டு தான் ஒரு நடை ஆரியக்கவுண்டனூருக்கு போய் வருவதாக வண்டியை வாங்கிக்கொண்டார். தவிரவும் ஆடிமுடிக்கப்படாத சுபத்திரை பாகம் அவருக்கென்று அங்கு காத்திருந்தது. போனவர் போனவரே! வெகு நேரமாகியும் ஆள் துப்பே காணவில்லை! வரவேண்டிய மற்றொருவரும் வந்துச்சேரவில்லை! அபிமன்யு கானகத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்தவர் காதலியாம் மாமன் மகள் கமலச்சுந்தரி எட்டடுக்கு கற்கோட்டை! எறும்பேறா மண்டபம்! பத்தடுக்கு கற்கோட்டை! பாம்பேறா மண்டபத்தில் சிறையிடப்பட்ட சேதியை சுந்தரியெழுதிய நிருபம்கண்டு தெரிந்து சிறைமீட்க தாய் சுபத்திரையிடத்தில் உத்தாரம் பெற ஆனைக்குந்திப்பட்டணம் நோக்கி காற்றாய் பறந்துவந்துக்கொண்டிருந்தார். என்னாச்சோ, ஏதாச்சோ தம்பி எட்டிப்பாத்துட்டு வாங்க ஒருவிச, என்று குருநாதவாத்தியார் வேண்ட திரும்ப ஆரியக்கவுண்டனூருக்கு பயணம்போனேன்.எதிரே சுப்ரமணியை தேடிக்கொண்டு அங்கிருந்தொருவர் வரவே எனக்கோ பதட்டமான பதட்டம். கூடி இருவருந் துழாவியதில் பழையூர் முக்கில் எம்.பி நலநிதியில் வடிக்கட்டி எழுப்பிய பேருந்து நிழற்குடையினடியில் மனிதர் நாயொன்றிற்கும் தனக்கும் நடந்த அகோரயுத்தத்தில் மிஞ்சியிருந்த தாய்ச்சீலையினைக் கிழித்து கடிப்பட்ட இடத்தில் கட்டுப்போட்டப்படி விதியே என்று ஒடுங்கிப்போய்க் குந்தியிருந்தார். ஆண்வேடமோ, பெண் வேடமோ அதுவெந்த வேடமாகயிருந்தாலும் தரித்தவர் முகமழிக்காமல், கால்களிலிருக்கும் சதங்கைகளை அவிழ்க்காமல் ஆடரங்கை விட்டகலமாட்டார்கள். இட்ட வேடத்திற்கு எதாவதொரு விதத்தில் பங்கம் விளைந்தால் தன் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய அவகேடாக அதை எண்ணியெண்ணி வருந்துவார்கள். அன்றைக்கிருந்த இக்கட்டில் யாருக்கும் எதையும் பொந்தியிலிருத்த இயலவில்லை. அவதி பகுதியாக கிளம்பியவர் எண்ணை இல்லாமல் முண்டியடித்த வண்டியை நடைப்பழக்கிப்போயிருக்கிறார் தடத்தோர பஞ்சர் கடையில் எப்படியும் எண்ணையைப் பிடித்துக்கொள்ளலாமென்று துணிந்து!. கட்டுத்திட்டத்தை மீறி தனது காற்சதங்கையை அவிழ்க்காமல் சென்றதால் அந்த கலைவாணி சரஸ்வதியே நாயாக அவதாரமெடுத்து வந்து தன்னை தண்டித்துவிட்டதாக வருந்திய அந்த அப்பாவிக்கலைஞனை உடனடியாக பூதப்பாடி மருத்துவமனையில் அனுமதித்தப்பின் உடன் வந்தவரை ஆரியக்கவுண்டனூருக்கு அனுப்பிவிட்டு தக்க கலைஞர்களின்றி இரண்டு பக்க கூத்தும் என்ன கதியானதோ என்ற வாட்டம் மேலிட நான் அண்ணா நகருக்கு விரைந்தேன். குரு நாத வாத்தியார் நெடிது நீண்ட தன் சிகையை விரித்துப் போட்டு சுபத்திரை வேடத்தில் நின்று கண்ணனிடம்,உரிமைக்காரி நானிருக்கயாருக்கண்ணா பெண் கொடுத்தாய்சொந்தக்காரி நானிருக்கசுந்தரியை!தரலாமாஅவன் பாவி துரியனாச்சுதேஎன் ஆவி பதறலாச்சுதேஓ அண்ணா மாயக்கண்ணா!என்று அபிமன்னனுக்கு பெண் கேட்டது ஆச்சரியமென்றால் அதைவிட ஆச்சரியம், தங்கை மகனுக்கு பெண் தர மறுத்ததோடு தகாதமுறையில் அவமானப்படுத்தி கண்ணனும் அவன் மனைவி மலர்மங்கை லட்சுமியும் சுபத்திரையை விரட்டியடிக்க, தாயை அவமதித்த மாமனை கருவறுத்து கமலசுந்தரியை சிறைமீட்ட சபதங்கூறி புறப்படவேண்டிய இடத்தில் பெண் வேடத்தில் உள்ளே சென்றவர் மூன்றடி பாட்டு இடைவெளியில் மீண்டும் ஆண்வேடத்தில் வெளியில் வந்த சுருக்கு. மின்னல் வேக தோற்ற மாற்றம்! யாருக்கு வேண்டுமானாலும் சமயோசிதப் புத்தி வாய்க்கலாம், அது காரியமாவது கலைஞனிடமே! பத்தடிக்கு பத்தடி சதுரம், அம்மண் தரையே கொலுமண்டபம், சபாமண்டபம், அந்தப்புரம், ஆண்டவன் சந்நிதானம், ஆரண்யமான கானகம், படுகளம், பாடிக்கூடாரம்!!!நவீனகால காணூடகங்கள் கொண்டாட்டமாக கட்டமைக்கும் பிரம்மாண்டமான காட்சிப் பின்புலங்களுக்கு நிகரானதொரு காட்சிக்களத்தை தனியொரு கலைஞன் தனது தனித்த மெய்ப்பாடுகள் வழி நிகழ்த்திக்காட்டும் வன்மை குருநாதனவர்கள் நிகழ்த்தும் கூத்திலுள்ளது.. மற்றுமவர் ஆடும் கூத்துக்களில் சிறப்பம்சங்களென்று தருக்கள் விருத்தங்களைச் சொல்லலாம். (மரபுக்கலை வடிவமான கூத்து பாட்டுக்கள் வழி கதை நகர்த்தும் போக்கை கொண்டது) ஓர் பனுவலாக எழுத்துரு காணாத இப்பாடல்களை நாம் இன்றியமையாதனவொன்றாக கருதி படைப்பாக வடிக்கவேண்டிய காரணம் என்னவெனில் பாட்டன் பூட்டன் காலத்து பழைய சொத்து என்பதனால் மட்டுமல்ல,பொருளோடு புதைந்திருக்கும் கருத்துச்செழுமைக்கும்,வழி வழியாக பல தலைமுறை கண்டபோதும் வகைத்தூய்மை சிதையாத மூல மெட்டுக்கள்,அதன் கட்டுறுதி, இசைக்குந்தோறும் சலிக்காமல் கேட்பவரை மனங்கிறங்கடிக்கும் உள்ளுறைந்த அந்நூதனம்! சாரங்கதாரா கூத்தில் சித்ராங்கி சாரங்கன் சந்திப்பில் இருவருக்குமுண்டான தர்க்கத்தில் அமைந்த தருக்கள் இவை: சாரங்கன் சொல் தரு இங்குவந்த என்புறாவைமாதாவே தாயேஎடுத்திருந்தால் தந்திடம்மாமாதாவே தாயேமணிப்புறாவைத் தந்தீரானால்மாளிவிட்டுச் சென்றிடுவேன் சித்ராங்கி சொல் தரு மாராப்பு சீலைக்குள்ளேஎன் கண்ணாளாமானு ரெண்டு வெளையாடுதுமானை நீ பிடிப்பதெப்போஇந்த மங்கை குறைதீர்ப்பதெப்போசித்தாட சீலைக்குள்ளேஎன் கண்ணாளாசித்திரம் எழுதியிருக்குதுசித்திரத்த நீ பார்ப்பதெப்போஇந்த செல்லி குறைதீர்ப்பதெப்போ சாரங்கன் சொல் தரு விடு விடம்மா மடி விடம்மாநான் வீடு போய் சேரவேண்டும் சித்ராங்கி சொல் தரு விடுவதற்கா மடி பிடித்தேன்மெல்லியாளை என்னைச் சேரும் சாரங்கன் சொல் தருஎன் தந்தையாரும் வந்து கண்டால்தகுந்த பழி நேருமம்மா சித்ராங்கி சொல் தரு உந்தன் தந்தையாரும் வருகுமுன்னே தாட்டிடுவேன் என் மாளிவிட்டு சாரங்கன் சொல் தரு என்னை கணவன் என்று சொன்னால்அம்மாஉனக்கு கண்ணு தெரியுமோஎன்னை புருசன் என்று சொன்னால்அம்மாஉனக்கு புண்ணியம் கிட்டுமோ சித்ராங்கி சொல் தரு தாயிக்கி பிள்ளையேதடாசாரங்கதாராதண்ணி கெணத்துக்கு முறைமையேதடாசாரங்கதாராகோழிக்கி முறைமையேதடாசாரங்கதாராகொக்குக்கு முறைமையேதடாசாரங்கதாரா அச்சரப் பிழையற்ற வசனங்கள், அடிபிறழாத பாடல்கள், தாளம் தப்பாத அடவுகள், பாகத்திற்குண்டான ஒப்பனை, ஒன்றி இயைந்து பகட்டின்றி வெளிப்பட்ட நடிப்பு இவற்றின் மூலம் மட்டுமல்ல, அந்நேரமந்நேரம் தோன்றும் கற்பனையில் குருநாதனவர்கள் நிகழ்த்துதலில் உருவாக்கிய காட்சியற்புதம் அதன் தீவிரம் இன்றளவும் மனதைவிட்டகலவில்லை.தற்செயலாக திறமைசார்ந்த பற்பல அசாத்தியங்களை வெளிக்கிட்டுக்காட்டும் அளிக்கை குருநாதனவாத்தியாரின் கூத்தில் ஓர் தனித்த பண்பாகும். தொடர் ஒத்திகை, நெறியாள்கை முதலான அறிவுத்தளத்திலமைந்த செல்நெறிகளினின்றும் அதை தனித்தே இனங்காணலாம்.அறிவனுபவமாகவும், உணர்பனுவமாகவம் உள்ள படிமம் கவிதையை உன்னதமாக்கும் அத்தன்மைப்போல் அவர் பாத்திரத்தோடு பொருந்தி அதில் பற்பல மெய்ப்பாடுகளை பொதிந்து பார்வையாளனின் உள்ளத்தில் உணர்வெழுச்சியை உண்டுச்செய்யும் சமத்காரம் அவர்தம் ஆளுமையை கட்டியம் கூறும் பிரதான கூறு. கற்றலும் கற்பித்தலும் கலைஞனை புதுப்பிக்குமோர் பாரிய செயற்பாடு! நிகழ்வுதோறும் கற்றுதெளிந்ததோடு மெய்வேல்,நல்லூர் பெரிய மாது, சாத்தனூர் வெள்ளையன்,பொன்னான்,சோரகை மணி, மட்டம்பட்டி பழனி,போன்ற வளப்பமான சீடப்பிள்ளைகளை வளர்த்தி ஆளாக்கி நிகழ்த்து கலையுலகில் அழியாச்சுவடுகள் பதிக்க வைத்துள்ளார் வாத்தியார். இங்குகலைஞனென்றும் கலைவாழ்க்கையென்றும் பேதங்களில்லை.வறண்டபூமியில் பொங்கலிட்டு உண்டுகளித்த உடல் உழைப்பாளிக்கு, நாளுக்கு நாள் கூடிய உழைப்பில் பாடு ஏற்றிய சேகு ஆகச்சிறந்த கலைக்கூறுகளை அவனுள் உற்பவனம் செய்வதோடு அவனை வாதைகளை பகடியாக்கும் தேர்ந்த கலைஞன் ஆக்குகிறது. காதறுத்தல்:நோம்பி சாட்டும் முகமாக நடப்படும் கம்பத்திற்கு (மூன்றடிக்கு ஐந்தடி ஆழம்) வெள்ளாட்டு கிடாயின் காதறுத்து இரத்தப்பலி கொடுத்த அன்றைக்கு மரம் தேர்ந்து அக்கம்பத்தில் உருவம் வடித்தமைக்காக ஆசாரிமார்களுக்கு அக்கிடாய் இனாமாகக் கொடுக்கப்படும். கம்பம் நடுதல்:கம்பம் நடுவது நோம்பி சாட்டுதலில் முக்கியமான சம்பிரதாயமாகும். கார்த்த வீரியார்ச்சுனனை மனதிலெண்ணியது ஓரு குற்றமென வன்கொலை செய்யப்பட்ட ரேணுகா பத்தினி உருமாறி தெய்வமாக நின்றபோழ்து அம்மணி உனைப் பிரிந்து யாம் உய்வது எங்ஙகனம்? என்று ஜமதக்னி முனிவர் தம் பெண்டாட்டியை கேட்க, கலியுகத்தில் மக்கள் எனக்கு நோம்பி சாட்டி விழா எடுக்கும் அந்த பதினைந்து தினங்கள் மாத்திரம் கம்பத்தில் வனைந்த சிற்பமாக தன்னோடு உறையலாம் என அம்மன் சொன்ன ஐதீகப் பிரகாரம் முற்றிய பாலை மரத்தை தேர்ந்து ஆண் உருவை செதுக்கி தூய நீராட்டி மஞ்சள் சந்தனம் தடவி சிறப்பு பூசனையிட்டு கோயில் தலைவாசலில் அம்மன் முகம் பார்க்கும்படி நட்டு விடுவார்கள்.கம்பளிக்கூத்துமாமன் மைத்துனர் முறையுள்ள உறவுக்காரர்களிரண்டுபேர்களுக்கு உடலில் கம்பளி சுற்றி, முகத்திற்கு மாறுபட்ட ஒப்பனை செய்து தாளக்கட்டுக்கு ஏற்றவாறு அடவில் பகடி கலந்து ஆடும் ஆட்டம் கம்பளிக்கூத்து. இதற்கென்று பாடப்பெறும் தனிப்பாடல்களும் உண்டு. செலவடை கொன்னவாயன்சொந்த பெயர் குஞ்சிப்பையன்.தந்தையார் இராமசாமி படையாச்சி சேவாட்டத்தில் மிகச்சிறந்த விற்பன்னர். தகப்பன் வழி காலடவு ஆட்டங்களில் விஞ்சிய ஆட்டம் கொன்னவாயன் அவர்களுடையது. கூத்தில் தனக்கென்றுவோர் தனி பாணி அமைத்து அதையும் சிறப்பாக செய்து வந்தவர்.சாரங்கதாரா கூத்தில் அவரிட்டு விளையாடும் சாரங்கன் வேடம் மக்களிடையே வெகுவான மதிப்பை பெற்றது.கட்டேறுப்பன்( கட்டு ஏரியப்பன்):சேலம் ஜில்லா, மேட்டூர் வட்டார வன்னிய குடிகளின் காவல் தெய்வமாகிவிட்ட மூத்த குடித்தலைவன். முஸ்லீம் பெண்ணை சிறையெடுத்து (நங்கியம்மனாக) இணை சேர்த்து கொண்டதனால் வழிபாட்டு முறைகளும் இசுலாமிய வழிபாட்டு முறைகளையொட்டிய பழக்கங்கங்களாக உள்ளது. (அருள் வந்து சாமி பேசுகையில் உருது மொழியில் பேசுவதாக சொல்கிறார்கள். மண்டிபோட்டு வணங்குகிறார்கள்.) ஆதி பதி வாணியம்பாடி திருப்பத்தூரிலும், இன்ன பிற பதிகள் சேலம் கீரை பாப்பம்பாடி, மாதநாயக்கன் பட்டி, கொப்பம் புதூர் ஆகிய இடங்களில் கிளை பிரிந்து அமைந்திருக்கிறது. காமாண்டார்தைமாதம் மூன்றாம் கிழமை கரிநாளன்று காலை, பிள்ளை பிராயத்திலுள்ள இருபால் சிறார்கள் மணியடித்து பாட்டுப்பாடி ஊர் சோறெயெடுத்து பிள்ளையார் கோயில் முன்பதாக கூடியதை உண்ட பிற்பாடு அங்கிருந்து ஒரு அரை மைல் தூரத்திற்கு ஒட்டப்பந்தயம் விடுவார்கள். தோற்றவர்கள் ஆணோ பெண்ணோ அவர்களை காமாண்டார் பெண்டாட்டி என தெரிவு செய்துஅன்று மாலைபொழுது இறங்கியபின் ஆறோ, ஏரியோ, கிணறோ ஊர் எல்லையிலுள்ள நீர் நிலைக்கு சென்று களிமண் எடுத்து வந்து ஆணுரு (காமாண்டார்) பெண்ணுரு(காமாண்டார் பெண்டாட்டி) பிடித்து வைக்க அவரவர் பெற்றவர்கள தங்கள் குழந்தைகளுக்கு இட்டு அழகு பார்ப்பதுபோல வெள்ளியோ,தங்கமோ, பித்தளயோநகைகளை அப்பிரதிமைகளுக்கு போட்டு அலங்கரித்து கூடி நின்று கும்மியடித்து,மாவிளக்கோடு பழந்தேங்காய் படைத்து வழிபடுவார்கள். பெரும்பாலும் பிள்ளை வரம் கேட்டு வரும் கோரிக்கைகளே அதிகமுமிருக்கும். விடிந்தபின் அப்பொம்மைகளை மீண்டும் பிள்ளையார் கோயில் வாசலில் எரியூட்டிவிடுவார்கள்.