புதன், 13 ஏப்ரல், 2011
தாய்க்கி பிள்ளையேதடாதண்ணி கெணத்துக்கு முறைமையேதடா சாரங்கதாரா!கூத்துக்கலைஞர் கொத்தாபாளையம் குருநாத வாத்தியார் குறித்தொரு பதிவு.
சேலம் மாவட்டத்தில் பூரல்கோட்டை கருப்புசெட்டி என்றால் அழுதபிள்ளை வாய் மூடும்.வன்னிய சமூகத்தில் மாத்திரமல்ல,மற்ற இடைச்சாதியினர் மத்தியில் மேலதிக செல்வாக்கும், ஆதிக்கமும் பெற்றிருந்தவர்.கோனூர் பஞ்சாயத்தில் ஒரு குட்டி ராசாவாக கோலோச்சி வந்த அவர் வெள்ளைப் புரவி ஏறி ஊர் பவனி வருகையில் கைச்சொடுக்கும் சாட்டையொலி மக்களுக்கு அசீரிரி!.உதிர்க்குஞ் சொல் வேதவாக்கு!. மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் நிர்வாகப் பாத்தியதை சம்மந்தமாக நடைப்பெற்ற வழக்கொன்றில் அந்த ரணபத்ரகாளியே வந்து இவர்பட்சமாக சாட்சி சொன்னதாக பெருங்கதையாடல்கள் இங்குண்டு. மனிதனின் எச்சிப்பால் குடித்து வளர்ந்தது தான் சாதியென்றாலும் அதனின்று இப்பூலகில் ஜனித்தவன் அவன் எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருக்கட்டுமே! தப்பித்தல் அரிது.இதற்கு கருப்பு செட்டியும் விதி விலக்கல்ல!( பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் பெரிதல்லவா?) பூரல்கோட்டையில் பிறக்கப்பட்ட பறையன், சக்கிலி, குறவன் (அவர்கள் சின்னச்சாதிகள் என்றே இட்டு வழங்கப்படுகிறார்கள்)மட்டுமல்ல உடுத்தியிருக்கும் இடுப்புவேட்டி, கால்செருப்பு ,தலைமுண்டாசு,மொட்டைக் கோமணம் முதற்கொண்டு அவர் ஆக்கிணையை சிரமேற்கொண்டொழுக வேண்டும். அன்றேல் மண்மேல் மனுசன் சீவிப்பது யதேஷ்டம்!இப்படியாகத்தானே கருப்புசெட்டியின் ராஜ்யபரிபாலனத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டி வேடமாரியம்மன் கோவிலில் சோமாரக்கிழமை ஊர் பெருந்தனக்காரர்கள் கெவுளி வாக்கு கேட்டுச் சொல்ல, இறங்கு பொழுதில் அன்றைக்கெல்லாம் ஒருசிந்தியிருந்த ஊர்தோட்டி வட்டப்பாறையில் நின்று நோம்பிச்சாட்டை துடும்படித்து அறிக்கைச் செய்தால் சுற்றியுள்ள ஆண்டிக்கரை, தானம்பட்டி,மேட்டுத்தானம்பட்டி, கந்தனூர், சாவடியூர்,குள்ளமுடையானூர்,நரியனூர்,மல்லிகுந்தம், பூரல்கோட்டை,காலாண்டியூர், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பதினெட்டு கிராமங்களில் உள்ள மாரியம்மனுக்கு அந்தந்த ஊருக்குண்டான வழமொறை,வாமூல் என்னென்னவோ அந்தப்படியே நோம்பி சாட்டிவிடுவார்கள். இந்தப்பிரகாரமாகத்தானே பூரல்கோட்டை மாரியம்மனுக்கு காதறுத்து* ,கம்பம் நட்டு*, கம்பளிக்கூத்தாடிச்* சாட்டிய பதினைந்து நாள் சாட்டுக்கு அன்றாடம் பனிரெண்டு வகை தாளத்திற்கு சாரிக்கு எவ்வேழுப்பேர், பதினாறு சாரியாக நின்று இளவட்டங்கள் ஆடும் மாரியாத்தா ஆட்டத்தில்(சேவாட்டம்) ஊரே அல்லோகலப்பட்டுக்கொண்டிருந்தது. பதிமூன்றாம் நாள் திங்கள் அம்மன் அழைப்பு, பதினான்காம் நாள் செவ்வாய் இராவிளக்கு, கடைசிநாள் புதன் பகல் விளக்கு, அந்தியில் அலகு குத்து,பூங்கரகம், அக்னி கரகத்தோடு வண்டிவேசம், குதிரை வேசம்,நரி வேசம், வாணவேடிக்கை என்று இந்த அமர்க்களம் போதாதென்று குருநாதவாத்தியாருக்கும் வெற்றிலைப்பாக்கு கொடுத்திருந்தார்கள் கூத்தாட. மூணேகால் உரூவா ஒத்திக்கு காந்த விளக்கை கொண்டுவரும் சேலத்துக்காரன் இன்னும் வந்துசேர்ந்திருக்கவில்லை. பார்க்கின்றவரைக்கும் பார்த்துவிட்டு கொடுவாள்முனையில் மேட்டூர் பழம் மல்லை சுற்றி பந்தம் முடைந்து சீமெண்ணையில் நனைத்து பற்ற வைத்து அதையிருவர் வாகாக பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர். அதிகாலையிலிருந்து அந்திவரை குடித்த ஒருமரக்கள்ளுக்கும் செலவுச்சாமான்கள் ஏதுமின்றி வெறும்குறுமிளகிட்டுப் பிரட்டிய வெள்ளாட்டுக்கறிக்கும் அமைந்த தோதில், இன்னும் துளி, இன்னும் துளியென ஒரம்பரை சரம்பரைகளை உற்றார் உறவினர் வஞ்சனையின்றி உபசரிக்க, அதில் நெகிழ்ந்து போய் நாலுவாய்ச்சோற்றினை எச்சாக உண்ட மயக்கத்தில் சனம் ஒருவிதமான கிறக்கத்துடனேதான் கூத்துப்பார்க்க காத்திருந்தார்கள்.பூசைப் போட்டாயிற்று, பொட்டி மத்தளத்தை வெளியே எடுத்து வைத்தாயிற்று, களரிக்கூட்டி கூத்தும் துவக்கமாயிற்று. பாத்திரங்களை பங்கு வைத்துப் பிரித்துக் கொடுத்தப்பின்பு வரிசைக்கூத்தாகயிருந்தால் குருநாதவாத்தியார் வேசங்கட்ட உக்காருவதற்கு முன்பு காற்றாட சற்றெங்காவது ஒதுக்குப்புறமாக துண்டை விரித்து கண் அயர்வது வழக்கம்.முந்தி தோன்றிய கோமாளி வேடதாரியும் உடன் தர்பாரான தலை வேடதாரியும் துருவதாளத்தில் ஆடிக்கொண்டிருக்க சபை அந்த ஆட்டத்தில் மெய்ம்மறந்து அமர்ந்திருந்தது. கூத்தாடிகளுக்கு ஆக்கிப்போடவா நான் தாலிக்கட்டி நீரு வைத்துக்கொண்டேன் என பெண்டாட்டிக்காரி பிணங்கிக்கொண்டுவிட்டதால் வந்திருந்த ஆட்டக்காரர்களை வீட்டிற்கு ஒருவராக சோத்துக்கு அனுப்பியதில் பந்தி விசாரிக்க முடியாமல் போயிற்று.அதும்போக ஊர் முகாமியாக தானிருக்க, உள்ளூரில் விசேசம் நடந்துக்கொண்டிருக்க கூத்தாடிகளுக்கு ஒரு நாலணாவோ, எட்டணாவோ எனாங்கொடுக்காமல், ஒரு வெற்றிலைப்பாக்கு பொகையிலை நறுக்கு வாங்கிக்கொடுக்காமல், கொட்டாங்குச்சியில் வார்த்துக்கொடுக்கும் டீத்தண்ணியோ, ஒரு சுக்குத்தண்ணியோ ஏற்பாடு பண்டாமல் இருந்துவிட்டால் இதுகாறும் செய்து வந்த பண்ணாட்டுத்தனத்திற்கு அதனாலொரு பின்னம் நேர்ந்துவிட்டால் எதைக்கொண்டு அதனை ஈடுக்கட்டுவது? கவுண்டா கவுண்டான்னா ஓய்ங்கிறான்! ஒராளுக்கு சோறுடான்னா ஊகூங்கறாண்டா இந்தூரு கவுண்டன்! என்று மணியக்காரர் வீட்டில் கை நனைத்துவிட்டு வருகையில் ஏவிடியம் பேசிய எடக்கு பிடித்த கூத்தாடியொருவன் அதை எத்தனை ஊரில் போய்ச்சொல்லுவானோ! என்ற விசனமும் சேர்ந்துகொள்ள, எதற்கும் ஓருப்பூட்டு எட்டி பார்த்துவிட்டு போகலாமென்ற கட்டாசாரத்தில் ஊர் மந்தைக்கு அவர் தனது சாரட்டுவண்டியை திருப்ப விளைந்தது வம்பு! முக்கியஸ்தர் உக்காருவதற்கென்று தருவிக்கப்பட்ட நாற்காலியில் தன் சரீகலத்தை ஓய்வாக சாய்த்திருக்க ஒருகணமுமவருக்கு இருப்புக்கொள்ளவில்லை. பத்துத்தலை ராவணேசன் கொலுவில் பதிக்கெட்ட குரங்கு வால்கோட்டையிட்டு அமர்ந்தாற்போல ஒண்ணானப்பட்ட பண்ணாடி தன் எதிரே மத்தளமடித்த பறையனும்,குழலூதிய பறையனும் பெஞ்சுப்போட்டு குந்தியிருப்பதா? காண மனம் ஒப்புமா? அண்ணாருக்கு கோபம் வந்து கண்கள் சிவந்தால் அடிப்பொடிகள் சும்மாயிருப்பார்களா? "ஆரடா கூத்தாடி? எவண்டா வாத்தியாரு? ஊளச்சாதி கழுதைங்களா! ஒங்க பொச்சிக்கெட்டக் கேட்டுக்கு அட்டாலிக் கேக்குதா? மண்ணுல குந்தி மத்தாளமடிக்கிறதுன்னாதாங் கூத்தாடும்! இல்ல தல தனியா முண்டந்தனியா கெடக்கும்!" என்று மிரட்ட மத்தாளக்காரர் பள்ளிப்பட்டி பெருமாளும், குழல்காரர் வேலாயுதமும், பெட்டிக்காரரோடு மூவரும் விரித்துப்போட்ட கோணிப்பைமேல் சத்தமில்லாமல் உட்கார்ந்து வாசிக்கலாயினர். இந்த அமளி துமளியில் தூக்கம் கெட்ட குருநாதன் முழித்தெழுந்தார். விசயம் தெரிந்தது, வேறுப் பேசவில்லை. மானம் மருவாதி கெட்டு கூத்தாடமாட்டேன்! என்று கூத்தை நிறுத்தி விட்டார். வந்தது சண்டை! கூடியது பஞ்சாயத்து! கண்டால் கையெடுக்கும்படி விதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவனின் குரல் கேட்க நாதியற்று காற்றில் கரைந்துப் போனது. தளரவில்லை குருநாதன்," சாமி நீங்க படியளக்கற பரமேஸ்பரனா இருக்கலாம்! பதனெட்டுப்பட்டிக்கி ராஜனா இருக்கலாம்! பெரிய்ய நாயாதிபதியா இருக்கலாம்! நீங்க தொட்டு இழுத்தாதான் மேச்சேரித்தேரு மறு அடி நகருங்கறது உம்மயாக்கூட இருக்கலாம்! அது பத்துப்பேரா ஒத்துக்கிட்ட சங்கதி! அதுல உங்களுக்கு பவுருண்டு! பங்கு பாத்தியமுண்டு! அவுத்த உங்க பேச்சி செல்லும்! கூத்து உங்களுக்கு தெரியாத பொருளு! அங்க என்னய படைச்ச பிரம்மாப் பேச்சின்னாக்கூட நானு வெச்சிக்கமாட்டன்! ஜதியும் சுதியும் புருசம் பொண்டாட்டி மாதர! புருசங் கட்லு மேலயும், பொண்டாட்டி பாயி மேலயும் படுத்திருந்தா சம்சாரம் நெறக்குமா?நானு நின்னுக்கிட்டுப் பாடி அவிங்க ஒக்காந்தி அடிச்சா மேளக்கட்டு நல்லாயிருக்குமா? ஆஞ்சியோஞ்சிப் பாக்காட்டி நாயஞ்செத்துப்போவுங்க! நேந்து நெரவுங்க செத்த!" என்க, அவருதவிக்கு எழுந்து நின்ற சனத்திரளைக்கண்டு கருப்புச்செட்டியாரும் தணிந்து நிதானித்து," டேய் இவனென்றா தெரிஞ்சப்பொருளு, தெரியாதப்பொருளுன்னு புது நாயம் போடறான்? ஒண்ணும் பிருவாத் தெரியிலியே! கூப்புடுறா வாயாடிப்பூசேரிய! வாக்கு கேட்டு அவஞ் சொல்ற மாதரச் செய்வம்." என்றுமருளாடியை அழைத்து சாமி வருந்தினர். உடனே அம்மன் பிரசண்டமாகி பூசாரி மீதிறங்கி,"எளச்சவிங்கன்னு எளக்காரமா நெனைக்காதீங்கடா! அவிங்களும் எம்மக்கமாருதாண்டா! ஒசக்க ஒக்காந்தி அடிக்கச் சொல்றா!" என்று தீர்க்கபிரச்சனை முடிவுக்கு வந்து அந்த இரவு மட்டுமல்ல, தொடர்ந்து அந்த வட்ட வாகறையில் ஏழு ராத்திரி கூத்தாடினாராம்!. கலைஞனுக்கு தன் சுயத்தை விட்டுக்கொடுக்காத மன உறுதி வேண்டும். குருநாதன் கலைஞர் மாத்திரமல்ல நல்ல மனிதரும் கூட.எடப்பாடி தாதாபுரம் காட்டுவளவைச் சேர்ந்த குருநாதனுக்கு உடன்பிறந்தோர் ஐந்துபேர். மூன்று தமையன்கள், இரண்டு தமக்கைகள்.தந்தை வீரய்யனுக்கும்,தாயார் பாவாயிக்கும் செல்லப்பிள்ளையாக வளர்ந்த குருநாதனின் பால்யகாலம் சேட்டைகளும், வாய்த்துடுக்கும், விளையாட்டுப் புத்தியும் நிரம்பியதாக இருந்ததினால் திண்ணைப்பள்ளிக்கூடமும் அங்கிருந்த முரட்டு வாத்தியாரும் அவருக்கு வேப்பங்காயாய் கசந்துப் போனதில் வியப்பேதுமில்லை.பிறகு தன் மாமன் மகனுடன் சேர்ந்து அரிச்சுவடிகளை தானே வாங்கிப் படித்துக்கொண்டு வந்தவருக்கு அதன் நீட்சியாக பிற்காலத்தில் கூத்துப்பிரதிகளை படைக்கும் அளவிற்கு அந்த கனமுள்ள வாசிப்பனுபவம் கைக்கொடுத்திருக்கிறது. பள்ளி நிழல்தானுறியாத தன் மகன் எண்ணற எழுத்தற துருசாகப் படிப்பதை பார்த்த தந்தையாருக்கு ஓரெட்டில் சந்தேகம் மண்டி பையனுக்கு பைத்தியமென்று ஊரெல்லாம் தூற்றிவிட, சொந்தக்கார பெரியவர்கள் இருவர் குருநாதனை சோதித்து அப்பாமர தகப்பனின் ஐயம் போக்கியுள்ளனர். தாதாபுரம் கரட்டுப்பெருமாள் கோயிலுக்கு செலவடை கொன்னவாயன்* அவர்கள் வந்து அலங்காரம் வரிக்க லைட்டு கம்பத்தடியிலிருந்து அதைப்பார்த்தவருக்கு கூத்தின் மேல் ஆர்வம் பிறந்திருக்கிறது. பிறகென்ன எந்த ஊரில் கூத்தென்றாலும் கிழடு கிண்டுகளோடுஅரையில் மொட்டக்கோவணம்,தோளில் மேல் சுண்டு சகிதமாக, நடைத்துணையாகச் செல்லும் வாத்தியாரையும் முதல் ஆளாக அங்கேப் பார்த்துக்கொள்ளலாம். கண்டதை காலாடிப்பார்க்க, காதால் கேட்டதை வாய்ப்பாட ஆடு மாடு மேய்க்குமிடமெல்லாம் குருநாதனுக்கு கூத்தாடும் சபையாகிப்போனது. ஆசை பித்தாகி ஆட்டுவிக்க, உள்ளூரில் குடியிருந்த பழைய கூத்தாடி பொன்னான் வாத்தியாரிடம் இவர் வேண்டியதற்கிணங்க, அவராடிய துரோபதை துயில் கூத்தில் முதன்முறையாக அர்ச்சுனன் வேடங்கிட்ட, கரட்டுப்பெருமாள் முன்னிலையில் குருநாதனவர்களினுடைய அரங்கேற்றம் நடந்தேறியிருக்கிறது.பின்தொடர்ந்த நாட்களில் சொந்தமுயற்சியில் தன் வயதொத்த சகாக்களுடன் சத்தியவதிக் கல்யாணம், கிருஷ்ணன் பிறப்பு,போகவதி கல்யாணம் போன்ற கூத்துக்களைப் பயின்று நிகழ்த்தி வந்தவருக்கு பதினாறு வயதில் மேச்சேரி சடையன் வாத்தியாரின் பாஞ்சாலக் குறவஞ்சி கூத்தைப் பார்த்தப் பிற்ப்பாடு ஓர் திருப்பம்! அதில் சடையன் புனைந்த குறத்தி வேடத்தாக்கத்தில் தானும் சிலவருடங்கள் பெருங்கொண்ட பெண் வேடங்களை விரும்பியேற்று அவைத்தோறுந் துலங்கி கோரிய வாலிபத்தில் மூண்ட இருபது வயதிலெல்லாம் தக்கப்படியான கூத்தாடி என்று பேர் எடுத்து விளங்கியிருக்கிறார். அன்று தொட்டு இன்று வரை அறுபதாண்டு காலங்களுக்கு மேலாகியும் இக்கலைச்சங்கின் சங்கநாதம் ஓயாது தொனித்தபடியேயிருக்கிறது. எனது விடலைபருவத்தில்தான் வாத்தியாரின் கூத்தைப் பார்க்க வாய்த்தது. அப்பொழுது எனக்கு பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கும். ஏர்வாடியிலிருந்து மாதநாயக்கன்பட்டிக்கு விருந்தாடப் போயிருந்தோம். காது குத்து- கல்யாணம், நோம்பி- நொடி,வீட்டுச்சாமி- காட்டுச்சாமி,தேரு-தெவம் என்று வந்துவிட்டால் மேச்சேரி பகுதிகளில் ஒரம்பரை அழைப்பு என்றவோர் சம்பிரதாயம் இன்றளவும் உண்டு. விருந்துக்கு கூப்பிடுவதென்றால் சும்மா அல்ல! ஒரு ஊரில் விசேசமென்றால் பெண்டுகள் பேசிவைத்து முப்பது நாற்பதுபேர் ஒன்றிணைந்து அக்கம்பக்கமோ, தூரந்தொலைவோ அதெங்கிருந்தாலும் உறவினர் வீட்டுக்கு கட்டெறும்புச்சாரிப்போல் படையெடுப்பார்கள்.ஒரு வீட்டில் எத்தனைப் பேரிருந்தாலும், சிட்டாமுட்டிகளானாலும் சரியே அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே "நோம்பிக்கி வாங்க! நோம்பிக்கி வாங்க! என நெஞ்சார அழைத்து மனதார விருந்தளிப்பார்கள். அந்தச்சோலி, இந்தச்சோலி என்று சாக்குச்சொல்லி காரியத்தின் பேரில் விருந்துண்ண வாராதவர்களை "கொன்னவாயன் சமா- குருநாதன் சமா, சடையன் சமா- சின்னாளு சமா,பாப்பம்பாடி சமா- கன்னந்தேரி பச்சமுத்து சமா கூத்தாடுது சோத்துக்கு வராட்டிப்போவுது! கூத்துப்பாக்கவாச்சும் வந்துட்டு வருவீங்களாம் வாங்க" நோம்பி கும்பிடுவதின், விருந்திடுவதின் சிறப்புக்கூறாக கூத்தை முன்வைத்து அழைப்பதும் வழமை. ஆண்கள் கறிபோட, பெண்கள் சாந்தறைக்க என மாயாத வேலைகளை பகிர்ந்துக் கொள்ளும்போதே கோப தாபங்கள், குற்றம் குறைப்பாடுகள்,கஷ்ட நஷ்டங்கள், உதவி ஒத்தாசைகள் பரஸ்பரம் பரிமாறி ஒருவருக்குள் ஒருவர் இளைப்பாறிக்கொள்வார்கள். பேச்சு திசைத் தப்பி வார்த்தை தடித்து சண்டையிட்டு மண்டை உடைத்துக் கொள்வதும் நடக்கும்.குருநாதவாத்தியாரின் சமாவினரை வைத்து பள்ளத்து கட்டேறுப்பன்* தெவத்துக்கு அன்று "வன்னியன் பிறப்பு" கூத்து வைத்திருந்தார்கள். முன் வந்த பாத்திரங்கள் களைத்து ஓய்ந்த மூன்று மணி கருக்கல், அங்கமெலாம் தீயெரிய அதிவீரவன்னியனாக குருநாதன் சபையில் தோன்ற உக்கிரமாகி தகித்தது.சுமார் இரண்டரை மணிக்கூறுகள் ஆயிற்று அந்த பாத்திரத்தின் தர்பார் விருத்தாத்தங்கள் முடிவதற்கென்றாலும் கூடிய அச்சபையினின்று ஒருவரும் அசைந்தவர்களில்லை. பார்த்தகண் பூக்கவில்லை, கேட்ட காதடைக்கவில்லை! கைகள் பொத்தி, வாய் பதைக்க பக்தி சிரத்தையோடும், தொற்றவைத்த பதட்டத்தோடும் கூத்தை கண்டு களித்திருந்தோம்.இரண்டாம்முறை குருநாத வாத்தியாரைச் சந்தித்தது கரும்பு சாலியூர் ஊத்துக்கோம்பை மாரியம்மனுக்கு* 'சாரங்கதாரா ' கூத்தாட வந்தபோது. உடாங்கனை கனவு நிலையென்னும் 'வாணாசூரன் சண்டை' எனுமோர் கூத்தைப்போன்றே சாரங்கதாராவும் புழக்காட்டத்திலிருந்து அருகி மறைந்து வருமொரு கூத்து. அர்ச்சுனன் மகன் அபிமன்யு, அபிமன்யு மகன் பரிச்சித்து, பரிச்சித்து மகன் ஜனமேஜெயன், ஜெனமேஜெயன் மகன் சுரேந்திரன், சுரேந்திரன்மகன் நரேந்திரன். இந்த நரேந்திர மன்னன் சபையில் தோன்றுவது முதல் மகன் சாரங்கன் சித்திரத்தைக் காட்டி சித்ராங்கியை நயவஞ்சகமாக ஏமாற்றி மணம் முடிப்பது,அந்த ரகசியத்தை மைந்தனிடம் சொல்லப்படாதென்று மந்திரிகுமாரானாகிய சுபந்திரனை நிர்ப்பந்தஞ் செய்வது, மந்திரிகுமாரனும், சாரங்கனும் புறாப்பந்து விளையாடுவது, எதிர்பாரா சந்தர்ப்பத்தில் சாரங்கனின் மணிப்புறா சித்ராங்கி மடியில் தஞ்சமடைய, மீள புறாவைப் பெறும் பொருட்டு சாரங்கன் அந்தப்புறம் ஏகுவது, சித்திரத்தில் கண்டவன் இவனென துணிந்து சாரங்கனை சித்ராங்கி புணர்ச்சிக்கு அழைப்பது, மறுத்தவன் வெளியேற, வெஞ்சினங்கொண்டவள் சாரங்கன் மீது வீண்பழிப் போடுவது, மனையாட்டி சுமத்தும் குற்றத்தை ஆராயாமல் நரேந்திர மன்னன் மகனை மாறுகை, மாறுகால் வாங்குவது ஈறாக இந்த கட்டங்களெல்லாம் வாத்தியார் நடத்தும் சாரங்கதாரா கூத்தில் செறிவார்ந்தபகுதிகள். கதையோட்டத்தின் பல நிலைகளை குருநாதனும் அவர்தம் சகாக்களும் மெனக்கெடாமல், இயல்போட்டம் மாறாமல் அந்த புராதான காலத்தை கரைந்து நிற்றல் வழி அப்படியே கண்முன் நிறுத்தியப் பாங்கு அசாத்தியமானது.மூன்றாவது முறை நேரிட்ட சந்தர்ப்பத்தில் வாத்தியார் வல்லிய இடுங்கட்டில் மாட்டிக்கொண்டிருந்தார்.காப்புக்கட்டு முடிந்து தை பிறந்துவிட்டால் ஆடிமாதம் முடியும் மட்டும் ஊரில் இருக்கப்பட்ட சாமிகளுக்கு கொண்டாட்டத்திற்கு குறைவிருக்காது. காமாண்டாருக்கு* படையலிட்ட கரிநாளன்று சாட்டப்பெறும், ஏழு நாள் சாட்டென்றாளும் சரி, பதினைந்து நாள் சாட்டென்றாளும் சரி அதில்விழும் வியாழக்கிழமை மாமூலாக கூத்து நடத்தியே தீருவார்கள். ஊர்ப்பெரியத்தனக்காரர்கள் அவரவர்கள் நேமித்துக்கொண்ட ஜமாக்களுக்கும் இன்னும் பிறவுள்ள புதுமை விரும்பிகளுக்கும் அடிக்கடி மூளும் போட்டி பொறாமை, சண்டை சச்சரவுகளிடையே ஆனைச்சண்டையில் கொசு நசுங்குவதுப்போல வாத்தியார்கள் சிக்கி தத்தளிப்பார்கள். நெருக்கடி மிகுந்த இச்சூழலில் அம்மாபேட்டை சரஸ்வதி ஜமா பெரியத்தலைகளான கனகராஜி வாத்தியாரும், கணேசவாத்தியாரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் ஒரே நாளில் ஆரியக்கவுண்டனூரிலும், குருவரெட்டியூர் அண்ணாநகரிலும் ஆடும்படிக்கு வெற்றிலைப்பாக்கு வாங்கிவிட்டார்கள். சரியானபடிக்கு நிறைந்த தருணம் வேண்டி வேண்டி அழைத்தாலும் மாற்று ஜமாவிலிருந்து ஒரே ஒரு ஆளைப் பெயர்க்கமுடியவில்லை. முன்பணம் கொடுத்தவர்கள் அம்மாபேட்டை அந்தியூர் பிரிவு ரோட்டில் வண்டிப்போட்டுக்கொண்டு வந்து மணிக்கணக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். செய்வதறியாது கையைப் பிசைந்துக் கொண்டு நின்றிருந்தவர்களுக்கு முடை நீக்கிய ஆபத்தாந்தவனாக வந்துச் சேர்ந்தார் குருநாத வாத்தியார்! ஒரே (அபிமன்னன் சுந்தரி மாலை) கூத்தை இரண்டு நிகழ்விடங்களிலும் வைத்துக்கொள்ளலாமென்றும், வேடதாரிகளை மாத்துக்கட்டில் (இங்காடியவர் அங்கு, அங்காடியவர் இங்கு ) பாகமேற்கப் பண்டலாமென்றும், பின்னித்தி மேளத்தோடு இருப்பவர்களை தன்னோடுத் தாட்டிவிடுமாறு பணித்தவர், பன்னிருவர் இருக்குமிடத்தில் வெறும் அறுவரை இட்டுக்கொண்டு ஊர்போய்ச் சேர்கையில் இரவு மணி பத்து. கூத்துப் பார்க்கப் போன நான் ஓட்டை டிவியெஸ் வண்டியில் விடிய விடிய ஆரியக்கவுண்டனூருக்கும் அண்ணாநகருக்கும் சவாரியடித்து சலித்து ஓய்கையில் வாத்தியார்,அறம் புகழ் ஈன்ற நகர்அரசுக்கு உரிமையானஅபிமன்னராஜனிதோவந்தேன்சபையை நாடிஎன துடியாக தர்பாராகிக்கொண்டிருந்தார். என் உறக்கச்சடைவை கண்ட சுப்ரமணி(அம்மா பேட்டை கணேச வாத்தியாரின் சோதரர்) சுபத்திரை வேடமிட்டாடிக்கொண்டிருந்தவர் சுருக்கமாக தன் டூட்டியை முடித்துக்கொண்டு வந்த சுருக்கில் அங்கிருந்த இச்சிமரத்திட்டில் என்னை இளைப்பாறச்சொல்லிவிட்டு தான் ஒரு நடை ஆரியக்கவுண்டனூருக்கு போய் வருவதாக வண்டியை வாங்கிக்கொண்டார். தவிரவும் ஆடிமுடிக்கப்படாத சுபத்திரை பாகம் அவருக்கென்று அங்கு காத்திருந்தது. போனவர் போனவரே! வெகு நேரமாகியும் ஆள் துப்பே காணவில்லை! வரவேண்டிய மற்றொருவரும் வந்துச்சேரவில்லை! அபிமன்யு கானகத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்தவர் காதலியாம் மாமன் மகள் கமலச்சுந்தரி எட்டடுக்கு கற்கோட்டை! எறும்பேறா மண்டபம்! பத்தடுக்கு கற்கோட்டை! பாம்பேறா மண்டபத்தில் சிறையிடப்பட்ட சேதியை சுந்தரியெழுதிய நிருபம்கண்டு தெரிந்து சிறைமீட்க தாய் சுபத்திரையிடத்தில் உத்தாரம் பெற ஆனைக்குந்திப்பட்டணம் நோக்கி காற்றாய் பறந்துவந்துக்கொண்டிருந்தார். என்னாச்சோ, ஏதாச்சோ தம்பி எட்டிப்பாத்துட்டு வாங்க ஒருவிச, என்று குருநாதவாத்தியார் வேண்ட திரும்ப ஆரியக்கவுண்டனூருக்கு பயணம்போனேன்.எதிரே சுப்ரமணியை தேடிக்கொண்டு அங்கிருந்தொருவர் வரவே எனக்கோ பதட்டமான பதட்டம். கூடி இருவருந் துழாவியதில் பழையூர் முக்கில் எம்.பி நலநிதியில் வடிக்கட்டி எழுப்பிய பேருந்து நிழற்குடையினடியில் மனிதர் நாயொன்றிற்கும் தனக்கும் நடந்த அகோரயுத்தத்தில் மிஞ்சியிருந்த தாய்ச்சீலையினைக் கிழித்து கடிப்பட்ட இடத்தில் கட்டுப்போட்டப்படி விதியே என்று ஒடுங்கிப்போய்க் குந்தியிருந்தார். ஆண்வேடமோ, பெண் வேடமோ அதுவெந்த வேடமாகயிருந்தாலும் தரித்தவர் முகமழிக்காமல், கால்களிலிருக்கும் சதங்கைகளை அவிழ்க்காமல் ஆடரங்கை விட்டகலமாட்டார்கள். இட்ட வேடத்திற்கு எதாவதொரு விதத்தில் பங்கம் விளைந்தால் தன் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய அவகேடாக அதை எண்ணியெண்ணி வருந்துவார்கள். அன்றைக்கிருந்த இக்கட்டில் யாருக்கும் எதையும் பொந்தியிலிருத்த இயலவில்லை. அவதி பகுதியாக கிளம்பியவர் எண்ணை இல்லாமல் முண்டியடித்த வண்டியை நடைப்பழக்கிப்போயிருக்கிறார் தடத்தோர பஞ்சர் கடையில் எப்படியும் எண்ணையைப் பிடித்துக்கொள்ளலாமென்று துணிந்து!. கட்டுத்திட்டத்தை மீறி தனது காற்சதங்கையை அவிழ்க்காமல் சென்றதால் அந்த கலைவாணி சரஸ்வதியே நாயாக அவதாரமெடுத்து வந்து தன்னை தண்டித்துவிட்டதாக வருந்திய அந்த அப்பாவிக்கலைஞனை உடனடியாக பூதப்பாடி மருத்துவமனையில் அனுமதித்தப்பின் உடன் வந்தவரை ஆரியக்கவுண்டனூருக்கு அனுப்பிவிட்டு தக்க கலைஞர்களின்றி இரண்டு பக்க கூத்தும் என்ன கதியானதோ என்ற வாட்டம் மேலிட நான் அண்ணா நகருக்கு விரைந்தேன். குரு நாத வாத்தியார் நெடிது நீண்ட தன் சிகையை விரித்துப் போட்டு சுபத்திரை வேடத்தில் நின்று கண்ணனிடம்,உரிமைக்காரி நானிருக்கயாருக்கண்ணா பெண் கொடுத்தாய்சொந்தக்காரி நானிருக்கசுந்தரியை!தரலாமாஅவன் பாவி துரியனாச்சுதேஎன் ஆவி பதறலாச்சுதேஓ அண்ணா மாயக்கண்ணா!என்று அபிமன்னனுக்கு பெண் கேட்டது ஆச்சரியமென்றால் அதைவிட ஆச்சரியம், தங்கை மகனுக்கு பெண் தர மறுத்ததோடு தகாதமுறையில் அவமானப்படுத்தி கண்ணனும் அவன் மனைவி மலர்மங்கை லட்சுமியும் சுபத்திரையை விரட்டியடிக்க, தாயை அவமதித்த மாமனை கருவறுத்து கமலசுந்தரியை சிறைமீட்ட சபதங்கூறி புறப்படவேண்டிய இடத்தில் பெண் வேடத்தில் உள்ளே சென்றவர் மூன்றடி பாட்டு இடைவெளியில் மீண்டும் ஆண்வேடத்தில் வெளியில் வந்த சுருக்கு. மின்னல் வேக தோற்ற மாற்றம்! யாருக்கு வேண்டுமானாலும் சமயோசிதப் புத்தி வாய்க்கலாம், அது காரியமாவது கலைஞனிடமே! பத்தடிக்கு பத்தடி சதுரம், அம்மண் தரையே கொலுமண்டபம், சபாமண்டபம், அந்தப்புரம், ஆண்டவன் சந்நிதானம், ஆரண்யமான கானகம், படுகளம், பாடிக்கூடாரம்!!!நவீனகால காணூடகங்கள் கொண்டாட்டமாக கட்டமைக்கும் பிரம்மாண்டமான காட்சிப் பின்புலங்களுக்கு நிகரானதொரு காட்சிக்களத்தை தனியொரு கலைஞன் தனது தனித்த மெய்ப்பாடுகள் வழி நிகழ்த்திக்காட்டும் வன்மை குருநாதனவர்கள் நிகழ்த்தும் கூத்திலுள்ளது.. மற்றுமவர் ஆடும் கூத்துக்களில் சிறப்பம்சங்களென்று தருக்கள் விருத்தங்களைச் சொல்லலாம். (மரபுக்கலை வடிவமான கூத்து பாட்டுக்கள் வழி கதை நகர்த்தும் போக்கை கொண்டது) ஓர் பனுவலாக எழுத்துரு காணாத இப்பாடல்களை நாம் இன்றியமையாதனவொன்றாக கருதி படைப்பாக வடிக்கவேண்டிய காரணம் என்னவெனில் பாட்டன் பூட்டன் காலத்து பழைய சொத்து என்பதனால் மட்டுமல்ல,பொருளோடு புதைந்திருக்கும் கருத்துச்செழுமைக்கும்,வழி வழியாக பல தலைமுறை கண்டபோதும் வகைத்தூய்மை சிதையாத மூல மெட்டுக்கள்,அதன் கட்டுறுதி, இசைக்குந்தோறும் சலிக்காமல் கேட்பவரை மனங்கிறங்கடிக்கும் உள்ளுறைந்த அந்நூதனம்! சாரங்கதாரா கூத்தில் சித்ராங்கி சாரங்கன் சந்திப்பில் இருவருக்குமுண்டான தர்க்கத்தில் அமைந்த தருக்கள் இவை: சாரங்கன் சொல் தரு இங்குவந்த என்புறாவைமாதாவே தாயேஎடுத்திருந்தால் தந்திடம்மாமாதாவே தாயேமணிப்புறாவைத் தந்தீரானால்மாளிவிட்டுச் சென்றிடுவேன் சித்ராங்கி சொல் தரு மாராப்பு சீலைக்குள்ளேஎன் கண்ணாளாமானு ரெண்டு வெளையாடுதுமானை நீ பிடிப்பதெப்போஇந்த மங்கை குறைதீர்ப்பதெப்போசித்தாட சீலைக்குள்ளேஎன் கண்ணாளாசித்திரம் எழுதியிருக்குதுசித்திரத்த நீ பார்ப்பதெப்போஇந்த செல்லி குறைதீர்ப்பதெப்போ சாரங்கன் சொல் தரு விடு விடம்மா மடி விடம்மாநான் வீடு போய் சேரவேண்டும் சித்ராங்கி சொல் தரு விடுவதற்கா மடி பிடித்தேன்மெல்லியாளை என்னைச் சேரும் சாரங்கன் சொல் தருஎன் தந்தையாரும் வந்து கண்டால்தகுந்த பழி நேருமம்மா சித்ராங்கி சொல் தரு உந்தன் தந்தையாரும் வருகுமுன்னே தாட்டிடுவேன் என் மாளிவிட்டு சாரங்கன் சொல் தரு என்னை கணவன் என்று சொன்னால்அம்மாஉனக்கு கண்ணு தெரியுமோஎன்னை புருசன் என்று சொன்னால்அம்மாஉனக்கு புண்ணியம் கிட்டுமோ சித்ராங்கி சொல் தரு தாயிக்கி பிள்ளையேதடாசாரங்கதாராதண்ணி கெணத்துக்கு முறைமையேதடாசாரங்கதாராகோழிக்கி முறைமையேதடாசாரங்கதாராகொக்குக்கு முறைமையேதடாசாரங்கதாரா அச்சரப் பிழையற்ற வசனங்கள், அடிபிறழாத பாடல்கள், தாளம் தப்பாத அடவுகள், பாகத்திற்குண்டான ஒப்பனை, ஒன்றி இயைந்து பகட்டின்றி வெளிப்பட்ட நடிப்பு இவற்றின் மூலம் மட்டுமல்ல, அந்நேரமந்நேரம் தோன்றும் கற்பனையில் குருநாதனவர்கள் நிகழ்த்துதலில் உருவாக்கிய காட்சியற்புதம் அதன் தீவிரம் இன்றளவும் மனதைவிட்டகலவில்லை.தற்செயலாக திறமைசார்ந்த பற்பல அசாத்தியங்களை வெளிக்கிட்டுக்காட்டும் அளிக்கை குருநாதனவாத்தியாரின் கூத்தில் ஓர் தனித்த பண்பாகும். தொடர் ஒத்திகை, நெறியாள்கை முதலான அறிவுத்தளத்திலமைந்த செல்நெறிகளினின்றும் அதை தனித்தே இனங்காணலாம்.அறிவனுபவமாகவும், உணர்பனுவமாகவம் உள்ள படிமம் கவிதையை உன்னதமாக்கும் அத்தன்மைப்போல் அவர் பாத்திரத்தோடு பொருந்தி அதில் பற்பல மெய்ப்பாடுகளை பொதிந்து பார்வையாளனின் உள்ளத்தில் உணர்வெழுச்சியை உண்டுச்செய்யும் சமத்காரம் அவர்தம் ஆளுமையை கட்டியம் கூறும் பிரதான கூறு. கற்றலும் கற்பித்தலும் கலைஞனை புதுப்பிக்குமோர் பாரிய செயற்பாடு! நிகழ்வுதோறும் கற்றுதெளிந்ததோடு மெய்வேல்,நல்லூர் பெரிய மாது, சாத்தனூர் வெள்ளையன்,பொன்னான்,சோரகை மணி, மட்டம்பட்டி பழனி,போன்ற வளப்பமான சீடப்பிள்ளைகளை வளர்த்தி ஆளாக்கி நிகழ்த்து கலையுலகில் அழியாச்சுவடுகள் பதிக்க வைத்துள்ளார் வாத்தியார். இங்குகலைஞனென்றும் கலைவாழ்க்கையென்றும் பேதங்களில்லை.வறண்டபூமியில் பொங்கலிட்டு உண்டுகளித்த உடல் உழைப்பாளிக்கு, நாளுக்கு நாள் கூடிய உழைப்பில் பாடு ஏற்றிய சேகு ஆகச்சிறந்த கலைக்கூறுகளை அவனுள் உற்பவனம் செய்வதோடு அவனை வாதைகளை பகடியாக்கும் தேர்ந்த கலைஞன் ஆக்குகிறது. காதறுத்தல்:நோம்பி சாட்டும் முகமாக நடப்படும் கம்பத்திற்கு (மூன்றடிக்கு ஐந்தடி ஆழம்) வெள்ளாட்டு கிடாயின் காதறுத்து இரத்தப்பலி கொடுத்த அன்றைக்கு மரம் தேர்ந்து அக்கம்பத்தில் உருவம் வடித்தமைக்காக ஆசாரிமார்களுக்கு அக்கிடாய் இனாமாகக் கொடுக்கப்படும். கம்பம் நடுதல்:கம்பம் நடுவது நோம்பி சாட்டுதலில் முக்கியமான சம்பிரதாயமாகும். கார்த்த வீரியார்ச்சுனனை மனதிலெண்ணியது ஓரு குற்றமென வன்கொலை செய்யப்பட்ட ரேணுகா பத்தினி உருமாறி தெய்வமாக நின்றபோழ்து அம்மணி உனைப் பிரிந்து யாம் உய்வது எங்ஙகனம்? என்று ஜமதக்னி முனிவர் தம் பெண்டாட்டியை கேட்க, கலியுகத்தில் மக்கள் எனக்கு நோம்பி சாட்டி விழா எடுக்கும் அந்த பதினைந்து தினங்கள் மாத்திரம் கம்பத்தில் வனைந்த சிற்பமாக தன்னோடு உறையலாம் என அம்மன் சொன்ன ஐதீகப் பிரகாரம் முற்றிய பாலை மரத்தை தேர்ந்து ஆண் உருவை செதுக்கி தூய நீராட்டி மஞ்சள் சந்தனம் தடவி சிறப்பு பூசனையிட்டு கோயில் தலைவாசலில் அம்மன் முகம் பார்க்கும்படி நட்டு விடுவார்கள்.கம்பளிக்கூத்துமாமன் மைத்துனர் முறையுள்ள உறவுக்காரர்களிரண்டுபேர்களுக்கு உடலில் கம்பளி சுற்றி, முகத்திற்கு மாறுபட்ட ஒப்பனை செய்து தாளக்கட்டுக்கு ஏற்றவாறு அடவில் பகடி கலந்து ஆடும் ஆட்டம் கம்பளிக்கூத்து. இதற்கென்று பாடப்பெறும் தனிப்பாடல்களும் உண்டு. செலவடை கொன்னவாயன்சொந்த பெயர் குஞ்சிப்பையன்.தந்தையார் இராமசாமி படையாச்சி சேவாட்டத்தில் மிகச்சிறந்த விற்பன்னர். தகப்பன் வழி காலடவு ஆட்டங்களில் விஞ்சிய ஆட்டம் கொன்னவாயன் அவர்களுடையது. கூத்தில் தனக்கென்றுவோர் தனி பாணி அமைத்து அதையும் சிறப்பாக செய்து வந்தவர்.சாரங்கதாரா கூத்தில் அவரிட்டு விளையாடும் சாரங்கன் வேடம் மக்களிடையே வெகுவான மதிப்பை பெற்றது.கட்டேறுப்பன்( கட்டு ஏரியப்பன்):சேலம் ஜில்லா, மேட்டூர் வட்டார வன்னிய குடிகளின் காவல் தெய்வமாகிவிட்ட மூத்த குடித்தலைவன். முஸ்லீம் பெண்ணை சிறையெடுத்து (நங்கியம்மனாக) இணை சேர்த்து கொண்டதனால் வழிபாட்டு முறைகளும் இசுலாமிய வழிபாட்டு முறைகளையொட்டிய பழக்கங்கங்களாக உள்ளது. (அருள் வந்து சாமி பேசுகையில் உருது மொழியில் பேசுவதாக சொல்கிறார்கள். மண்டிபோட்டு வணங்குகிறார்கள்.) ஆதி பதி வாணியம்பாடி திருப்பத்தூரிலும், இன்ன பிற பதிகள் சேலம் கீரை பாப்பம்பாடி, மாதநாயக்கன் பட்டி, கொப்பம் புதூர் ஆகிய இடங்களில் கிளை பிரிந்து அமைந்திருக்கிறது. காமாண்டார்தைமாதம் மூன்றாம் கிழமை கரிநாளன்று காலை, பிள்ளை பிராயத்திலுள்ள இருபால் சிறார்கள் மணியடித்து பாட்டுப்பாடி ஊர் சோறெயெடுத்து பிள்ளையார் கோயில் முன்பதாக கூடியதை உண்ட பிற்பாடு அங்கிருந்து ஒரு அரை மைல் தூரத்திற்கு ஒட்டப்பந்தயம் விடுவார்கள். தோற்றவர்கள் ஆணோ பெண்ணோ அவர்களை காமாண்டார் பெண்டாட்டி என தெரிவு செய்துஅன்று மாலைபொழுது இறங்கியபின் ஆறோ, ஏரியோ, கிணறோ ஊர் எல்லையிலுள்ள நீர் நிலைக்கு சென்று களிமண் எடுத்து வந்து ஆணுரு (காமாண்டார்) பெண்ணுரு(காமாண்டார் பெண்டாட்டி) பிடித்து வைக்க அவரவர் பெற்றவர்கள தங்கள் குழந்தைகளுக்கு இட்டு அழகு பார்ப்பதுபோல வெள்ளியோ,தங்கமோ, பித்தளயோநகைகளை அப்பிரதிமைகளுக்கு போட்டு அலங்கரித்து கூடி நின்று கும்மியடித்து,மாவிளக்கோடு பழந்தேங்காய் படைத்து வழிபடுவார்கள். பெரும்பாலும் பிள்ளை வரம் கேட்டு வரும் கோரிக்கைகளே அதிகமுமிருக்கும். விடிந்தபின் அப்பொம்மைகளை மீண்டும் பிள்ளையார் கோயில் வாசலில் எரியூட்டிவிடுவார்கள்.
வெள்ளி, 22 மே, 2009
பாதரவு - மு. ஹரிகிருஷ்ணன்

சத்திப்பையன் வெச்சிருந்தது மொத்தம் எம்பது உருவாப் பின்னுக்குத்துக்காசு, ஒருப்பொட்டலங் குருணமருந்தும் ரெண்டு பாட்லு கோட்டரும் வாங்கி, ஒண்ண அப்பயே மூடிய திருவி வாயில ஊத்திக்கிட்டான், இன்னோன்ன வூட்டுக்கு கொண்டி ஒடச்சி அதோட இந்த குருண மருந்தையுங் கலக்கிக் குடிச்சிப்புடலாமுன்னு திட்டம், பின்ன என்னாப்பின்ன? இன்ன மேட்டும் அந்த உசுர வெச்சிருந்து ஆவப்போறதென்னா? சொத்து அழிஞ்சாலுஞ் சொல்லு அழியக்கூடாது, காத்தால ஒரு பேச்சி,மறுக்க மத்தியானம் ஒரு பேச்சா?
ஒடமையின்னு அவங்கிட்ட இந்தது அது ரெண்டுதான், அதுவும் அவஞ்சம்பாரிச்சதில்ல, அடமானம் வந்தது, நகுலூரு சுப்பனது அரப்பவுனு மோதரம், சௌரந்தரங் கோமாளியிது வாஸ்சு! நாளைக்கி ஒருநாளு குறுக்க, மறாநாளு ரெண்டு பேருந்சம்பந்தி, எதுப்பொண்ணு கட்டிக்கிறது. இந்தநாலு வருசமாக் கூத்தாடி அவந்தொச்சமா வெச்சிருந்தது அந்த மூவராயிரம் உருவா மொள்ளதான். அன்னிக்கி இருந்த பசையில ஆத்தர அவசரத்துக்கு கேட்க றாங்கன்னு ஈடுமானம் வாங்கிக்கிட்டுத்தான். காசக் குடுத்தான், அதயே தொழுவாடாப் பண்ற வள்ளலுமயிரு அவனுக்கு தெரியாது, அவன் அப்பேருகந்த ஆளுமில்ல, பழவுன தோசத்துக்கு ஒரு ஒதாரண நெனைக்கப்போயி பங்கம் வந்துட்டது.
வாங்கனவிகளச் சொல்லிக் குத்தமில்ல. அவிங்க குடுத்த தெல்லாம் ஒரு நாலணாப் பாக்கியில்லாம திலிப்பிக் குடுத்துட்டாங்க, இவனேத்தான் இவந்தலயில தட்டப்பொருத்தி வெச்சிக்கிட்டான், இந்தப் பித்தியா வாத்தியாருமாருங்க இவனுக்குச் சொல்லிக் குடுத்தாங்க?
மொதமொத பொன்னான் வாத்தியாரிண்டதான் இவங்கூத்துப் படிச்சது, கொன்னவாயனாக் கெடந்தவன வாய்கூட்டிப் பேச வெச்சி, பாட்டும், அடவுஞ் சொல்லிக் குடுத்தது அந்தப் புண்ணியவாந்தான்.! மவராசன குளுந்த நேரத்துல நெனைக்கனும்.! ராவுல கும்புட்டுட்டுப் படுக்கணும்.! என்னா அந்தாளுக்கிட்ட ஒருசிக்கலுன்னா எதயுத் திருத்தமாச் செய்யணும், இல்லையின்னா அவன் எதுப்புற நிக்க முடியாது. என்னாப் பண்டுவான். ஏதுப்பண்டுவான்னு அவனுக்கே தெரியாது. ஒரெட்டு ஆருலுப்பட்டி ஏரிக்கி அந்தாட்ட வெள்ளக்கல்லுப்பட்டியில முனியப்பந்தெவத்துக்கு கூத்துவுட்ருந்தாங்க, நளதமயேந்திரிக் கண்ணாலம் நாடகம்.! பொன்னாவிக தம்பிக்காரன் மணிப்பையன், நளச்சக்கரவர்த்தி வேசம்போட்டுக்கிட்டு வெளிய போனவனுக்கு சவய அடக்கிப் பேசத்தெரியில. அவம்பாட்டுக்கு என்னென்னம்மோ ஔப்பரிச்சிக்கிட்டுக் கெடந்தான், பொன்னானுக்கு கோவம் ஒண்ணுந் தாக்குப்புடிக்க முடியல, வலப்பையில வெச்சிருந்த பொறந்தவன் வேட்டிய எடுத்து ஒருப்பாட்டுக்கு ஒருக்க,
“கிழிஞ்சிப்போச்சிப்போ
கிழிஞ்சிப்போச்சிப்போ”!ன்னு
ஒருச்சாணுத்துணி மிச்சமில்லாம நூலு நூலாக் கிழிச்சியெஞ்சிப்புட்டான். விடிஞ்சி மணிப்பையன் முண்டக்கட்டயோட ஊரு மூப்பமூட்ல போயி பழைய வேட்டி வாங்கி கட்டிக்கிட்டு ஊடுபோயிச் சேந்தான்.
இன்னோரெட்டு, பக்க நாட்டுச் செட்டுக்கு ஆளுப்பத்தலைன்னு பொன்னானும். அவம்பங்காளி பெரிய கூவானும் போயிந்தாங்க, கொழலுல கூவாம் பேரேடுத்த ஆளு! அபி மன்னஞ்சண்டயோ, அர்ச்சுனந் தேவப்பட்டமோ அதென்னமோவொரு அலங்காரம் வெச்சிருந்தாங்க, பொன்னானுக்கு விடியாலம் வேசம், சேரிச் செத்தபடுத்துக் கண்ணசரலாமுன்னு டேசிக்கிப்பொறன படுதாவ விரிச்சுட்டு படுத்துக்கிட்டிருந்தான். பக்கநாட்டுச் செட்டுல ஆனையப்பன் ஆனையப்பன்னு ஒரு படயாச்சி பொண்ணு வேசக்காரன், அவனொரு சனஞ்சேராத நாயி! பொறத்தியாருன்னா அவனுக்கு பேண்ட பீய திலிம்பிப்பாத்தாப்பல ஓக்காளம், தானுங்கற கெவுரத்தி.
“சீருடன் தொண்டர் நாவில்
செழித்து வளர்பவளே போற்றி!
நாரணன் ஈன்றெடுத்த நான்முகன்
தேவியாளே!
சரஸ்வதி சாரதாம்பா உன்
தாழ்வினை போற்றி! போற்றி! ன்னு”
மூணடி விருத்தத்த முழுசாப் போடல, ஆனையப்பந் தொண்ட பொட்டிய அப்பிடியே கண்ணாப்பின்னான்னு கலைச்சது, மும்பாட்டு பணிக்கில்லையின்னா பிம்பாட்டுத்தான அத நேந்து நெரவுணும். கூவான் நெட்டா ஒரு அகவலு ஊத, உள்றயிருந்த ஆனையப்பன்.
“ஆர்ராவங் ங்கோயா பரதேசிப் புண்டமேல ஒக்க! என்றா கொழலு ஊதற, புண்டக்கொழலு? எங்கயிருந்துடா வர்றீங்க பறத்தாயாலிங்களா எம்பட தாலியறுக்க? அப்பிடியிப்பிடின்னு இன்னும் என்னனென்னம்மோ எச்சா வார்த்த பேசும்பிடி பொறனப் படுத்திருந்த பொன்னானுக்கு ஒவ்வொருச் சொல்லும் இந்த அல்லையிலக் குத்தி அந்த அல்லையில வருது, பின்ன என்னாப்பின்ன தானாடலையின்னாலும் தஞ்சரிகலம் ஆடாதா? எப்பேருகந்த தொழிலாளி? என்னா சேதி? வையகத்துல அவன பழிக்க ஆளுண்டா? குசல நாடகத்துல
சாமியும் வந்தாரா
சண்டைகள் செய்தாரா?
அனுமந்தப் பாலா ன்னு
அவன் ஊதறானே அந்த ஒருப்பாட்டுக்கு ஈடாவானா?இந்த ங்கொக்காளவோலி!
அவங்கால்ல ஒட்ன தூசி! இவனுக்குப்பாருவொரு மண்டக்கணத்த இருக்கட்டுண்டா ஒறக்கழுட்டிமாப்ள!
விடியறதுக்குள்ள உன்ன சின்னம் பண்ணலைன்னா ங்கப்பனுக்கே நாம் பொறக்கலைடான்னு மனசுல வெச்சிருந்தாம் பொன்னான்.
ஆனையப்பங் கழதயாட்டங் குதிச்சிப்புட்டு தர்பார முடிச்சிக்கிட்டு உள்ற வந்தான். மண்டையச் சுத்தி வழிச்சாலும் அவந்தலையில ஒரே மூணு மசுருச் சிக்காது. அக்கியானம் புடிச்சவன், ரெண்டடி சவுரி நால ஓட்டுக்கா வரிஞ்சி அதயே பூவு கீவெல்லாஞ் சிங்காரிச்சி நெத்தியோடச் சேத்தி சடையாட்டங் கட்டிக்கிவான். குதிக்கற முட்டுங் குதிச்சிப் புட்டு வந்து அத அவுத்து வெச்சிருவான்.
அன்னிக்கும் வந்தவன் மசுத்த தளத்தி பட்டிக்குச்சியிலக் கட்டிப்புட்டு வேசம் போட்டுக்கிட்டிருந்த சீனாங்கிட்ட பீடி வாங்கி பத்த வெச்சிக்கிட்டுக் குந்தியிருந்தான்.
மொழங்காலு குழி பொறிச்ச பொன்னான்,அலுங்காம அத அவுத்து குழிக்குள்ற போட்டு மண்ணத்தள்ளி மூடி,மேல படலப் பிரிச்சிப்போட்டு படுத்துக்கிட்டான், நாயம்பேசற முசுவுல ஆனையப்பனும் இதயெதயுங் கண்டுக்கல, அவஞ்சாயிண்டு வேசக்காரன் குஞ்சிப்பையன் தர்பாரு ஆவும்போதுதா எந்திரிச்சி சடயப் பார்த்தான், அது கட்ன தாவுல இல்ல.
“ஆயா ங்கொம்மா" ன்னு
பேசிக்கிட்டு தொழாவு, தொழாவுன்னு தொழாவுனா எங்கப்போயி அதுச் சிக்கப் போவுது? முடி இல்லாம மொட்டத்தலயோட எப்பிடி சவைக்கி வாறது? இவன் வேசத்த பொது வசனமாப் பேசி சரிக்கட்டிக்கிட்டாங் கு ஞ்சிப்பையன். இருந்தாலும் விடியாலம் ஒரு வேசம் வரவேயில்லைன்னு நூறு உருவாச் சொனயான ஆட்டமுட்டவங்க பாணிப்பண்டிப்புட்டாங்க.
அப்பேருகந்த ருஸ்தமான வாத்தியாரிண்ட வித்த கத்து என்னாப் பிரயோசனம்.?
அப்பறம்,
சிறுசுப் பெருசாச்சி, செட்டுங் கந்தறயாச்சி. பொன்னாங் கூப்புட்டுச் சொல்லிப்புட்டான்.
“அடே அடே சத்திப்பையா! இதப்பார்ராச் சாமி, உனக்கு பொழைக்க தடங்காட்டியுட்டுட்டன். நீயிப்போயி நெனப்பா பொழைச்சிக்கடாப்பா, இந்தச் செட்டயும். உங்களையும் கட்டி மாரடிச்சிக்கிட்டிருந்தா எம்பொண்டாட்டிப் பிள்ளைங்க கஞ்சிக்சிச் செத்து வீணாப் போயிருவாங்கடாப்பா”ன்னு.
கோழி, குஞ்சப் பிரிக்கறாப்பல பிரிச்சுட்டு அவரு கூப்புட்டப்பக்கம் கூத்துக்குப் போவ,,,,
சத்திப்பையன் அங்கயிருந்து எடப்பாடிக்கிப் போயி பொன்னியூட்டு மண்டயங்கிட்டச் சேந்தான், மண்டயன் ராவுலக் கூத்தாடி, பவல்ல சந்தப் பீச்சாண்டி.!
மொவங்கழுவி கண்ணாடிய எடுத்து, மின்ன வெச்சி வேசம் போட ஆரம்பிச்சா, அந்தக் கூறுமுஞ்சி காட்ற சேட்டைக்கிப் பயந்தே முக்காவாசிப்பேரு அந்த செட்லயிருந்து ஓட்டம் புடிச்சிருக்கறாங்க. நாயம் அநியாயங்கறது அவந்தலக் கட்டுக்கே தெரியாது, எல்லாந் சுதாரிச்சியிருந்தா எதோ ரெண்டு விசியஞ் தெரிஞ்சிக்கலாம்.
பேயிக்கி தாலிக்கட்னப்பொறவு சுடுகாட்டுக்கு பயந்தென்னா ஆவப்போவுது ? இவம் பாவம் படாத நிமுசுப் பட்டுக்கிட்டு அவனே கெதியின்னுக்கெடந்தான், மண்டயனுக்கு ஒரு கூத்தியா கந்தாயி, கந்தாயின்னு அவனோடவே இருந்தா கூத்தாடிக்கிட்டு. குஞ்சாம் பாளையத்துல ஒரு ஆட்டத்தன்னிக்கி சத்திப்பையந் தல கழுவிக்கிட்டு வந்துருந்தான்.
மைப்பந்துப்போட்டு ஊற வெச்ச எண்ணயப்பூசி பூசி அவனுக்கு மொழங்காலுமுட்லும் மசுரு, என்னதாஞ் சிக்கெடுத்துச் சீருப்பாத்தாலும் முடிஞ்சக்கொண்டய அவுத்தா அதோட மல்லுக்கட்டிதாம் படியவெக்கணும்!. வாக்கு அவ்வளச் சீக்கரம் பிரியாது. இவம்பாவம் கவடத்து
"கந்தாயிக்கா, கந்தாயிக்கா! இந்த தலயச் சித்த நேரெடுத்து ரெட்டச்சடப் போட்டுவுடுக்கா” ன்னு
கேக்க, அவளும் பாவஞ் சூதுவாது தெரியாம வாடா தம்பியின்னு ஒக்காரவெச்சி பெரும்பல்லுல நெவு நெவுன்னுச் சீவி ரெட்டச்சடப் பின்னிவுட்டா.
அன்னமுட்டும் மண்டயன் அவள நோட்டம் பாக்கறது ,பையன நோட்டம் பாக்கறது, வேசம் போடறதுன்னு கொறவனாட்டங் குந்தியிருந்தான். சத்திப்பையன் எந்திரிச்சி சீலயக்கட்டி சலங்காயக் கையிலெடுத்து,சாமிய வருந்தி கால்லச் சுத்திமுடிப்போட்டுக்கிட்டு, அரினனா,,,னா.ன்னு ராகம் போட்டான், கிடீர்னு ஒரு வொத கந்தாயிப்பிள்ள அல்ல வவுத்தக்கட்டி வுழுந்ததுப் பாரு, வடக்கத்தி படலோட அய்யோ யெஜ்ஜான்னு பொம்பள புழுதிக்காட்லப் போயி வுழுந்தா.
"ஏண்டி தேவிடியா! கொண்டவங் கொடுங்கையில, கொள்ளாதவன் உனக்கு மாரு மேலயாடி"ன்னு
மண்டயன் மூக்குல புளுத்துப்போயிக் கேக்க, சத்திப்பையன் நெட்டா அவங்காலடியில வுழுந்து
“அய்யோ வாத்தியாரே தப்பித் தவறிக்கூட உன்னு வாயால அப்பிடிச் சொல்லாத வாத்தியாரே அந்த தாயி ங்கம்மாளோட ஒணணு வாத்தியாரே”ன்னு
கெஞ்சிகெதர்றான்.
“ஏண்டா ங்கோயாலோக்க மொளச்சி மூணெலவுடல அதுக்குள்ள கூத்தியாச் சேத்தறயா கூத்தியா" ன்னு
வுட்டாம் பொத்துன்னு அவனுக்கு ஒருவொத! தெக்கித்திப்படலோட அவனும் புழுதிக்காட்ல போயிவுழுந்தான், வொதயத் தின்னுப்புட்டு என்னம்மோச் செரிக்கட்டி பொழுத ஒட்டி கதய முடிச்சி மங்கலம் பாடனாங்க. விடிஞ்சது, வேசத்த அழிச்சிப்புட்டு இவம்போறதுக்குள்ள மண்டயன் பைட்டேண்டு மோரிமேல தலகிழுதா கெடந்தாங் குடிச்சிப்புட்டு.
"வாத்தியாரே சம்பளம் வாத்தியாரே"ன்னு
பையங்கேட்க அந்த ஒணவு கெட்டவன் துள்ளிக் குதிச்செந்திரிச்சி,
"டே செட்டுக்கு வந்தமா குடுத்த வேசங்கட்டி ஆடனமான்னு உன்றச்சோலி மசுர பாத்துக்கிட்டுப் போயிக்கிட்டேயிருக்கனும், சம்பளங் கேக்கறப்பாரு, இந்தவொரு வேலப்புண்ட மட்லும் எங்கிட்ட வெச்சிக்காத"ன்னுப்புட்டு
திலுப்பியுங் குப்புற அடிச்சிப்படுத்துக்கிட்டாம் போதயில, என்னமுட்டும் நின்னுக்கிட்டிருக்கறது? பொட்டியத் தூக்கி தலமேல வெச்சிக்கிட்டு பதனெட்டு மைலு நடந்தேப்போயி வூடுச் சேந்தான்,
மண்டயங்கிட்ட சின்னப்பட்டு சீரழிஞ்சி ஒண்ணும் மோசம் போவல, ஒரு நல்லகாலம் பொறந்தது, மணிப்பையம் மறுக்கவுஞ் செட்டுக் கட்டனான், சத்திப்பையன் நாயா பேயா ஒழைச்சான், உருப்பிடியா தொழிலச் செஞ்சான், நாலுபேரு பரவால்ல சத்திப்பையன் வேசம் நல்லயிருக்குதுங்கற ரெவலுக்கு வந்தான், பொறவு சத்திப்பையன் இல்லையின்னா ஆட்டம் நெறக்காதுங்கற அளவுக்கு ஆச்சி, அவங்கையில ஒரு நூறு எரநூறு பொழக்காட்டம் போட்டது, அப்பறம் பாத்துக்க மாப்ளைக்கி கொம்பு மொளச்சிட்டுது, அறுப்புக்காலத்துல பெருக்கானுக்கு ஆறேழு கூத்தியாருன்னு சும்மாவாச் சொன்னாங்க?
பண்ணாடிக்கி போனபக்கம் பொண்டுங்க தொடுப்பு! பொழுது விடிஞ்சாலும் நழிச்சலு, கூட சீசாத்தண்ணீயும் போட பழவிக்கிட்டான், என்னம்மோ ங்காயா மேச்சேரி பத்ரக்காளி மொவம் முழிச்சி அவஞ்சாரீரத்த கெடுத்து பொழப்பல மண்ணள்ளிப் போடாம வுட்டுவெச்சிருந்தா.
இந்தக்கத இப்பிடியிருக்க.
சத்திப்பையனோட வீரப்பன் வீரப்பன்னு ஒரு குளுவன், அவனும் பொண்ணு வேசக¢காரஞ் செட்ல ஆடிக்கிட்டுயிருந்தான், பெருமைக்கிச் சொல்லல, தாயாலிக்கி கத்தியாட்டத்தொண்ட, முடிஞ்ச மட்லும் அவனும்பாவம் செட்டுக்குப் பாடுபட்டான், பாஞ்சாலக் கொறவஞ்சி நாடகம் வெச்சி அதுல இவங்கொறத்தி வேசங்கட்டிக்கிட்டு
சத்தியதுரோபதைக்கி தருமதயாளரும் விடையளித்து
சித்தமுங்கலங்கிவாடி தயங்கியே இருக்கும்போது
பத்தினி ரூபம்மாறி பாலனை இடுப்பில் வைத்து
அத்திமாநகரம் நோக்கி அம்மனும் வருகின்றாளே!ன்னு
விருத்தம்போட்டு
பாஞ்சால குறவஞ்சி வந்தாளே- பாலனையேந்தி
பாஞ்சால குறவஞ்சி வந்தாளே
பாஞ்சால குறவஞ்சி வந்தாள் பார்த்தாவ- பாலனாயேந்தி
செஞ்சிபதியாளுமம்மன் சிரசினில் கூடைவைத்து
நினைத்தகுறி தானுரைக்க நீலவர்ண மாயவரே
நீரும் வந்துதவவேணும் நினைத்தக்குறி சொல்லவேணும்
அக்கினியில் வந்துதித்து ஐவருக்கும் தேவியாகி
அக்யாதவாசம் விட்டு அத்திபுரம் போகலானேன்
முத்துமணிரத்தினங்களால் முடைந்து கட்டும் கூடையேந்தி
மூடனிட வாசலுக்கு முறைசொல்லப் போறேன் சாமி
சண்முகனார் அளித்த சதிரான கூடையேந்தி
சண்டாளன் வாசலுக்கு தான்போக நீதியாச்சே
ஆயனே மலர்கண்ணா அண்ணா அவரவர்க்கு குறியுரைக்க
அத்திபுர வீதிவந்து அமர்ந்திருக்க வேண்டும் சுவாமி.
மாபாவி துரியராசன் மானபங்கஞ் செய்திருக்க
மடையனிட வாசலுக்கு மாதுபோக காலமாச்சே
வனமாய் வனங்கடந்து வந்தேன் இருண்டவனம்
அந்தவனந்தனிலே ஆயனே துணை வருவாய்-ன்னு
இந்தப்பாட்ட பாடிக்கிட்டு வெளிய வந்தான்னா அடேயெங்கப்பா அவங்கொறத்தி வேசத்த அடிச்சி ஆட இன்னொருத்தன் பொறந்துதான் வருணும்.
மணிப்பையனும் மத்தாளக்காரன் பள்ளிப்பட்டி பெருமாளும் ஆளுங்க நெலவரத்தக்கண்டு செட்டுச் சம்பளத்த நேக்கா ஏப்பமுட ஆரம்பிச்சிக்கிட்டாங்க மூவாயிரஞ் சம்பளம் வாங்கனா ஆயிரந்தள்ளி ரெண்டாயிரம் போட்டுப் பிரிக்கிறது, ரெண்டாயிரஞ் சம்பளமின்னா உருவா ஆயிரந்தாங் கணக்கு, சத்திப்பையன் ஒருநாளு
“அடேய் நல்லவாயஞ் சம்பாரிக்கறத நாரவாயந் திங்கறாப்ல திங்கறிங்க. தின்னுத் தொலையிங்க, தூரந்தொலயா இருந்துப் பாவம் பத்து இருவது பஸ் சார்சுப் போட்டுக்கிட்டு வர்ரான் வீரப்பன். அவஞ்செலவுக்கு உண்டானத ஒரு அஞ்சிப்பத்து சேத்திக் குடுங்கடான்ன ததுதாம்ப்பா"....
“அடடா கூத்தாடிங்களே! பரவால்ல நல்ல நாயம் பேசிப் படிவிட்டீங்க. எங்களுக்கு தெரியாதாச் சம்பளம் பிரிக்க. குடுக்கறத்த வாங்கிக்கணும். கொலாய மூடிக்கிட்டு இருக்கணும், இதுதாஞ் செட்டு நடமொற! நாங்க வர்றவிங்கள வான்னுஞ் சொல்லல, போறவிங்கள வேண்டாமின்னுஞ் சொல்லல, இந்த சரோசாதேவியும் கே,ஆரு, விசியாவும் இல்லையின்னாச் செட்டு மாண்டாப் போவுது இல்ல பூன'கண்ண மூடிக்கிட்டா பூலோவம் இருண்டுப்போயிருமா?" ன்னு
கீட்டகம் பேசும்பிடி சத்திப்பையன் விசுக்குனு கௌம்பி வூட்டுக்குத் திலும்பிக்கிட்டான், மறாவது நாளு கூத்து இவனும் வீரப்பனும் போவாம நின்னுப்போச்சி. மணிப்பையஞ் சைக்கிலு எடுத்துக்கிட்டு சத்திப்பையமூட்டுக்கே வந்துட்டான்.
“என்றாச் சத்தி இப்பிடி சல்லியம் பண்றாப்ல பண்டிப்புட்ட? நீ பேசி வாங்கன வெத்தலப்பாக்கு, ச்சாமிச்சாமியா இருப்பியாம், இன்னிக்கி ஒரு நாத்திரியும்வந்து ஆடிக்குடுத்துர்றா. இல்லன்னா ஊருக்கரவத்தானுங்க ஈட்டுக்குச் சிக்கிப்போயிரவமுடா”ன்னு
அவங்கிட்டயும் அங்கயிருந்தபொண்டு பிள்ளைங்ககிட்டயும் நாயஞ்சொல்லி அழுவாத கொடுமயா கூப்புட, இவனுஞ் சேரி சேரின்னு போனான். போயி வேசம்போட்டு ஆடனான், விடிஞ்சி பெருமாளே வந்து இவங்கிட்டப் பேச்சிக்குடுத்தான்.
“ஏண்டாச் சத்தி நீரடிச்சி நீரு வெலகுமாடா? அப்பிடி என்றாப்பா நாஞ்சொல்லப்புட்டன்னு உனக்கு பொணக்கு வந்திரிச்சி, என்னம்மோ ஒரு பெரியமனுசன் வௌயாட்டுக்குப் பேசனா அதப்போயி கூரியமா மனசல வெச்சிக்கிறதா”ன்னு
கொழையிறான். கொணாய்க்கிறாஞ்சும்மா, இவனும் தொலையிதுடான்னு இருக்க அன்னிக்கி திருப்பியும் உருவா அயிநூறத்தின்னுப்புட்டாங்க நெண்டுப்பேரும், இவனும் வீரப்பனும் ஒரே முடுவாச் செட்டுக்கு போறதில்லன்னு தீருமானம் பண்டிக்கிட்டாங்க.
ஆட்டத்துக்கு போவலையின்னாச் சோத்துக்கு ஆரு குடுப்பா? அதும்போவ ஆடனகாலும் அவுசாரி போனப் பொச்சும் சும்மாயிருக்குமா?
கெடயில காலுத் தங்காம நத்தமேடு குளுவவமூட்டாரோட நாளு ராத்திரிக் கூத்துக்குப் போனாஞ் சத்திப்பையன்.
ஆரு ஆரோ ஆடறாங்க! பல பட்டறயுங் கூத்தாடுது அடோ சாமீ! கூத்துக்குன்னுப் பொறந்தவிங்க குளுவமூடுதான் நண்டுச் சிண்டு குஞ்சி குளுவான்னு சிறுகால் மட்டத்துலயிருந்து பெருங்காலுமட்டம் மட்லும் எதலயும் பூந்து வந்துருதுங்க அதுங்கச் சமாச்சாரமே வேற.
அவிங்க எசைக்கும் இவனோட எசைக்கும் ஒண்ணும்ரைனு வரல, ஆனா எடங்கண்டு பேசி தடங்கண்டுப் போறது எப்பிடின்னு அவிங்கக்கிட்டப் படிச்சிக்கிட்டான் உன்னப்பாரு என்னப்பாருன்னு கெழுடு கிண்டுங்களப் பாத்துக்கிட்டு எத்தன நாளைக்கி ஊட்டுல குந்தியிருக்கறது, அதும்பொறவு தொரசங்கட்டி ஏகாபுரத்துச் சுப்ருண்டப் போயி எடஞ்சேந்தான் அலங்காரத்துக்கு.
சுப்புரு ஒத்த உருவாயாயிருந்தாலுந் சேரி இன்னொருத்தங் காசுக்கு ஆசப்பட மாண்டான் ஒலக அனுப்பவம் தெரிஞ்சவன் எடப்பாடி மகுடஞ்சாவடியக்கட்டி, கெழக்க சேலம், தெக்க ராமக்கல்லு ஒருக்கோடியா பேரு தெரிஞ்ச கூத்தாடி. கொணம் மணம் ஆட்டம் பாட்டமின்னு, அவஞ்சங்கிதியே தனி. கச்சிதமான தொழிலாளி, நெலக்கடயானப் பாட்டுக்காரன். பதனெட்டாம் போர்க்களம் வெச்சி இவந்துரியோதனங்கட்டி,
“பாராளுந் திறமையிலாப் பாவியானேன்
பஞ்சவர்மேல் போர்தொடுத்தே விருதாவானேன்
தூறாதமரம்போல வொண்டியானேன்
துணையிழந்த பேடதுபோல் தவிக்கும்பாவி
நாராசங்காச்சிவிட்ட பான்மை போலே
நடுநடுங்கி மெய் சிலிர்த்து துரியன்தானும்
பொறாமையுள்ள சகுனி சல்லியன் சூழப்
போர்களத்தைக் கண்டு குறைமேற்கொள்வானே”
ன்னு, விருத்தம் போட்டு,பொறவு
பாவி துரியன் வந்தனன் ரணகளத்தில்
துரோகி துரியன் வந்தனன் ரணகளத்தில்
பாவி துரியன் வந்தேன் பாராச் சமர்களத்தில்
ஒண்டிக்கி ஒண்டியானேன் ஒருமரத்தோப்பானேன்
சிந்தனையில்லாது சிறகிழந்த பட்சியானேன்
பாவி துரியன் வந்தனன் ரணகளத்தில்”
ன்னு, பாட்டுப்பாடி வெளிய வந்து, படுகளத்துல வீமங்கெதயில அடிப்பட்டு காலொடிஞ்சி சாவற முட்டும் அவனப்பாத்து அழுத கண்ணுச் சிறுத்துப் போயிரும். சுப்புரிண்டப் போனப்பொறவு பரவால்ல. நல்லச் சேம்பரம் வரும்பிடிக்கும் ஒண்ணும் பஞ்சமில்ல.
கண்ணுச் சாளேசுரத்த கெவுணிக்க கெதியில்லாம திண்னையக் காத்துக்கிட்டு கெடந்த அவிங்கப்பங் கருப்பன மதுர கண்ணாசுப்பத்திரிக்கி கூட்டிப்போயி ஆப்பரேசன் பண்டி கண்ணாடி மாட்டிவுட்டான். மூட்டு வலியின்னும் மொழங்காலு வலியின்னும் வருசக்கணக்கா நடயில்லாம பாயிக்கி தொணயாப் படுத்துக்கிட்டிருந்த அவங்காயா செவிடிய ஈரோட்டு எலும்பாசுபத்திரிக்கி கொண்டி வைத்தியம் பாத்தான். அவந்தாயி தங்கப் பொண்ணூட்டுப்பிள்ள வயிசிக்கி வந்திச்சி, அதுக்கு அரப்பவுனு தோடு மூக்கித்தி ஆயிரம் உருவாயிக்கிச் சீலத்துணி மணி பதனேழு தட்டு வரிசயோட புளியம்பட்டி பல்லனையும் ஒலகடம் பூவரசனையுங் கூட்டியாந்து நையாண்டி கரவ முட்டாட்டி தெரட்டிச் செஞ்சாஞ் செரீங்கறாப்பிடி.. வவானித் சித்தாத்துல ஒருப்பொண்ணப் பாத்து அவனும் ஒரு கண்ணாலங் கார்த்திச் செஞ்சிக்கிட்டான்,அரமணைக்கிவொரு ஆம்பளப்பையனையும்,ஒரம்பரைக்கிவொரு பொட்டப்பிள்ளயையும் பெத்துக்கிட்டான், ஏழப்பால பொழச்சிட்டுப் போவுதுன்னு ங்கெப்பன் மவராசன் எம்,சி,யாரு அவிகப்பனும் ஆயாளும் போயி சம்பாரிச்ச சொத்துல காலனிக்கட்டிக் குடுக்க, அதுக்கொரு அய்யாயரம் வாக்கரிசிப்போட்டு சொந்த வூடுங்கட்டிக்கிட்டான்.
இதெல்லாம் மூணு நாலு வருசத்திக்கி மிந்தின ராமாயணம் மகாபாரதம், சுத்தமா இந்த வருசமும், போன வருசமும் பையம் பட்ட சித்ரவத பகவானுக்குதாந் தெரியிம், நேத்து வந்தானாங்குடி அவந்தலயில வுழுந்திச்சாம் இடிங்கறாப்பிடி உள்ளங்காலு வெள்ள எலும்பு தேய ஓழைச்ச சம்பாரிச்சி கட்ன வூட்ல எண்ணி எட்டு மாசங்கூட இந்தப் பையன் இருந்துப்பொழைக்கல.
மேக்க அந்தியூருக்கு அந்தல்ல எழுதிய மரத்தய்யங்கோயிலுக்கு கூத்தாடிப்புட்டு கழுத்துமுட்டும் கவட்டான் வரிச்சிக்கிட்டு வந்து மப்புல அவம் மச்சாங்காரன கண்டாரக் கழுதயின்னு பேச அவனிருந்துகிட்டு “இதாப்பாரு கடவுளே! என்னம்மோ கெடந்துசாட்டாவுது, நம்ப தங்கச்சிப் பிருசன் நம்பதங்கச்சிப் பிருசன்னு இத்தன நாளா நானும் வெச்சிப்பாத்தன், இன்னமேட்டும் போதப்போட்டுக்கிட்டு வந்து ஒரு வயசிப்பிள்ளைங்க இருக்கற எடத்துல நேந்தப்பிடி கொச்ச கோளாறு பேசிக்கட்டு திரியற வேல
நம்பளுக்குச் சுத்தப்படாது, மட்டு மரிகேதிய கெடுக்கறதுக்கு மின்ன வூட்டவுட்டு அந்தண்ட தாண்டிக்க”ன்னு
ஒரேவார்த்தயிலச் சொல்லிப்புட்டாங் கறாரா.
வெத்து மேலுல ஈமிய்க்க துணிமணியில்லாமக் கெடந்தவன் சிவுக்குனு எந்திரிச்சி சிண்ட ஒதிறித் தட்டி முடிஞ்சிக்கிட்டு இடுப்புலயிருந்த ஒட்டுக்கோமணத்தோட அப்பனாத்தா பொண்டாட்டி பிள்ளைங்கள கூட்டிக்கிட்டு அம்மாபேட்டைக்கி வந்து, பரசத்தாட்டி பூலாம்பட்டி வந்துட்டான்.ஆறுமாசம் ஒருவருசம் ஆவுமிந்தியே,அப்பனையும் அம்மாளையுந் தின்னு தண்ணிக் குடிச்சிப்புட்டான். அம்மா செத்த எலவுக்கு பொண்டாட்டி மூக்குல. காதுல இருந்தது அடவுக்குப் போச்சி, அப்பஞ்செத்த காரியத்துக்கு அந்த மோதரமும் வாஸ்சும் போச்சி.
மின்ன மாதரயா நோம்பி நொடிக்கி ஆட்டமுடறாங்க? இப்பத்தாங் குண்டியாட்டம் பாத்துப் பழவிக்கிச்சே சனம், எடவெளியே இல்லாம அலங்காரமா வந்து குமிஞ்ச எடத்துல கூத்துங்கறதே அறுதியாயிக்கிச்சி, கூழோ. கலியோ. கூப்புனு அரிசிச்சோறோ கொல நனஞ்சாப் போதுமின்னு வவுத்துப்பாடே பெருசாப்போச்சி, இதல எங்க அடமானத்த மூக்கறது, ஆறு மாசத்துல வட்டியும் மொதலுங்குடுத்தவனுக்கு இன்னிக்கி. நாளைக்கின்னு சாக்குச் சொல்லியே வருசம் ஒண்ணத் தாட்டியாச்சி.
தலமேல இருக்கறச் சொமயா கொண்டாடா நாஞ்சித்த தூக்கியாரமின்னு வாங்கிக்கிறதுக்கு உருவாச்சமாச்சாரம், இந்தக் காலத்துல ஒருத்தம் பொழைக்கறதப் பாப்பானா? பெறத்தியாங்கயிட்டத்தப் பாப்பானா? நகுலூருச் சுப்பனும். சௌந்தரங் கோமாளியும் ஆன முட்டும் இவஞ்சொல்ற தவுமானத்தக் கேட்டுக்கிட்டாங்க, ஆனாக் கண்ணாலக் காரியமாச்சே ஒரு நவ நட்டு இல்லாம எப்படி? பாக்கற வரைக்கும் பாத்துட்டு சுப்பஞ் சுருக்குனு ஒருச்சொல்லு சொல்லும்புடி சொல்லுப் பொறுக்க மாண்டாம ஒடி பனங்காட்டு மொண்டிச்சிக்கிட்ட ஒத்தைக்கி டவுலு கந்து வட்டிக்கி காசவாங்கி மோதரத்தையும் வாஸ்சயும் மூட்னதெல்லாம் மிந்தாநேத்தே மூட்டிப்புட்டாள் ரெண்டுநாளா ஆடவேண்டிய ஆட்டம் மழைக்கி நிக்கிம்பிடி அவுங்களும் நேர்ப்படல, மக்யாநாத்து சலகண்டபுரம் மதுர காளியம்மன் கோயில்ல அலங்காரம் இருந்தது, நேர்ல கொண்டி குடுக்க மொடப்பட்டுக்கிட்டு சேரி அங்க வந்தா பொருள ஒப்படச்சிப்புடலா மின்னுச் சிலேட்டமா இருந்தான். வெனய தேடிக்கிட்டான்.
செட்டுக்குப் போயும் தரித்தினியம் தொலயில, நீட்டாத கைய நீட்டி வாங்காத பக்கம் மொள்ளய வாங்கி வெச்சிட்டமே. எடப்பட தடப்பட எங்கியாச்சும் கூப்ட்டப்பக்கம் போயி பத்தஞ்சி ரெண்டு உண்டுன்னாச் சம்பாரிச்சாத் தானே கடங்கட்ட முடியிமின்னு மத்த செட்டுக்கும் போயிக்கிட்டிருந்தாம் பையன்.
வடச்சட்டிக்கிப் பயந்து அடுப்புல வுழுந்தாப்பிடி ஆயிப்போச்சி அன்னிக்கி இவங் கூத்துக்குப் போன கத, நம்ப சங்கிரி அஞ்சிப்பனையாண்ட கொரங்கச்செட்டுதுதாஞ் சதுரு, ஆனா கூத்துவுட்ட கரவத்தானுங்க பொண்ணு வேசத்துக்கு இவந்தான் வேணுமின்னு தனிச்சம்பளத்துக்கு பேசி வண்டிப்போட்டுக் கூட்டிக்கிட்டுப்போனாங்க.
கொரங்கனோட கூத்தாடறதும் ஒண்ணு அந்த நறவல்ல காலு வெக்கறதும ஒண்ணு, ஆலாமரத்துலக் குந்திக்கிட்டு கொரங்கு எம்புளுலேச் செம்புளுலுன்னுத் தடவித் தடவிப் பாக்குமாமே அந்த மாதர
ஒருச்சுக்குந் தெரியலைன்னாக் கூட என்யைவெட பெரிய புளுத்தி எவனுமிந்த பூமியிலியே இல்லம்பான், அவனோட ஒராளு வேசம்போட்டு ஆடுதுன்னா அவனுக்கு அடங்கித்தான் இருக்கணும், கடுகத்தன மீர்றதுக்கில்ல, அப்பிடி எங்கியாச்சுந் தப்பிடியா ஒருத்தங் கொண்டயம் போட்டுட்டான்னா இவன் விடியறதுக்குள்ள எதோவொரு வகயில அவன மொக்கப்பட்டம் பண்டிப்புடுவான், அரியானூரு பழனிசாமியிலிருந்து தானாதியூரு அர்ச்சுனன் முட்டும் அவஞ்சில்ரப்பித்திய செருப்பலடிக்காதவங்களே இல்ல, துரோபத துயிலு நாடகம், மடத்தூரு ஆறுமொகம் திரியோதனன், கொரங்கந் துச்சாதனன் சத்திப்பையம் பாஞ்சாலி. செட்டிப்பட்டி சின்னாளு அர்ச்சுனன். சித்தூரு பழனி தருமரு, திரியோதனந் தர்பாருக்குப் பொறன பாண்டவரு அஞ்சிபேரும் தர்பாரு ஆனாங்க, பகடயாட்டம் முடிஞ்சி. துச்சாதனன் துரோவதி சந்திப்புக்கட்டம்.
“மதித்த துரோபதையே நீதான் மானமுள்ளவளே யானால்
தித்தரும்நூற்றோர்அன்புவேணும்என்பவளேயானால்
கொதித்திடும்எந்தன்அண்ணன்கொலுவிற்குவரவேச்சொன்னார்
எதிர்த்துரை சொல்லாமல் யென்பின்னே வாராய¢“
“மட்டும் மருங்கும் மரியாதி இல்லாமல்
பொட்டெனவே எனையழைத்த
புத்தியில்லா மைத்துனரே
தோற்றமுடி உங்கள் அண்ணன்
சூழ்ந்திருக்கும் சபையில் என்னை
இட்டு வரச் சொன்னவிதம் எனக்கறியச் சொல்வாயே“
“வள்ளியே தருமபுத்திரன்
வலிவந்த சூதுமாடி முன்னிலும்
நாடுநகரம் முழுவதும் தோற்றான் பெண்ணே!
தன்னையும் தோற்றான் தம்பிமாரையும்
தோற்றான் உன்னயுந் தோற்று நின்று
ஒடுங்கினான் வந்து பாராய்“
“என்னையும் சொக்கட்டானில் வைத்து
இசையவே தோற்றார் என்றால்
என்மன்னவர் ஐந்துபேரும் வரவழைத்திடுவார்
காண் உன்னயும் யார்தான்
கண்டார் உன் தமையைனையும் யார்
தான்கண்டார்? பின்னமா பேசாதே
பேசாமல் நடந்திடுவாயே“
“நடக்கத்தான் வந்தேன் வந்தேன்
ஒரு நாழிகை தனிலே யுன்னை
ஒடுக்கத்தான் வந்தேன் வந்தேன்
வேந்தர்கள் சபையின் முன்னே
கெடுக்கத்தான் வந்தேன் வந்தேன்
கெர்வத்தை அடக்க வந்தேன்“
“துரோகியே இதுவென்ன சொல்லடா
என்னை தொடவேண்டாம் தூரநில்லடா
நெருப்பென்று தெரியாது நீசனே நீயாடாதே
கருத்தினால் கெட்டு வீணாய்க் கருகிப்போகாதே“
“தொட்டு இழுக்காமல் போவேனோ
போனால் துரியந்தம்பி ஆவேனோ
செத்தமாடும் பில்லுத் திங்குமா இனி
உஞ்சித்திர மினுக்கெல்லாம் செல்லுமா“
இந்த மாதர பாட்டுக்குப் பாட்டு விருத்தத்துக்கு விருத்தம் சத்திப்பையன் வுட்டுக் குடுக்காமப் போடும்படி, கொரங்கனுக்கு வேக்காடு ஒண்ணும் பொறுக்கமுடியல.
"போடுசா பொக்க "
"போடுசா பொக்க "ன்னு
சும்மாவே அல்லையில காரிக்காரித் துப்பிக்கிட்டிருந்தான்.
போடுசா பொக்கன்னா கூட ஆடற வேசக்காரன தொம்பரூட்டு பாசையில நாஸ்தி பண்றது, இவன் என்னாப் பண்டறான், ஏதுப்பண்டறான்னு கண்ணுறுத்துப் பாத்துக்கிட்டிருந்தாஞ் சத்திப்பையன். ஹூம் அவனுக்கா தெரியாது பல தண்ணி குடிச்சவனுக்கு. இருந்தாலும் தொழில தொழிலாச் செய்யனுமின்னு,,, பையங் குட்டு வுடல.
துயிலுரியறக் கட்டம் வந்தது, எப்ப அந்தக்கட்டம் வருதோ,,, தொரவதி வேசக்காரனும். துச்சாதன வேசக்காரனும் இன்னதுதாம் பண்றமின்னு ரக்கு தெரிஞ்சி வெளையாடனும். இல்ல மந்தையில மானங்கெட்டு நிக்கணும், இதுதாண்டா சமயமின்னு எடங்கண்டு ஏறி மிதிச்சாங் கொரங்கன், ஏமாந்த வாக்குல நின்னு,
வசனம் பேசிக்கிட்டிந்த சத்திப்பையஞ் சீலயப் புடிச்சி வெடுக்குனு இழுத்தாம் பாத்துக்க...... அவம் போட்ருந்த படி முடிச்சறுந்து முக்காச்சீல கொரங்கங் கையோட வந்துட்டது. அதறப்பதற அலயக்கொலய இப்பிடிச்செஞ்சா ஆருக்குத்தான் வெறி திலும்பாது? கங்கேடு மதிகேடா நட்ட நடு டேசியில போயிநின்னு சத்திப்பையன்,
“அடே கொழுந்தா! ஏண்டாப்பாவம் இவ்ள கயிட்டப்படற? இப்ப என்னா உனக்கு எம்பண்டத்தப் பாக்கணும் அவ்வளத்தான. இந்துரா பாத்துக்கடா”ன்னு
பாவாடய தூக்கி காட்டிப்புட்டு உள்ற போனவந் திரும்பி வரல, பிதுமாரு கெட்டுப்போச்சி, ஆயிரம் ஆட்டம் ஆடியிருக்கிறான், ஒரு நாளயிலியும் இந்த அவுமானம். நேந்ததில்ல.
பாஞ்சாலி சவதங் கூறாம கதய முடிக்க முடியாது, கூத்துட்டவங்க வந்து கெஞ்சிக் கொறமாட சத்திப்பையஞ் சாராயம் இல்லாம வெளி வரமாண்டேன்னுப்புட்டான், அஞ்சிப்பனையில சாராயத்துக்கா பஞ்சம்? நிழுசங் கொண்டாந்து குடுத்தாங்க சிலுவருப்போவுணி வழிய. சரக்கு அடிச்சிக்கிட்டுப் போயி ஒண்ணா ரெண்டா பாடி சந்தடைச்சிப்புட்டு வந்து வுழுந்தவன் உச்சி வெயிலு பொச்சியில அடிச்சப்பொறன எந்திரிச்சிப் பாத்தா, ஏப்பா கையிலிந்த மோதரத்தையுங் காணம்.! Õவாஸ்சயுங் காணம்! அவ்வளத்தாம் பையம் ஒடம்புல உசுரு இல்ல. கூட்ல ஆவியில்ல, எதக்கண்டு செரிக்கட்றது இருக்கற தொந்தரவ?
ஒடமக்காரஞ் சும்மாயிருப்பானா? மின்னயே “வயித்துக்கு என்றாத் திங்கறன்னு கேட்டுப்புடல? ஊருக்கெணத்தாண்ட ஒக்காந்தி வேசம் அழிக்கறப்பவே சத்திப்பையம்மேல சாவுக்கவுச்சி அடிச்சது, மொள்ள சங்கிரி வந்து அங்கயிருந்து முருகம்பஸ்ல ஏறி பூலாம் பட்டி வந்துச் சேந்தான்.
இவந் தலயக் கண்டதும் பையனும் பிள்ளயும் 'ஓ'ன்னுக்கத்தி கொணாய்ச்சிக்கிட்டு ஒடியாந்ததுங்க, பொட்டியக்கீழ வெச்சிட்டு கையிக்கு ஒண்ணாத் தூக்கயில தாயாலிக்கி எங்கிருந்து அத்தன ஆவுசம் வந்ததோ தெரியல! மென்னு முழுங்கறவனாட்டம் ரெண்டுங்களயுஞ் சொட்டவுடாம கடி கடின்னு கடிச்சி முத்தங் குடுக்கறானேச் சண்டாளப் பாவி!.
கள்ளு முள்ளு தெரியாத நிதானமாயிருந்தாலும் அதுங்களுக்கு நொறுவ வாங்க மறக்க மாட்டான், காலோட பின்னிக்கிட்டு வாற பிள்ளைங்களுக்கு பாலோடச் சோறூத்தலையின்னாலுங் கூட அகங்கைக்கிப் பத்தனத வஞ்சனையில்லாம வாங்கிப் போட்டு திங்கடிப்பான், அன்னிக்கிப்பாவம் வெறுங்கையோடதான் வந்தான், அதுங்களும் பாவம். அதப்பத்தி கண்டுக்கல, அப்பனோட சிரிச்சி மவுந்ததுங்க, ஒருச்சித்தய குடுமியப்புடிச்சேறி வௌயாண்டுதுங்க, போன நாயம் வந்தநாயம் பேசிக்கிட்டு அதுங்க தூங்கறதுக்கே ராவு வெகு நேரந்தாண்டிப் போச்சி...
தூக்கத்துல வில்லிதான், இருந்தாலுங் கடங்காரு வந்து போட்ட ரவுசுல சத்திப் பொண்டாட்டி காத்தாலப் புடிச்சே சோறுத்தண்ணியில்லாம கெடந்தா, வெறும் வவுத்துல எப்பிடி தூக்கம் புடிக்கும்? காலொருபக்கம், கையொருப்பக்கமா மாருமேல கெடந்த பிள்ளைங்கள தூக்கி ஒரு ஒரமாபோட்டுட்டு பொண்டாட்டியிண்ட வந்து படுத்தான், கண்டதும் அவ இவங் கோளாற நெனச்சி அழுதா,,, அழுதா,,, ஒயாம அழுதா.. சொல்ற சமாதானமெல்லாஞ் சொன்னவன் ஒண்ணும் வேலைக்கி ஆவாம பையம் ரவுக்குனு பண்ணயத்துல முசுவா பூந்துட்டான், வேணும் வேணாங்க உப்ப மழ அந்நேரம் பிச்சிக்கிட்டு ஊத்துது, வேர்த்த ஒடம்பு காத்து வேணுமிங்க பிருசனும் பொண்டாட்டியுந் திண்ணையில குந்தி மிய்க்க. மிய்க்க பொழைக்கற நாயம் பேசனாங்க.
காத்துச் சிலச்சிலுப்புக்கு கண்ண சொழட்டிக்கிட்டு வரும்பிடி அவ ஒருபக்கங் கட்டயச் சாய்க்க, இவனும் ஒருபக்கம் சாக்க விரிச்சுட்டுப் படுத்துக்கிட்டான், புருசம்பெருமயில பொம்பளைக்கி மசத் தூக்கம் மாயமா வந்துட்டது..
சத்திப்பையன் சுத்தியும் ஒருவட்டம் எசவிருக்குதான்னு நோட்டமுட்டுட்டு இடுப்புல கைய வெச்சிப்பாத்தாங் குருண மருந்துப்பொட்டலம் பத்ரமாயிருந்தது,,,,ச்சேரி மாடப் பெரையில ஒளிய வெச்சிருக்கற வெராந்திப்பாட்ல எடுக்கனுமே, குந்தனவாக்குல பூனையாட்டம் நவுந்து மொள்ள எந்திரிச்சி, ஒரு எட்டு தரையில வெச்சவன் மறு எட்டு வெச்சான் மவக்காரி மணிக்கட்டுமேல! எளங்கையிக்கும் அதுக்கும் எலும்பு ச்சடக்குனு முறிஞ்சது.
"ரே யெஜ்ஜா" ன்னு
பிள்ள ஒரேக் கத்தா கத்த
"அய்யோ மவளே"ன்னு,
தன்னப்பால பையங்கையி படக்குனு ரைட்டப்போட்டது
ஒடமையின்னு அவங்கிட்ட இந்தது அது ரெண்டுதான், அதுவும் அவஞ்சம்பாரிச்சதில்ல, அடமானம் வந்தது, நகுலூரு சுப்பனது அரப்பவுனு மோதரம், சௌரந்தரங் கோமாளியிது வாஸ்சு! நாளைக்கி ஒருநாளு குறுக்க, மறாநாளு ரெண்டு பேருந்சம்பந்தி, எதுப்பொண்ணு கட்டிக்கிறது. இந்தநாலு வருசமாக் கூத்தாடி அவந்தொச்சமா வெச்சிருந்தது அந்த மூவராயிரம் உருவா மொள்ளதான். அன்னிக்கி இருந்த பசையில ஆத்தர அவசரத்துக்கு கேட்க றாங்கன்னு ஈடுமானம் வாங்கிக்கிட்டுத்தான். காசக் குடுத்தான், அதயே தொழுவாடாப் பண்ற வள்ளலுமயிரு அவனுக்கு தெரியாது, அவன் அப்பேருகந்த ஆளுமில்ல, பழவுன தோசத்துக்கு ஒரு ஒதாரண நெனைக்கப்போயி பங்கம் வந்துட்டது.
வாங்கனவிகளச் சொல்லிக் குத்தமில்ல. அவிங்க குடுத்த தெல்லாம் ஒரு நாலணாப் பாக்கியில்லாம திலிப்பிக் குடுத்துட்டாங்க, இவனேத்தான் இவந்தலயில தட்டப்பொருத்தி வெச்சிக்கிட்டான், இந்தப் பித்தியா வாத்தியாருமாருங்க இவனுக்குச் சொல்லிக் குடுத்தாங்க?
மொதமொத பொன்னான் வாத்தியாரிண்டதான் இவங்கூத்துப் படிச்சது, கொன்னவாயனாக் கெடந்தவன வாய்கூட்டிப் பேச வெச்சி, பாட்டும், அடவுஞ் சொல்லிக் குடுத்தது அந்தப் புண்ணியவாந்தான்.! மவராசன குளுந்த நேரத்துல நெனைக்கனும்.! ராவுல கும்புட்டுட்டுப் படுக்கணும்.! என்னா அந்தாளுக்கிட்ட ஒருசிக்கலுன்னா எதயுத் திருத்தமாச் செய்யணும், இல்லையின்னா அவன் எதுப்புற நிக்க முடியாது. என்னாப் பண்டுவான். ஏதுப்பண்டுவான்னு அவனுக்கே தெரியாது. ஒரெட்டு ஆருலுப்பட்டி ஏரிக்கி அந்தாட்ட வெள்ளக்கல்லுப்பட்டியில முனியப்பந்தெவத்துக்கு கூத்துவுட்ருந்தாங்க, நளதமயேந்திரிக் கண்ணாலம் நாடகம்.! பொன்னாவிக தம்பிக்காரன் மணிப்பையன், நளச்சக்கரவர்த்தி வேசம்போட்டுக்கிட்டு வெளிய போனவனுக்கு சவய அடக்கிப் பேசத்தெரியில. அவம்பாட்டுக்கு என்னென்னம்மோ ஔப்பரிச்சிக்கிட்டுக் கெடந்தான், பொன்னானுக்கு கோவம் ஒண்ணுந் தாக்குப்புடிக்க முடியல, வலப்பையில வெச்சிருந்த பொறந்தவன் வேட்டிய எடுத்து ஒருப்பாட்டுக்கு ஒருக்க,
“கிழிஞ்சிப்போச்சிப்போ
கிழிஞ்சிப்போச்சிப்போ”!ன்னு
ஒருச்சாணுத்துணி மிச்சமில்லாம நூலு நூலாக் கிழிச்சியெஞ்சிப்புட்டான். விடிஞ்சி மணிப்பையன் முண்டக்கட்டயோட ஊரு மூப்பமூட்ல போயி பழைய வேட்டி வாங்கி கட்டிக்கிட்டு ஊடுபோயிச் சேந்தான்.
இன்னோரெட்டு, பக்க நாட்டுச் செட்டுக்கு ஆளுப்பத்தலைன்னு பொன்னானும். அவம்பங்காளி பெரிய கூவானும் போயிந்தாங்க, கொழலுல கூவாம் பேரேடுத்த ஆளு! அபி மன்னஞ்சண்டயோ, அர்ச்சுனந் தேவப்பட்டமோ அதென்னமோவொரு அலங்காரம் வெச்சிருந்தாங்க, பொன்னானுக்கு விடியாலம் வேசம், சேரிச் செத்தபடுத்துக் கண்ணசரலாமுன்னு டேசிக்கிப்பொறன படுதாவ விரிச்சுட்டு படுத்துக்கிட்டிருந்தான். பக்கநாட்டுச் செட்டுல ஆனையப்பன் ஆனையப்பன்னு ஒரு படயாச்சி பொண்ணு வேசக்காரன், அவனொரு சனஞ்சேராத நாயி! பொறத்தியாருன்னா அவனுக்கு பேண்ட பீய திலிம்பிப்பாத்தாப்பல ஓக்காளம், தானுங்கற கெவுரத்தி.
“சீருடன் தொண்டர் நாவில்
செழித்து வளர்பவளே போற்றி!
நாரணன் ஈன்றெடுத்த நான்முகன்
தேவியாளே!
சரஸ்வதி சாரதாம்பா உன்
தாழ்வினை போற்றி! போற்றி! ன்னு”
மூணடி விருத்தத்த முழுசாப் போடல, ஆனையப்பந் தொண்ட பொட்டிய அப்பிடியே கண்ணாப்பின்னான்னு கலைச்சது, மும்பாட்டு பணிக்கில்லையின்னா பிம்பாட்டுத்தான அத நேந்து நெரவுணும். கூவான் நெட்டா ஒரு அகவலு ஊத, உள்றயிருந்த ஆனையப்பன்.
“ஆர்ராவங் ங்கோயா பரதேசிப் புண்டமேல ஒக்க! என்றா கொழலு ஊதற, புண்டக்கொழலு? எங்கயிருந்துடா வர்றீங்க பறத்தாயாலிங்களா எம்பட தாலியறுக்க? அப்பிடியிப்பிடின்னு இன்னும் என்னனென்னம்மோ எச்சா வார்த்த பேசும்பிடி பொறனப் படுத்திருந்த பொன்னானுக்கு ஒவ்வொருச் சொல்லும் இந்த அல்லையிலக் குத்தி அந்த அல்லையில வருது, பின்ன என்னாப்பின்ன தானாடலையின்னாலும் தஞ்சரிகலம் ஆடாதா? எப்பேருகந்த தொழிலாளி? என்னா சேதி? வையகத்துல அவன பழிக்க ஆளுண்டா? குசல நாடகத்துல
சாமியும் வந்தாரா
சண்டைகள் செய்தாரா?
அனுமந்தப் பாலா ன்னு
அவன் ஊதறானே அந்த ஒருப்பாட்டுக்கு ஈடாவானா?இந்த ங்கொக்காளவோலி!
அவங்கால்ல ஒட்ன தூசி! இவனுக்குப்பாருவொரு மண்டக்கணத்த இருக்கட்டுண்டா ஒறக்கழுட்டிமாப்ள!
விடியறதுக்குள்ள உன்ன சின்னம் பண்ணலைன்னா ங்கப்பனுக்கே நாம் பொறக்கலைடான்னு மனசுல வெச்சிருந்தாம் பொன்னான்.
ஆனையப்பங் கழதயாட்டங் குதிச்சிப்புட்டு தர்பார முடிச்சிக்கிட்டு உள்ற வந்தான். மண்டையச் சுத்தி வழிச்சாலும் அவந்தலையில ஒரே மூணு மசுருச் சிக்காது. அக்கியானம் புடிச்சவன், ரெண்டடி சவுரி நால ஓட்டுக்கா வரிஞ்சி அதயே பூவு கீவெல்லாஞ் சிங்காரிச்சி நெத்தியோடச் சேத்தி சடையாட்டங் கட்டிக்கிவான். குதிக்கற முட்டுங் குதிச்சிப் புட்டு வந்து அத அவுத்து வெச்சிருவான்.
அன்னிக்கும் வந்தவன் மசுத்த தளத்தி பட்டிக்குச்சியிலக் கட்டிப்புட்டு வேசம் போட்டுக்கிட்டிருந்த சீனாங்கிட்ட பீடி வாங்கி பத்த வெச்சிக்கிட்டுக் குந்தியிருந்தான்.
மொழங்காலு குழி பொறிச்ச பொன்னான்,அலுங்காம அத அவுத்து குழிக்குள்ற போட்டு மண்ணத்தள்ளி மூடி,மேல படலப் பிரிச்சிப்போட்டு படுத்துக்கிட்டான், நாயம்பேசற முசுவுல ஆனையப்பனும் இதயெதயுங் கண்டுக்கல, அவஞ்சாயிண்டு வேசக்காரன் குஞ்சிப்பையன் தர்பாரு ஆவும்போதுதா எந்திரிச்சி சடயப் பார்த்தான், அது கட்ன தாவுல இல்ல.
“ஆயா ங்கொம்மா" ன்னு
பேசிக்கிட்டு தொழாவு, தொழாவுன்னு தொழாவுனா எங்கப்போயி அதுச் சிக்கப் போவுது? முடி இல்லாம மொட்டத்தலயோட எப்பிடி சவைக்கி வாறது? இவன் வேசத்த பொது வசனமாப் பேசி சரிக்கட்டிக்கிட்டாங் கு ஞ்சிப்பையன். இருந்தாலும் விடியாலம் ஒரு வேசம் வரவேயில்லைன்னு நூறு உருவாச் சொனயான ஆட்டமுட்டவங்க பாணிப்பண்டிப்புட்டாங்க.
அப்பேருகந்த ருஸ்தமான வாத்தியாரிண்ட வித்த கத்து என்னாப் பிரயோசனம்.?
அப்பறம்,
சிறுசுப் பெருசாச்சி, செட்டுங் கந்தறயாச்சி. பொன்னாங் கூப்புட்டுச் சொல்லிப்புட்டான்.
“அடே அடே சத்திப்பையா! இதப்பார்ராச் சாமி, உனக்கு பொழைக்க தடங்காட்டியுட்டுட்டன். நீயிப்போயி நெனப்பா பொழைச்சிக்கடாப்பா, இந்தச் செட்டயும். உங்களையும் கட்டி மாரடிச்சிக்கிட்டிருந்தா எம்பொண்டாட்டிப் பிள்ளைங்க கஞ்சிக்சிச் செத்து வீணாப் போயிருவாங்கடாப்பா”ன்னு.
கோழி, குஞ்சப் பிரிக்கறாப்பல பிரிச்சுட்டு அவரு கூப்புட்டப்பக்கம் கூத்துக்குப் போவ,,,,
சத்திப்பையன் அங்கயிருந்து எடப்பாடிக்கிப் போயி பொன்னியூட்டு மண்டயங்கிட்டச் சேந்தான், மண்டயன் ராவுலக் கூத்தாடி, பவல்ல சந்தப் பீச்சாண்டி.!
மொவங்கழுவி கண்ணாடிய எடுத்து, மின்ன வெச்சி வேசம் போட ஆரம்பிச்சா, அந்தக் கூறுமுஞ்சி காட்ற சேட்டைக்கிப் பயந்தே முக்காவாசிப்பேரு அந்த செட்லயிருந்து ஓட்டம் புடிச்சிருக்கறாங்க. நாயம் அநியாயங்கறது அவந்தலக் கட்டுக்கே தெரியாது, எல்லாந் சுதாரிச்சியிருந்தா எதோ ரெண்டு விசியஞ் தெரிஞ்சிக்கலாம்.
பேயிக்கி தாலிக்கட்னப்பொறவு சுடுகாட்டுக்கு பயந்தென்னா ஆவப்போவுது ? இவம் பாவம் படாத நிமுசுப் பட்டுக்கிட்டு அவனே கெதியின்னுக்கெடந்தான், மண்டயனுக்கு ஒரு கூத்தியா கந்தாயி, கந்தாயின்னு அவனோடவே இருந்தா கூத்தாடிக்கிட்டு. குஞ்சாம் பாளையத்துல ஒரு ஆட்டத்தன்னிக்கி சத்திப்பையந் தல கழுவிக்கிட்டு வந்துருந்தான்.
மைப்பந்துப்போட்டு ஊற வெச்ச எண்ணயப்பூசி பூசி அவனுக்கு மொழங்காலுமுட்லும் மசுரு, என்னதாஞ் சிக்கெடுத்துச் சீருப்பாத்தாலும் முடிஞ்சக்கொண்டய அவுத்தா அதோட மல்லுக்கட்டிதாம் படியவெக்கணும்!. வாக்கு அவ்வளச் சீக்கரம் பிரியாது. இவம்பாவம் கவடத்து
"கந்தாயிக்கா, கந்தாயிக்கா! இந்த தலயச் சித்த நேரெடுத்து ரெட்டச்சடப் போட்டுவுடுக்கா” ன்னு
கேக்க, அவளும் பாவஞ் சூதுவாது தெரியாம வாடா தம்பியின்னு ஒக்காரவெச்சி பெரும்பல்லுல நெவு நெவுன்னுச் சீவி ரெட்டச்சடப் பின்னிவுட்டா.
அன்னமுட்டும் மண்டயன் அவள நோட்டம் பாக்கறது ,பையன நோட்டம் பாக்கறது, வேசம் போடறதுன்னு கொறவனாட்டங் குந்தியிருந்தான். சத்திப்பையன் எந்திரிச்சி சீலயக்கட்டி சலங்காயக் கையிலெடுத்து,சாமிய வருந்தி கால்லச் சுத்திமுடிப்போட்டுக்கிட்டு, அரினனா,,,னா.ன்னு ராகம் போட்டான், கிடீர்னு ஒரு வொத கந்தாயிப்பிள்ள அல்ல வவுத்தக்கட்டி வுழுந்ததுப் பாரு, வடக்கத்தி படலோட அய்யோ யெஜ்ஜான்னு பொம்பள புழுதிக்காட்லப் போயி வுழுந்தா.
"ஏண்டி தேவிடியா! கொண்டவங் கொடுங்கையில, கொள்ளாதவன் உனக்கு மாரு மேலயாடி"ன்னு
மண்டயன் மூக்குல புளுத்துப்போயிக் கேக்க, சத்திப்பையன் நெட்டா அவங்காலடியில வுழுந்து
“அய்யோ வாத்தியாரே தப்பித் தவறிக்கூட உன்னு வாயால அப்பிடிச் சொல்லாத வாத்தியாரே அந்த தாயி ங்கம்மாளோட ஒணணு வாத்தியாரே”ன்னு
கெஞ்சிகெதர்றான்.
“ஏண்டா ங்கோயாலோக்க மொளச்சி மூணெலவுடல அதுக்குள்ள கூத்தியாச் சேத்தறயா கூத்தியா" ன்னு
வுட்டாம் பொத்துன்னு அவனுக்கு ஒருவொத! தெக்கித்திப்படலோட அவனும் புழுதிக்காட்ல போயிவுழுந்தான், வொதயத் தின்னுப்புட்டு என்னம்மோச் செரிக்கட்டி பொழுத ஒட்டி கதய முடிச்சி மங்கலம் பாடனாங்க. விடிஞ்சது, வேசத்த அழிச்சிப்புட்டு இவம்போறதுக்குள்ள மண்டயன் பைட்டேண்டு மோரிமேல தலகிழுதா கெடந்தாங் குடிச்சிப்புட்டு.
"வாத்தியாரே சம்பளம் வாத்தியாரே"ன்னு
பையங்கேட்க அந்த ஒணவு கெட்டவன் துள்ளிக் குதிச்செந்திரிச்சி,
"டே செட்டுக்கு வந்தமா குடுத்த வேசங்கட்டி ஆடனமான்னு உன்றச்சோலி மசுர பாத்துக்கிட்டுப் போயிக்கிட்டேயிருக்கனும், சம்பளங் கேக்கறப்பாரு, இந்தவொரு வேலப்புண்ட மட்லும் எங்கிட்ட வெச்சிக்காத"ன்னுப்புட்டு
திலுப்பியுங் குப்புற அடிச்சிப்படுத்துக்கிட்டாம் போதயில, என்னமுட்டும் நின்னுக்கிட்டிருக்கறது? பொட்டியத் தூக்கி தலமேல வெச்சிக்கிட்டு பதனெட்டு மைலு நடந்தேப்போயி வூடுச் சேந்தான்,
மண்டயங்கிட்ட சின்னப்பட்டு சீரழிஞ்சி ஒண்ணும் மோசம் போவல, ஒரு நல்லகாலம் பொறந்தது, மணிப்பையம் மறுக்கவுஞ் செட்டுக் கட்டனான், சத்திப்பையன் நாயா பேயா ஒழைச்சான், உருப்பிடியா தொழிலச் செஞ்சான், நாலுபேரு பரவால்ல சத்திப்பையன் வேசம் நல்லயிருக்குதுங்கற ரெவலுக்கு வந்தான், பொறவு சத்திப்பையன் இல்லையின்னா ஆட்டம் நெறக்காதுங்கற அளவுக்கு ஆச்சி, அவங்கையில ஒரு நூறு எரநூறு பொழக்காட்டம் போட்டது, அப்பறம் பாத்துக்க மாப்ளைக்கி கொம்பு மொளச்சிட்டுது, அறுப்புக்காலத்துல பெருக்கானுக்கு ஆறேழு கூத்தியாருன்னு சும்மாவாச் சொன்னாங்க?
பண்ணாடிக்கி போனபக்கம் பொண்டுங்க தொடுப்பு! பொழுது விடிஞ்சாலும் நழிச்சலு, கூட சீசாத்தண்ணீயும் போட பழவிக்கிட்டான், என்னம்மோ ங்காயா மேச்சேரி பத்ரக்காளி மொவம் முழிச்சி அவஞ்சாரீரத்த கெடுத்து பொழப்பல மண்ணள்ளிப் போடாம வுட்டுவெச்சிருந்தா.
இந்தக்கத இப்பிடியிருக்க.
சத்திப்பையனோட வீரப்பன் வீரப்பன்னு ஒரு குளுவன், அவனும் பொண்ணு வேசக¢காரஞ் செட்ல ஆடிக்கிட்டுயிருந்தான், பெருமைக்கிச் சொல்லல, தாயாலிக்கி கத்தியாட்டத்தொண்ட, முடிஞ்ச மட்லும் அவனும்பாவம் செட்டுக்குப் பாடுபட்டான், பாஞ்சாலக் கொறவஞ்சி நாடகம் வெச்சி அதுல இவங்கொறத்தி வேசங்கட்டிக்கிட்டு
சத்தியதுரோபதைக்கி தருமதயாளரும் விடையளித்து
சித்தமுங்கலங்கிவாடி தயங்கியே இருக்கும்போது
பத்தினி ரூபம்மாறி பாலனை இடுப்பில் வைத்து
அத்திமாநகரம் நோக்கி அம்மனும் வருகின்றாளே!ன்னு
விருத்தம்போட்டு
பாஞ்சால குறவஞ்சி வந்தாளே- பாலனையேந்தி
பாஞ்சால குறவஞ்சி வந்தாளே
பாஞ்சால குறவஞ்சி வந்தாள் பார்த்தாவ- பாலனாயேந்தி
செஞ்சிபதியாளுமம்மன் சிரசினில் கூடைவைத்து
நினைத்தகுறி தானுரைக்க நீலவர்ண மாயவரே
நீரும் வந்துதவவேணும் நினைத்தக்குறி சொல்லவேணும்
அக்கினியில் வந்துதித்து ஐவருக்கும் தேவியாகி
அக்யாதவாசம் விட்டு அத்திபுரம் போகலானேன்
முத்துமணிரத்தினங்களால் முடைந்து கட்டும் கூடையேந்தி
மூடனிட வாசலுக்கு முறைசொல்லப் போறேன் சாமி
சண்முகனார் அளித்த சதிரான கூடையேந்தி
சண்டாளன் வாசலுக்கு தான்போக நீதியாச்சே
ஆயனே மலர்கண்ணா அண்ணா அவரவர்க்கு குறியுரைக்க
அத்திபுர வீதிவந்து அமர்ந்திருக்க வேண்டும் சுவாமி.
மாபாவி துரியராசன் மானபங்கஞ் செய்திருக்க
மடையனிட வாசலுக்கு மாதுபோக காலமாச்சே
வனமாய் வனங்கடந்து வந்தேன் இருண்டவனம்
அந்தவனந்தனிலே ஆயனே துணை வருவாய்-ன்னு
இந்தப்பாட்ட பாடிக்கிட்டு வெளிய வந்தான்னா அடேயெங்கப்பா அவங்கொறத்தி வேசத்த அடிச்சி ஆட இன்னொருத்தன் பொறந்துதான் வருணும்.
மணிப்பையனும் மத்தாளக்காரன் பள்ளிப்பட்டி பெருமாளும் ஆளுங்க நெலவரத்தக்கண்டு செட்டுச் சம்பளத்த நேக்கா ஏப்பமுட ஆரம்பிச்சிக்கிட்டாங்க மூவாயிரஞ் சம்பளம் வாங்கனா ஆயிரந்தள்ளி ரெண்டாயிரம் போட்டுப் பிரிக்கிறது, ரெண்டாயிரஞ் சம்பளமின்னா உருவா ஆயிரந்தாங் கணக்கு, சத்திப்பையன் ஒருநாளு
“அடேய் நல்லவாயஞ் சம்பாரிக்கறத நாரவாயந் திங்கறாப்ல திங்கறிங்க. தின்னுத் தொலையிங்க, தூரந்தொலயா இருந்துப் பாவம் பத்து இருவது பஸ் சார்சுப் போட்டுக்கிட்டு வர்ரான் வீரப்பன். அவஞ்செலவுக்கு உண்டானத ஒரு அஞ்சிப்பத்து சேத்திக் குடுங்கடான்ன ததுதாம்ப்பா"....
“அடடா கூத்தாடிங்களே! பரவால்ல நல்ல நாயம் பேசிப் படிவிட்டீங்க. எங்களுக்கு தெரியாதாச் சம்பளம் பிரிக்க. குடுக்கறத்த வாங்கிக்கணும். கொலாய மூடிக்கிட்டு இருக்கணும், இதுதாஞ் செட்டு நடமொற! நாங்க வர்றவிங்கள வான்னுஞ் சொல்லல, போறவிங்கள வேண்டாமின்னுஞ் சொல்லல, இந்த சரோசாதேவியும் கே,ஆரு, விசியாவும் இல்லையின்னாச் செட்டு மாண்டாப் போவுது இல்ல பூன'கண்ண மூடிக்கிட்டா பூலோவம் இருண்டுப்போயிருமா?" ன்னு
கீட்டகம் பேசும்பிடி சத்திப்பையன் விசுக்குனு கௌம்பி வூட்டுக்குத் திலும்பிக்கிட்டான், மறாவது நாளு கூத்து இவனும் வீரப்பனும் போவாம நின்னுப்போச்சி. மணிப்பையஞ் சைக்கிலு எடுத்துக்கிட்டு சத்திப்பையமூட்டுக்கே வந்துட்டான்.
“என்றாச் சத்தி இப்பிடி சல்லியம் பண்றாப்ல பண்டிப்புட்ட? நீ பேசி வாங்கன வெத்தலப்பாக்கு, ச்சாமிச்சாமியா இருப்பியாம், இன்னிக்கி ஒரு நாத்திரியும்வந்து ஆடிக்குடுத்துர்றா. இல்லன்னா ஊருக்கரவத்தானுங்க ஈட்டுக்குச் சிக்கிப்போயிரவமுடா”ன்னு
அவங்கிட்டயும் அங்கயிருந்தபொண்டு பிள்ளைங்ககிட்டயும் நாயஞ்சொல்லி அழுவாத கொடுமயா கூப்புட, இவனுஞ் சேரி சேரின்னு போனான். போயி வேசம்போட்டு ஆடனான், விடிஞ்சி பெருமாளே வந்து இவங்கிட்டப் பேச்சிக்குடுத்தான்.
“ஏண்டாச் சத்தி நீரடிச்சி நீரு வெலகுமாடா? அப்பிடி என்றாப்பா நாஞ்சொல்லப்புட்டன்னு உனக்கு பொணக்கு வந்திரிச்சி, என்னம்மோ ஒரு பெரியமனுசன் வௌயாட்டுக்குப் பேசனா அதப்போயி கூரியமா மனசல வெச்சிக்கிறதா”ன்னு
கொழையிறான். கொணாய்க்கிறாஞ்சும்மா, இவனும் தொலையிதுடான்னு இருக்க அன்னிக்கி திருப்பியும் உருவா அயிநூறத்தின்னுப்புட்டாங்க நெண்டுப்பேரும், இவனும் வீரப்பனும் ஒரே முடுவாச் செட்டுக்கு போறதில்லன்னு தீருமானம் பண்டிக்கிட்டாங்க.
ஆட்டத்துக்கு போவலையின்னாச் சோத்துக்கு ஆரு குடுப்பா? அதும்போவ ஆடனகாலும் அவுசாரி போனப் பொச்சும் சும்மாயிருக்குமா?
கெடயில காலுத் தங்காம நத்தமேடு குளுவவமூட்டாரோட நாளு ராத்திரிக் கூத்துக்குப் போனாஞ் சத்திப்பையன்.
ஆரு ஆரோ ஆடறாங்க! பல பட்டறயுங் கூத்தாடுது அடோ சாமீ! கூத்துக்குன்னுப் பொறந்தவிங்க குளுவமூடுதான் நண்டுச் சிண்டு குஞ்சி குளுவான்னு சிறுகால் மட்டத்துலயிருந்து பெருங்காலுமட்டம் மட்லும் எதலயும் பூந்து வந்துருதுங்க அதுங்கச் சமாச்சாரமே வேற.
அவிங்க எசைக்கும் இவனோட எசைக்கும் ஒண்ணும்ரைனு வரல, ஆனா எடங்கண்டு பேசி தடங்கண்டுப் போறது எப்பிடின்னு அவிங்கக்கிட்டப் படிச்சிக்கிட்டான் உன்னப்பாரு என்னப்பாருன்னு கெழுடு கிண்டுங்களப் பாத்துக்கிட்டு எத்தன நாளைக்கி ஊட்டுல குந்தியிருக்கறது, அதும்பொறவு தொரசங்கட்டி ஏகாபுரத்துச் சுப்ருண்டப் போயி எடஞ்சேந்தான் அலங்காரத்துக்கு.
சுப்புரு ஒத்த உருவாயாயிருந்தாலுந் சேரி இன்னொருத்தங் காசுக்கு ஆசப்பட மாண்டான் ஒலக அனுப்பவம் தெரிஞ்சவன் எடப்பாடி மகுடஞ்சாவடியக்கட்டி, கெழக்க சேலம், தெக்க ராமக்கல்லு ஒருக்கோடியா பேரு தெரிஞ்ச கூத்தாடி. கொணம் மணம் ஆட்டம் பாட்டமின்னு, அவஞ்சங்கிதியே தனி. கச்சிதமான தொழிலாளி, நெலக்கடயானப் பாட்டுக்காரன். பதனெட்டாம் போர்க்களம் வெச்சி இவந்துரியோதனங்கட்டி,
“பாராளுந் திறமையிலாப் பாவியானேன்
பஞ்சவர்மேல் போர்தொடுத்தே விருதாவானேன்
தூறாதமரம்போல வொண்டியானேன்
துணையிழந்த பேடதுபோல் தவிக்கும்பாவி
நாராசங்காச்சிவிட்ட பான்மை போலே
நடுநடுங்கி மெய் சிலிர்த்து துரியன்தானும்
பொறாமையுள்ள சகுனி சல்லியன் சூழப்
போர்களத்தைக் கண்டு குறைமேற்கொள்வானே”
ன்னு, விருத்தம் போட்டு,பொறவு
பாவி துரியன் வந்தனன் ரணகளத்தில்
துரோகி துரியன் வந்தனன் ரணகளத்தில்
பாவி துரியன் வந்தேன் பாராச் சமர்களத்தில்
ஒண்டிக்கி ஒண்டியானேன் ஒருமரத்தோப்பானேன்
சிந்தனையில்லாது சிறகிழந்த பட்சியானேன்
பாவி துரியன் வந்தனன் ரணகளத்தில்”
ன்னு, பாட்டுப்பாடி வெளிய வந்து, படுகளத்துல வீமங்கெதயில அடிப்பட்டு காலொடிஞ்சி சாவற முட்டும் அவனப்பாத்து அழுத கண்ணுச் சிறுத்துப் போயிரும். சுப்புரிண்டப் போனப்பொறவு பரவால்ல. நல்லச் சேம்பரம் வரும்பிடிக்கும் ஒண்ணும் பஞ்சமில்ல.
கண்ணுச் சாளேசுரத்த கெவுணிக்க கெதியில்லாம திண்னையக் காத்துக்கிட்டு கெடந்த அவிங்கப்பங் கருப்பன மதுர கண்ணாசுப்பத்திரிக்கி கூட்டிப்போயி ஆப்பரேசன் பண்டி கண்ணாடி மாட்டிவுட்டான். மூட்டு வலியின்னும் மொழங்காலு வலியின்னும் வருசக்கணக்கா நடயில்லாம பாயிக்கி தொணயாப் படுத்துக்கிட்டிருந்த அவங்காயா செவிடிய ஈரோட்டு எலும்பாசுபத்திரிக்கி கொண்டி வைத்தியம் பாத்தான். அவந்தாயி தங்கப் பொண்ணூட்டுப்பிள்ள வயிசிக்கி வந்திச்சி, அதுக்கு அரப்பவுனு தோடு மூக்கித்தி ஆயிரம் உருவாயிக்கிச் சீலத்துணி மணி பதனேழு தட்டு வரிசயோட புளியம்பட்டி பல்லனையும் ஒலகடம் பூவரசனையுங் கூட்டியாந்து நையாண்டி கரவ முட்டாட்டி தெரட்டிச் செஞ்சாஞ் செரீங்கறாப்பிடி.. வவானித் சித்தாத்துல ஒருப்பொண்ணப் பாத்து அவனும் ஒரு கண்ணாலங் கார்த்திச் செஞ்சிக்கிட்டான்,அரமணைக்கிவொரு ஆம்பளப்பையனையும்,ஒரம்பரைக்கிவொரு பொட்டப்பிள்ளயையும் பெத்துக்கிட்டான், ஏழப்பால பொழச்சிட்டுப் போவுதுன்னு ங்கெப்பன் மவராசன் எம்,சி,யாரு அவிகப்பனும் ஆயாளும் போயி சம்பாரிச்ச சொத்துல காலனிக்கட்டிக் குடுக்க, அதுக்கொரு அய்யாயரம் வாக்கரிசிப்போட்டு சொந்த வூடுங்கட்டிக்கிட்டான்.
இதெல்லாம் மூணு நாலு வருசத்திக்கி மிந்தின ராமாயணம் மகாபாரதம், சுத்தமா இந்த வருசமும், போன வருசமும் பையம் பட்ட சித்ரவத பகவானுக்குதாந் தெரியிம், நேத்து வந்தானாங்குடி அவந்தலயில வுழுந்திச்சாம் இடிங்கறாப்பிடி உள்ளங்காலு வெள்ள எலும்பு தேய ஓழைச்ச சம்பாரிச்சி கட்ன வூட்ல எண்ணி எட்டு மாசங்கூட இந்தப் பையன் இருந்துப்பொழைக்கல.
மேக்க அந்தியூருக்கு அந்தல்ல எழுதிய மரத்தய்யங்கோயிலுக்கு கூத்தாடிப்புட்டு கழுத்துமுட்டும் கவட்டான் வரிச்சிக்கிட்டு வந்து மப்புல அவம் மச்சாங்காரன கண்டாரக் கழுதயின்னு பேச அவனிருந்துகிட்டு “இதாப்பாரு கடவுளே! என்னம்மோ கெடந்துசாட்டாவுது, நம்ப தங்கச்சிப் பிருசன் நம்பதங்கச்சிப் பிருசன்னு இத்தன நாளா நானும் வெச்சிப்பாத்தன், இன்னமேட்டும் போதப்போட்டுக்கிட்டு வந்து ஒரு வயசிப்பிள்ளைங்க இருக்கற எடத்துல நேந்தப்பிடி கொச்ச கோளாறு பேசிக்கட்டு திரியற வேல
நம்பளுக்குச் சுத்தப்படாது, மட்டு மரிகேதிய கெடுக்கறதுக்கு மின்ன வூட்டவுட்டு அந்தண்ட தாண்டிக்க”ன்னு
ஒரேவார்த்தயிலச் சொல்லிப்புட்டாங் கறாரா.
வெத்து மேலுல ஈமிய்க்க துணிமணியில்லாமக் கெடந்தவன் சிவுக்குனு எந்திரிச்சி சிண்ட ஒதிறித் தட்டி முடிஞ்சிக்கிட்டு இடுப்புலயிருந்த ஒட்டுக்கோமணத்தோட அப்பனாத்தா பொண்டாட்டி பிள்ளைங்கள கூட்டிக்கிட்டு அம்மாபேட்டைக்கி வந்து, பரசத்தாட்டி பூலாம்பட்டி வந்துட்டான்.ஆறுமாசம் ஒருவருசம் ஆவுமிந்தியே,அப்பனையும் அம்மாளையுந் தின்னு தண்ணிக் குடிச்சிப்புட்டான். அம்மா செத்த எலவுக்கு பொண்டாட்டி மூக்குல. காதுல இருந்தது அடவுக்குப் போச்சி, அப்பஞ்செத்த காரியத்துக்கு அந்த மோதரமும் வாஸ்சும் போச்சி.
மின்ன மாதரயா நோம்பி நொடிக்கி ஆட்டமுடறாங்க? இப்பத்தாங் குண்டியாட்டம் பாத்துப் பழவிக்கிச்சே சனம், எடவெளியே இல்லாம அலங்காரமா வந்து குமிஞ்ச எடத்துல கூத்துங்கறதே அறுதியாயிக்கிச்சி, கூழோ. கலியோ. கூப்புனு அரிசிச்சோறோ கொல நனஞ்சாப் போதுமின்னு வவுத்துப்பாடே பெருசாப்போச்சி, இதல எங்க அடமானத்த மூக்கறது, ஆறு மாசத்துல வட்டியும் மொதலுங்குடுத்தவனுக்கு இன்னிக்கி. நாளைக்கின்னு சாக்குச் சொல்லியே வருசம் ஒண்ணத் தாட்டியாச்சி.
தலமேல இருக்கறச் சொமயா கொண்டாடா நாஞ்சித்த தூக்கியாரமின்னு வாங்கிக்கிறதுக்கு உருவாச்சமாச்சாரம், இந்தக் காலத்துல ஒருத்தம் பொழைக்கறதப் பாப்பானா? பெறத்தியாங்கயிட்டத்தப் பாப்பானா? நகுலூருச் சுப்பனும். சௌந்தரங் கோமாளியும் ஆன முட்டும் இவஞ்சொல்ற தவுமானத்தக் கேட்டுக்கிட்டாங்க, ஆனாக் கண்ணாலக் காரியமாச்சே ஒரு நவ நட்டு இல்லாம எப்படி? பாக்கற வரைக்கும் பாத்துட்டு சுப்பஞ் சுருக்குனு ஒருச்சொல்லு சொல்லும்புடி சொல்லுப் பொறுக்க மாண்டாம ஒடி பனங்காட்டு மொண்டிச்சிக்கிட்ட ஒத்தைக்கி டவுலு கந்து வட்டிக்கி காசவாங்கி மோதரத்தையும் வாஸ்சயும் மூட்னதெல்லாம் மிந்தாநேத்தே மூட்டிப்புட்டாள் ரெண்டுநாளா ஆடவேண்டிய ஆட்டம் மழைக்கி நிக்கிம்பிடி அவுங்களும் நேர்ப்படல, மக்யாநாத்து சலகண்டபுரம் மதுர காளியம்மன் கோயில்ல அலங்காரம் இருந்தது, நேர்ல கொண்டி குடுக்க மொடப்பட்டுக்கிட்டு சேரி அங்க வந்தா பொருள ஒப்படச்சிப்புடலா மின்னுச் சிலேட்டமா இருந்தான். வெனய தேடிக்கிட்டான்.
செட்டுக்குப் போயும் தரித்தினியம் தொலயில, நீட்டாத கைய நீட்டி வாங்காத பக்கம் மொள்ளய வாங்கி வெச்சிட்டமே. எடப்பட தடப்பட எங்கியாச்சும் கூப்ட்டப்பக்கம் போயி பத்தஞ்சி ரெண்டு உண்டுன்னாச் சம்பாரிச்சாத் தானே கடங்கட்ட முடியிமின்னு மத்த செட்டுக்கும் போயிக்கிட்டிருந்தாம் பையன்.
வடச்சட்டிக்கிப் பயந்து அடுப்புல வுழுந்தாப்பிடி ஆயிப்போச்சி அன்னிக்கி இவங் கூத்துக்குப் போன கத, நம்ப சங்கிரி அஞ்சிப்பனையாண்ட கொரங்கச்செட்டுதுதாஞ் சதுரு, ஆனா கூத்துவுட்ட கரவத்தானுங்க பொண்ணு வேசத்துக்கு இவந்தான் வேணுமின்னு தனிச்சம்பளத்துக்கு பேசி வண்டிப்போட்டுக் கூட்டிக்கிட்டுப்போனாங்க.
கொரங்கனோட கூத்தாடறதும் ஒண்ணு அந்த நறவல்ல காலு வெக்கறதும ஒண்ணு, ஆலாமரத்துலக் குந்திக்கிட்டு கொரங்கு எம்புளுலேச் செம்புளுலுன்னுத் தடவித் தடவிப் பாக்குமாமே அந்த மாதர
ஒருச்சுக்குந் தெரியலைன்னாக் கூட என்யைவெட பெரிய புளுத்தி எவனுமிந்த பூமியிலியே இல்லம்பான், அவனோட ஒராளு வேசம்போட்டு ஆடுதுன்னா அவனுக்கு அடங்கித்தான் இருக்கணும், கடுகத்தன மீர்றதுக்கில்ல, அப்பிடி எங்கியாச்சுந் தப்பிடியா ஒருத்தங் கொண்டயம் போட்டுட்டான்னா இவன் விடியறதுக்குள்ள எதோவொரு வகயில அவன மொக்கப்பட்டம் பண்டிப்புடுவான், அரியானூரு பழனிசாமியிலிருந்து தானாதியூரு அர்ச்சுனன் முட்டும் அவஞ்சில்ரப்பித்திய செருப்பலடிக்காதவங்களே இல்ல, துரோபத துயிலு நாடகம், மடத்தூரு ஆறுமொகம் திரியோதனன், கொரங்கந் துச்சாதனன் சத்திப்பையம் பாஞ்சாலி. செட்டிப்பட்டி சின்னாளு அர்ச்சுனன். சித்தூரு பழனி தருமரு, திரியோதனந் தர்பாருக்குப் பொறன பாண்டவரு அஞ்சிபேரும் தர்பாரு ஆனாங்க, பகடயாட்டம் முடிஞ்சி. துச்சாதனன் துரோவதி சந்திப்புக்கட்டம்.
“மதித்த துரோபதையே நீதான் மானமுள்ளவளே யானால்
தித்தரும்நூற்றோர்அன்புவேணும்என்பவளேயானால்
கொதித்திடும்எந்தன்அண்ணன்கொலுவிற்குவரவேச்சொன்னார்
எதிர்த்துரை சொல்லாமல் யென்பின்னே வாராய¢“
“மட்டும் மருங்கும் மரியாதி இல்லாமல்
பொட்டெனவே எனையழைத்த
புத்தியில்லா மைத்துனரே
தோற்றமுடி உங்கள் அண்ணன்
சூழ்ந்திருக்கும் சபையில் என்னை
இட்டு வரச் சொன்னவிதம் எனக்கறியச் சொல்வாயே“
“வள்ளியே தருமபுத்திரன்
வலிவந்த சூதுமாடி முன்னிலும்
நாடுநகரம் முழுவதும் தோற்றான் பெண்ணே!
தன்னையும் தோற்றான் தம்பிமாரையும்
தோற்றான் உன்னயுந் தோற்று நின்று
ஒடுங்கினான் வந்து பாராய்“
“என்னையும் சொக்கட்டானில் வைத்து
இசையவே தோற்றார் என்றால்
என்மன்னவர் ஐந்துபேரும் வரவழைத்திடுவார்
காண் உன்னயும் யார்தான்
கண்டார் உன் தமையைனையும் யார்
தான்கண்டார்? பின்னமா பேசாதே
பேசாமல் நடந்திடுவாயே“
“நடக்கத்தான் வந்தேன் வந்தேன்
ஒரு நாழிகை தனிலே யுன்னை
ஒடுக்கத்தான் வந்தேன் வந்தேன்
வேந்தர்கள் சபையின் முன்னே
கெடுக்கத்தான் வந்தேன் வந்தேன்
கெர்வத்தை அடக்க வந்தேன்“
“துரோகியே இதுவென்ன சொல்லடா
என்னை தொடவேண்டாம் தூரநில்லடா
நெருப்பென்று தெரியாது நீசனே நீயாடாதே
கருத்தினால் கெட்டு வீணாய்க் கருகிப்போகாதே“
“தொட்டு இழுக்காமல் போவேனோ
போனால் துரியந்தம்பி ஆவேனோ
செத்தமாடும் பில்லுத் திங்குமா இனி
உஞ்சித்திர மினுக்கெல்லாம் செல்லுமா“
இந்த மாதர பாட்டுக்குப் பாட்டு விருத்தத்துக்கு விருத்தம் சத்திப்பையன் வுட்டுக் குடுக்காமப் போடும்படி, கொரங்கனுக்கு வேக்காடு ஒண்ணும் பொறுக்கமுடியல.
"போடுசா பொக்க "
"போடுசா பொக்க "ன்னு
சும்மாவே அல்லையில காரிக்காரித் துப்பிக்கிட்டிருந்தான்.
போடுசா பொக்கன்னா கூட ஆடற வேசக்காரன தொம்பரூட்டு பாசையில நாஸ்தி பண்றது, இவன் என்னாப் பண்டறான், ஏதுப்பண்டறான்னு கண்ணுறுத்துப் பாத்துக்கிட்டிருந்தாஞ் சத்திப்பையன். ஹூம் அவனுக்கா தெரியாது பல தண்ணி குடிச்சவனுக்கு. இருந்தாலும் தொழில தொழிலாச் செய்யனுமின்னு,,, பையங் குட்டு வுடல.
துயிலுரியறக் கட்டம் வந்தது, எப்ப அந்தக்கட்டம் வருதோ,,, தொரவதி வேசக்காரனும். துச்சாதன வேசக்காரனும் இன்னதுதாம் பண்றமின்னு ரக்கு தெரிஞ்சி வெளையாடனும். இல்ல மந்தையில மானங்கெட்டு நிக்கணும், இதுதாண்டா சமயமின்னு எடங்கண்டு ஏறி மிதிச்சாங் கொரங்கன், ஏமாந்த வாக்குல நின்னு,
வசனம் பேசிக்கிட்டிந்த சத்திப்பையஞ் சீலயப் புடிச்சி வெடுக்குனு இழுத்தாம் பாத்துக்க...... அவம் போட்ருந்த படி முடிச்சறுந்து முக்காச்சீல கொரங்கங் கையோட வந்துட்டது. அதறப்பதற அலயக்கொலய இப்பிடிச்செஞ்சா ஆருக்குத்தான் வெறி திலும்பாது? கங்கேடு மதிகேடா நட்ட நடு டேசியில போயிநின்னு சத்திப்பையன்,
“அடே கொழுந்தா! ஏண்டாப்பாவம் இவ்ள கயிட்டப்படற? இப்ப என்னா உனக்கு எம்பண்டத்தப் பாக்கணும் அவ்வளத்தான. இந்துரா பாத்துக்கடா”ன்னு
பாவாடய தூக்கி காட்டிப்புட்டு உள்ற போனவந் திரும்பி வரல, பிதுமாரு கெட்டுப்போச்சி, ஆயிரம் ஆட்டம் ஆடியிருக்கிறான், ஒரு நாளயிலியும் இந்த அவுமானம். நேந்ததில்ல.
பாஞ்சாலி சவதங் கூறாம கதய முடிக்க முடியாது, கூத்துட்டவங்க வந்து கெஞ்சிக் கொறமாட சத்திப்பையஞ் சாராயம் இல்லாம வெளி வரமாண்டேன்னுப்புட்டான், அஞ்சிப்பனையில சாராயத்துக்கா பஞ்சம்? நிழுசங் கொண்டாந்து குடுத்தாங்க சிலுவருப்போவுணி வழிய. சரக்கு அடிச்சிக்கிட்டுப் போயி ஒண்ணா ரெண்டா பாடி சந்தடைச்சிப்புட்டு வந்து வுழுந்தவன் உச்சி வெயிலு பொச்சியில அடிச்சப்பொறன எந்திரிச்சிப் பாத்தா, ஏப்பா கையிலிந்த மோதரத்தையுங் காணம்.! Õவாஸ்சயுங் காணம்! அவ்வளத்தாம் பையம் ஒடம்புல உசுரு இல்ல. கூட்ல ஆவியில்ல, எதக்கண்டு செரிக்கட்றது இருக்கற தொந்தரவ?
ஒடமக்காரஞ் சும்மாயிருப்பானா? மின்னயே “வயித்துக்கு என்றாத் திங்கறன்னு கேட்டுப்புடல? ஊருக்கெணத்தாண்ட ஒக்காந்தி வேசம் அழிக்கறப்பவே சத்திப்பையம்மேல சாவுக்கவுச்சி அடிச்சது, மொள்ள சங்கிரி வந்து அங்கயிருந்து முருகம்பஸ்ல ஏறி பூலாம் பட்டி வந்துச் சேந்தான்.
இவந் தலயக் கண்டதும் பையனும் பிள்ளயும் 'ஓ'ன்னுக்கத்தி கொணாய்ச்சிக்கிட்டு ஒடியாந்ததுங்க, பொட்டியக்கீழ வெச்சிட்டு கையிக்கு ஒண்ணாத் தூக்கயில தாயாலிக்கி எங்கிருந்து அத்தன ஆவுசம் வந்ததோ தெரியல! மென்னு முழுங்கறவனாட்டம் ரெண்டுங்களயுஞ் சொட்டவுடாம கடி கடின்னு கடிச்சி முத்தங் குடுக்கறானேச் சண்டாளப் பாவி!.
கள்ளு முள்ளு தெரியாத நிதானமாயிருந்தாலும் அதுங்களுக்கு நொறுவ வாங்க மறக்க மாட்டான், காலோட பின்னிக்கிட்டு வாற பிள்ளைங்களுக்கு பாலோடச் சோறூத்தலையின்னாலுங் கூட அகங்கைக்கிப் பத்தனத வஞ்சனையில்லாம வாங்கிப் போட்டு திங்கடிப்பான், அன்னிக்கிப்பாவம் வெறுங்கையோடதான் வந்தான், அதுங்களும் பாவம். அதப்பத்தி கண்டுக்கல, அப்பனோட சிரிச்சி மவுந்ததுங்க, ஒருச்சித்தய குடுமியப்புடிச்சேறி வௌயாண்டுதுங்க, போன நாயம் வந்தநாயம் பேசிக்கிட்டு அதுங்க தூங்கறதுக்கே ராவு வெகு நேரந்தாண்டிப் போச்சி...
தூக்கத்துல வில்லிதான், இருந்தாலுங் கடங்காரு வந்து போட்ட ரவுசுல சத்திப் பொண்டாட்டி காத்தாலப் புடிச்சே சோறுத்தண்ணியில்லாம கெடந்தா, வெறும் வவுத்துல எப்பிடி தூக்கம் புடிக்கும்? காலொருபக்கம், கையொருப்பக்கமா மாருமேல கெடந்த பிள்ளைங்கள தூக்கி ஒரு ஒரமாபோட்டுட்டு பொண்டாட்டியிண்ட வந்து படுத்தான், கண்டதும் அவ இவங் கோளாற நெனச்சி அழுதா,,, அழுதா,,, ஒயாம அழுதா.. சொல்ற சமாதானமெல்லாஞ் சொன்னவன் ஒண்ணும் வேலைக்கி ஆவாம பையம் ரவுக்குனு பண்ணயத்துல முசுவா பூந்துட்டான், வேணும் வேணாங்க உப்ப மழ அந்நேரம் பிச்சிக்கிட்டு ஊத்துது, வேர்த்த ஒடம்பு காத்து வேணுமிங்க பிருசனும் பொண்டாட்டியுந் திண்ணையில குந்தி மிய்க்க. மிய்க்க பொழைக்கற நாயம் பேசனாங்க.
காத்துச் சிலச்சிலுப்புக்கு கண்ண சொழட்டிக்கிட்டு வரும்பிடி அவ ஒருபக்கங் கட்டயச் சாய்க்க, இவனும் ஒருபக்கம் சாக்க விரிச்சுட்டுப் படுத்துக்கிட்டான், புருசம்பெருமயில பொம்பளைக்கி மசத் தூக்கம் மாயமா வந்துட்டது..
சத்திப்பையன் சுத்தியும் ஒருவட்டம் எசவிருக்குதான்னு நோட்டமுட்டுட்டு இடுப்புல கைய வெச்சிப்பாத்தாங் குருண மருந்துப்பொட்டலம் பத்ரமாயிருந்தது,,,,ச்சேரி மாடப் பெரையில ஒளிய வெச்சிருக்கற வெராந்திப்பாட்ல எடுக்கனுமே, குந்தனவாக்குல பூனையாட்டம் நவுந்து மொள்ள எந்திரிச்சி, ஒரு எட்டு தரையில வெச்சவன் மறு எட்டு வெச்சான் மவக்காரி மணிக்கட்டுமேல! எளங்கையிக்கும் அதுக்கும் எலும்பு ச்சடக்குனு முறிஞ்சது.
"ரே யெஜ்ஜா" ன்னு
பிள்ள ஒரேக் கத்தா கத்த
"அய்யோ மவளே"ன்னு,
தன்னப்பால பையங்கையி படக்குனு ரைட்டப்போட்டது
அக்கப்போரு - மு. ஹரிகிருஷ்ணன்

அறியாமையின் பாற்பட்டு எனக்கிருக்கும் சில கேள்விகளை வாசகர் மத்தியில் வைத்துவிட்டு அக்கப்போரை துவங்கலாமென்று நினைக்கிறேன்.
மகத்துவமானதொரு சனநாயகம் சமத்துவமாக நிலவி வருகின்ற நமது செந்தமிழ் நாட்டிலே மக்களுக்கான கலை இலக்கியத்தைக் கட்டிக் காப்பாற்ற இயல்- இசை - நாடக மன்றம் என்றதொரு அமைப்பு சீரும் சிறப்புமாக செயலாற்றி வருகிறது.
மேற்சொன்ன அதிகாரப்பூர்வ கலைவளர்ப்பு உரக் கம்பெனியின் செயலாளராக இளையபாரதி என்னும் கவிஞர் பெருமகனார் கொலுவிருந்து பரிபாலனஞ் செய்து வருகிறார்.
உடையவன் பரிமாறுகையில் அடிப்பந்தியில் இருந்தாலென்ன? கடைப்பந்தியில் இருந்தாலென்ன? என்று இந்த பாழாய்ப்போன ஏழை நிகழ்த்துக்கலைஞர்கள் (பனைமரத்து நிழலும் ஒன்று பங்காளி உறவும் ஒன்று என்ற விகல்பம் அறியாத தோற்பாவை, தெருக்கூத்து, கட்டப்பொம்மலாட்டக் கலைஞர்கள்)நாட்டில் என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்ற அரசியல் உணராது, சச்சின் திரைக்காவியத்தில், முன்னே இளைய தளபதி விசய் அண்ணன் தொந்தியும் தொப்பையுமாய் செனிலியா அண்ணிக்கூட குண்டு மாங்காத்தோப்புக்குள்ள வண்டுப்போல வந்தேனே என்று குத்தாட்டம் போட்டபடி காதல் பண்ணிக்கொண்டிருக்க பின்ணணியில் தகீர்தாஜுன திகீர்தாஜுன என்று ஓரடி ஆதி தீர்ப்பில் அடவு பிடித்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள் .கள்ளம் கவடற்று காத்திருக்கிறார்கள் தங்களது கலைச்சேவையுங் கவனங்கொள்ளப்படுமென்று........
"அம்மா நாயி சோறுக்குடிக்க மாட்டிங்குது '' என்ற மகனிடம்
" அப்பனுக்கு ஊத்துடா''என்று தீர்க்கும் பண்ணையக்காரிச்சி கதையைப்போல கடந்த 2006ல் சிலம்பரசன், விஷால், ஜெயம் ரவி, வினித், திரிஷா......இன்னுமுள்ள பெரியத்திரை., சின்னத்திரை கலை ஆளுமைகள் நுப்பத்தொரு பேர்களுக்கு இட்டதுப்போக மீதியொரு நான்கு கிராமியக்கலைஞர்களுக்கு கலைமாமனி விருது வழங்கப்பட்டிருக்கிறது. அன்பர்களே இங்கு என்னை இடறிய ஐயம் என்னவெனில் விழிக்கு அஞ்சனந் தீட்டிக்கொள்ளவும், மொகரக்கட்டைக்கு ஒப்பனைச் செய்துக்கொள்ளவுந் தெரியாத ,மெய்ப்பாடு என்பதை கிஞ்சித்தும் அறியாதவர்தம் ( மொதல்ல பொட்டிக்கி சேத்தி நாலடிப்பாட்டு பாடத்தெரியிமா? விருத்தம் போடத்தெரியிமா? தாளத்துக்கு சேத்தி ரெண்டு அடவதாம் புடிக்கத்தெரியிமா? சொந்தமா வஜனம் பேசத்தெரியிமா? இப்பிடி எதுந்தெரியாத பிசுக்கோத்து பசங்க , பிள்ளைங்க எல்லாங் கண்ணுக்குத் தெரியறாங்க ) அருமை பெருமைகளை கருத்திலிருத்தி கலைமாமனி விருது கொடுத்து கௌரவிப்போர்களுக்கு , வெறும் நாலே நாலு கிராமியக்கலைஞர்கள்தாம் கைக்குச் சிக்கினார்களா?
பாட்டின் பிழை பொறுக்காது அதிகார தகனமெரித்தும் வீழாது தமிழை உய்விக்க வாழ்ந்த கீரனின் வழி வந்த இளையபாரதியாரே! எங்கே உமது நடுவு நிலைமை?
நும் தெரிவு நெறிகளில் நேர்மையில்லை, பழுது, பிழை இருக்கிறது
நானிங்கே இந்த பழைய குப்பையை கிளற முகாந்திரங்களுண்டு..........
இயல் -இசை- நாடகமன்றம் செவ்வனே இயங்கிக்ªகொண்டிருக்கிறது என்றுச் சொன்னேன் அல்லவா.... அது மாத்திரமன்றி
நசிந்து தேய்ந்துப்போன கலைஞர்களின் வாழ்க்கைப் பாதையை செப்பனிடும் முகத்தான் செல்லுப்படியான 2007 ஜூன் மாதம் உரூவா ஒன்றுக்கு மக்களின் வீடு தேடிவந்து அவர்தம் அறிவுத்தாகத்தைத் தீர்த்து வைக்கும் பிரபல்ய நாளேடான தினகரனில் நலிந்த நிலையில் வாழும் சிறந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கான விளம்பர அறிக்கை ஒன்றை இவ்வமைப்பின் முகாமையில் அரசு வெளியிட்டிருந்தது.
அதில் கண்ட பிரதான ஷரத்துப்படி நிதியுதவி பெற விழைவோர்க்கு அரசு நேமித்திருக்கும் வயது வரம்பு 58.
ஐம்பத்தெட்டு வருடத்திற்கு முந்திப்பிறந்த கிராமியக்கலைஞர்கள் அறுதிப்பெரும்பான்மையினருக்கு ஏட்டுச்சுரைக்காயென்றால் என்னவென்றேத் தெரியாது
பூர்த்தியாக எல்லோரும் கைநாட்டுப் பேர்வழிகள்!
ராவெல்லாம் கூத்தாடிவிட்டோ, பறையடித்துவிட்டோ, பொம்மையாட்டிவிட்டோ வருவோர் சோறுத்தண்ணி இல்லையென்றாலும் அகப்பட்ட இடத்தில் தெக்க வடக்க நெப்பில்லாம பொச்ச நெட்டுக்கிட்டு தூங்குபவர்கள்!
நாட்டு நடப்பு கிடக்கட்டுங் கழுதை!
சினிமாக்காரிகளின் விரி தொடையழகு காவிரிச்சி விளம்பரங்களுக்கிடையே இங்ஙனம் வெளியாகும் துக்குளியூண்டு அரசு செய்திகளை ஓதி விளக்கஞ்சொல்ல அவர்களுக்கொரு கதியுண்டா?
நலிந்த கலைஞர்களனைவரும் எண்ணறக்கற்று எழுத்தற வாசிக்க கூடியவர்கள் என்று தாமாகவே அரசு நம்பிக்கொண்டிருப்பது எவ்வளவுப்பெரிய பைத்தியக்காரத்தனம்?
சங்கடத்தில் பிள்ளைப் பெற்று வெங்கட்டம்மா என்று பேர் வைத்தது மாதிரி என்னம்மோ சாங்கியத்திற்கு இம்மாதிரி நலத்திட்டங்களை பேப்பரில் மட்டும் அறிவித்தால் ,போதுமா???
பாமரக்கலைஞர்களுக்கு கருதிய பலன் கிட்டுமா?
முதலில் நிதியுதவி வேண்டுவோர்க்கு படிவத்தில் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை வாசியுங்கள்
"அரசாங்கம்,ரசிகர்கள்அல்லது பிரபல கலை நிறுவனங்களிடமிருந்து தங்களுக்கு விருது, பாராட்டு, சன்மானம் வழங்கப்பட்டிருந்தால் அவற்றின் விபரம் குறிப்பிடவும் சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவும்(மறைந்த கலைஞரின் மனைவி விண்ணப்பிப்பாரெனில் கணவர் பாராட்டுப் பெற்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டும்)" நிபந்தனை-8
" தங்களையும் ,தங்களுடைய கலைத்தகுதிகளைப் பற்றியும் நன்கு அறிந்தவர்களை (தங்கள் துறையில் பிரபலமாக உள்ள)இரண்டு கலைஞர்களிடமிருந்து தங்களைப்பற்றிய பரிந்துரைகளைப் பெற்று இத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் பரிந்துரை வழங்கியுள்ள இரண்டு கலைஞர்களின் முகவரிகளையும் குறிப்பிடவும் முக்கியமானதெனக் கருதப்படும் தாங்கள் பங்கேற்றுள்ள கலைநிகழ்ச்சிகளுக்கான அழைப்பு ,அறிவிப்பு , விளம்பரக்குறிப்பு, ஆகியவற்றினையும் தாங்கள் பெற்றுள்ள பாராட்டிதழ்களின் நகல்கள் ஆகியவற்றினையும் கண்டிப்பாக இணைத்து அனுப்பவும்" நிபந்தனை-9
மேலோட்டமாகப் பார்க்கும்போது எளிமையானவைப்போல தோன்றும் இவற்றைப்போன்றே விண்ணப்பத்தின் பல ஷரத்துகளில் பூர்த்திச் செய்யமுடியாதபடிக்கி பல குளறுபடிகள் உள்ளன. முதலில் கலைஞர்கள் என்றால் அரசுக்கும் சரி அதுவியக்கும் இயலிசை நாடக மன்றத்தார்க்கும் சரி புத்தியில் உறைந்துப்போயிருப்பது சினிமாக்காரர்கள்,டிவிக்காரர்கள் ,கர்நாடக இசைமேதைகள், ஆர்மெச்சூர் நாடகக்காரர்கள் கடைசியாக ஒப்புக்குச் சப்பாணியாக கிராமியக்கலைஞர்களில் ஒன்றிரண்டு ஒயிலாட்ட மயிலாட்ட, கரகாட்டக்கலைஞர்கள் .....
தொன்மையானதும், பழமையானதும், கிராமியக்கலைகளில் நுட்பமானதும் தமிழர்களின் ஒப்பற்ற பண்பாட்டு அடையாளமுமான தெருக்கூத்து முதலிய நிகழ்த்துக்கலைகள்
குறித்த பிரக்ஞையும் அக்கறையும் அவர்களுக்கு சுத்தமாகவே இல்லை.
ஒருவேளை கேட்பதற்கு நாதியில்லை என அறிந்தும் அறியாத சிவமணி போல இருக்கிறார்களோ என்னவோ.....
தெருக்கூத்தை அடியாகக்கொண்டு நிறுவப்பட்ட கூத்துப்பட்டறை போன்ற பிரபல கலை நிறுவனங்கள் சினிமாவுக்கு நடிக ,நடிகைகளை உற்பந்தி செய்யும் தொழிற்கூடங்களாகிவிட்டன. அதன் வாரிசுதாரர்கள்
ஆத்தாக்காரி அம்மணமாம் கும்பகோணத்தல கோதானமாம் என்றமானிக்கி மாநகராட்சிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டேல்களில்,பல்கலைவளாககங்களில் அமைந்திருக்கும் ஏசி பொருத்தப்பட்ட அரங்குகளில் தாம் கற்ற நாடகக்கலையை
வளர்த்துவருகிறார்கள்
இன்னும் சில கலை ஆர்வலர்கள், ஆய்வாளர்கள,தமிழ் பேராசிரியர்கள் இருக்கிறார்கள் அவர்கள் கூத்தாடிகளிடம் வந்து முடிந்தமட்டும் சமாச்சாரங்களைச் சுரண்டிக்கொண்டுப் போய் தீசீஸ் எழுதி பணம் பண்ணுகிறார்களேவொழிய தாம் கண்ணாரக்கண்டு காதாறக் கேட்டு தெளிந்த கலைஞர்களின் கலைத்திறமைகளை, கஷ்ட்ட நஷ்ட்டங்களை குறித்து வாய்க்கும் இடத்தில் இதுகாறும் ஒரேவொரு அச்சரத்தைக்கூட உதிர்த்ததில்லை. (சும்மானாச்சிக்குங்கூட)
இவற்றையெல்லாம் நான் ஏன் சொல்லவேண்டியிருக்கிறதென்றால் தடங்கண்டுப்போய் இனங்கண்டு சிறப்பு செய்யவேண்டிய இவர்களே நிகழ்த்துக்கலைஞர்கள் பால் பாராமுகம் காட்டும் போது.............................
இல்லாத பொருளைக் கேட்கிறார்களே(அரசாங்கம், பிரபல கலை நிறுவனங்கள் வழங்கிய விருது, சன்மானம் பாராட்டு சான்றிதழ்கள்) எப்படி
கொடுப்பது?அதோடு மட்டுமல்ல ஆணோ, பெண்ணோ ஒரு கூத்தாடிக்கி எந்த ஊரில் ரசிகர் மன்றமிருக்கிறது? எந்த ஊரில் தெருக்கூத்திற்கு அழைப்பிதல் அச்சிட்டு விநியோகிக்கிறார்கள்?
ஒத்த உரூவாயிக்கி வெற்றிலை வாங்கி ஐந்தோ பத்தோ அதில் வைத்து வந்து ஆடுங்கடா என்று பண்ணாடிகள் ஆணையிட்டால் முப்பது நாற்பது மைல்களுக்கு அப்பால் கூட சொந்தப் பணத்தைச் செலவழித்துக்கொண்டுப் போய் நடத்துகிற தெருக்கூத்து திடீர் மழை காரணமாகவோ, ஊரார்களின் அடிதடி சண்டை போன்ற அசம்பாவிதங்களினால் தடைப்பட்டு இடையில் நின்று விட்டால் போக்குவரத்து செலவுக்குக்கூட பணம் அவுக்க மாட்டார்கள். பத்தாயிரம் இருபதாயிரம் பெறு மதிப்புள்ள நிகழ்ச்சிக்கு ஒரு உரூவா வெற்றிலைதான் அச்சாரம்.
இந்த லட்சணத்தில் இவர்கள் கேட்கும் அழைப்பு, அறிவிப்பு, விளம்பரக்குறிப்பு, இத்தியாதி போன்ற ஆவணச்சான்றுகளுக்கு வெறும் வெற்றிலை சருகைதான் வைத்திருந்துக்கொண்டுப்போய் காட்ட வேண்டும் ...
ஒரு கலைஞராகப்பட்டவர் அரியணையில் அமர்ந்து செங்கோன்மை செலுத்தி வருகின்ற இந்த பொற்கால ஆட்சியில் சதமானத்தின் அடிப்படையில் பார்த்தால் நூற்றுக்கொரு தெருக்கூத்து கலைஞர் கூட (ஒருங்கிணைந்த சேலம், தருமபுரி,ஈரோடு, நாமக்கல் மாவட்ட) நலிந்த நிலையில் வாழும்சிறந்த கலைஞர்களுக்கான நிதியுதவி வழங்கும்
திட்டத்தின் பயனைப் பெறவில்லை என்பதே உண்மை!
எனக்கு தெரிய நான்கைந்து ஆண்டுகளாக இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தை வாங்கி நிரப்புவதிலிருந்து கோட்டாட்சியர், \வட்டாட்சியரின் வருவாய் விசாரணை அறிக்கை, கையெழுத்து மற்றும் முத்திரை பெற்று மன்றத்திற்கு அனுப்பும் பரியந்தம் பல நூறு உரூபாய்களை கடன்பட்டு அதிகாரிகளிடம் தாரை வார்த்துவிட்டு தனது விண்ணப்பம் போனவழி தெரியாமல் அன்னாடம் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று
"பணமும் வரல ஒரு பாடையும் வரல அப்பிடி எதனாச்சிம் வந்தா வூட்டிண்டையே வந்து வாக்கரிசி போடறம் போ'"
என்று போஸ்ட் மாஸ்டரிடம் பாட்டு வாங்கி வரும் பொன்னான் வாத்தியார் கட்டிலில் கிடையாக கிடக்கிறார் . பல விண்ணப்பங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை விட்டு தாண்டுவதேயில்லை.(ஏற்கப்படாத விண்ணப்பங்கள் குறித்த தகவல்கள் அதாவது இன்னின்ன காரணங்கள், குறைப்பாடுகளுக்காக அவ்விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என்ற விபரம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை.)
கோரிப்பெறுவது வெகுமதியன்று.....ஆனால் அன்பர்களே
குரங்கு அப்பம் பங்கியதுப்போல உரியவர்க்கு உரியதை ஈயாமல் தன் வாயில் போட்டுக்கொள்ளும் நாட்டாமைத்தனம் நெடிய நாட்களுக்கு நிலைக்காது.
இடிப்பார் இல்லா எமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்
மகத்துவமானதொரு சனநாயகம் சமத்துவமாக நிலவி வருகின்ற நமது செந்தமிழ் நாட்டிலே மக்களுக்கான கலை இலக்கியத்தைக் கட்டிக் காப்பாற்ற இயல்- இசை - நாடக மன்றம் என்றதொரு அமைப்பு சீரும் சிறப்புமாக செயலாற்றி வருகிறது.
மேற்சொன்ன அதிகாரப்பூர்வ கலைவளர்ப்பு உரக் கம்பெனியின் செயலாளராக இளையபாரதி என்னும் கவிஞர் பெருமகனார் கொலுவிருந்து பரிபாலனஞ் செய்து வருகிறார்.
உடையவன் பரிமாறுகையில் அடிப்பந்தியில் இருந்தாலென்ன? கடைப்பந்தியில் இருந்தாலென்ன? என்று இந்த பாழாய்ப்போன ஏழை நிகழ்த்துக்கலைஞர்கள் (பனைமரத்து நிழலும் ஒன்று பங்காளி உறவும் ஒன்று என்ற விகல்பம் அறியாத தோற்பாவை, தெருக்கூத்து, கட்டப்பொம்மலாட்டக் கலைஞர்கள்)நாட்டில் என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்ற அரசியல் உணராது, சச்சின் திரைக்காவியத்தில், முன்னே இளைய தளபதி விசய் அண்ணன் தொந்தியும் தொப்பையுமாய் செனிலியா அண்ணிக்கூட குண்டு மாங்காத்தோப்புக்குள்ள வண்டுப்போல வந்தேனே என்று குத்தாட்டம் போட்டபடி காதல் பண்ணிக்கொண்டிருக்க பின்ணணியில் தகீர்தாஜுன திகீர்தாஜுன என்று ஓரடி ஆதி தீர்ப்பில் அடவு பிடித்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள் .கள்ளம் கவடற்று காத்திருக்கிறார்கள் தங்களது கலைச்சேவையுங் கவனங்கொள்ளப்படுமென்று........
"அம்மா நாயி சோறுக்குடிக்க மாட்டிங்குது '' என்ற மகனிடம்
" அப்பனுக்கு ஊத்துடா''என்று தீர்க்கும் பண்ணையக்காரிச்சி கதையைப்போல கடந்த 2006ல் சிலம்பரசன், விஷால், ஜெயம் ரவி, வினித், திரிஷா......இன்னுமுள்ள பெரியத்திரை., சின்னத்திரை கலை ஆளுமைகள் நுப்பத்தொரு பேர்களுக்கு இட்டதுப்போக மீதியொரு நான்கு கிராமியக்கலைஞர்களுக்கு கலைமாமனி விருது வழங்கப்பட்டிருக்கிறது. அன்பர்களே இங்கு என்னை இடறிய ஐயம் என்னவெனில் விழிக்கு அஞ்சனந் தீட்டிக்கொள்ளவும், மொகரக்கட்டைக்கு ஒப்பனைச் செய்துக்கொள்ளவுந் தெரியாத ,மெய்ப்பாடு என்பதை கிஞ்சித்தும் அறியாதவர்தம் ( மொதல்ல பொட்டிக்கி சேத்தி நாலடிப்பாட்டு பாடத்தெரியிமா? விருத்தம் போடத்தெரியிமா? தாளத்துக்கு சேத்தி ரெண்டு அடவதாம் புடிக்கத்தெரியிமா? சொந்தமா வஜனம் பேசத்தெரியிமா? இப்பிடி எதுந்தெரியாத பிசுக்கோத்து பசங்க , பிள்ளைங்க எல்லாங் கண்ணுக்குத் தெரியறாங்க ) அருமை பெருமைகளை கருத்திலிருத்தி கலைமாமனி விருது கொடுத்து கௌரவிப்போர்களுக்கு , வெறும் நாலே நாலு கிராமியக்கலைஞர்கள்தாம் கைக்குச் சிக்கினார்களா?
பாட்டின் பிழை பொறுக்காது அதிகார தகனமெரித்தும் வீழாது தமிழை உய்விக்க வாழ்ந்த கீரனின் வழி வந்த இளையபாரதியாரே! எங்கே உமது நடுவு நிலைமை?
நும் தெரிவு நெறிகளில் நேர்மையில்லை, பழுது, பிழை இருக்கிறது
நானிங்கே இந்த பழைய குப்பையை கிளற முகாந்திரங்களுண்டு..........
இயல் -இசை- நாடகமன்றம் செவ்வனே இயங்கிக்ªகொண்டிருக்கிறது என்றுச் சொன்னேன் அல்லவா.... அது மாத்திரமன்றி
நசிந்து தேய்ந்துப்போன கலைஞர்களின் வாழ்க்கைப் பாதையை செப்பனிடும் முகத்தான் செல்லுப்படியான 2007 ஜூன் மாதம் உரூவா ஒன்றுக்கு மக்களின் வீடு தேடிவந்து அவர்தம் அறிவுத்தாகத்தைத் தீர்த்து வைக்கும் பிரபல்ய நாளேடான தினகரனில் நலிந்த நிலையில் வாழும் சிறந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கான விளம்பர அறிக்கை ஒன்றை இவ்வமைப்பின் முகாமையில் அரசு வெளியிட்டிருந்தது.
அதில் கண்ட பிரதான ஷரத்துப்படி நிதியுதவி பெற விழைவோர்க்கு அரசு நேமித்திருக்கும் வயது வரம்பு 58.
ஐம்பத்தெட்டு வருடத்திற்கு முந்திப்பிறந்த கிராமியக்கலைஞர்கள் அறுதிப்பெரும்பான்மையினருக்கு ஏட்டுச்சுரைக்காயென்றால் என்னவென்றேத் தெரியாது
பூர்த்தியாக எல்லோரும் கைநாட்டுப் பேர்வழிகள்!
ராவெல்லாம் கூத்தாடிவிட்டோ, பறையடித்துவிட்டோ, பொம்மையாட்டிவிட்டோ வருவோர் சோறுத்தண்ணி இல்லையென்றாலும் அகப்பட்ட இடத்தில் தெக்க வடக்க நெப்பில்லாம பொச்ச நெட்டுக்கிட்டு தூங்குபவர்கள்!
நாட்டு நடப்பு கிடக்கட்டுங் கழுதை!
சினிமாக்காரிகளின் விரி தொடையழகு காவிரிச்சி விளம்பரங்களுக்கிடையே இங்ஙனம் வெளியாகும் துக்குளியூண்டு அரசு செய்திகளை ஓதி விளக்கஞ்சொல்ல அவர்களுக்கொரு கதியுண்டா?
நலிந்த கலைஞர்களனைவரும் எண்ணறக்கற்று எழுத்தற வாசிக்க கூடியவர்கள் என்று தாமாகவே அரசு நம்பிக்கொண்டிருப்பது எவ்வளவுப்பெரிய பைத்தியக்காரத்தனம்?
சங்கடத்தில் பிள்ளைப் பெற்று வெங்கட்டம்மா என்று பேர் வைத்தது மாதிரி என்னம்மோ சாங்கியத்திற்கு இம்மாதிரி நலத்திட்டங்களை பேப்பரில் மட்டும் அறிவித்தால் ,போதுமா???
பாமரக்கலைஞர்களுக்கு கருதிய பலன் கிட்டுமா?
முதலில் நிதியுதவி வேண்டுவோர்க்கு படிவத்தில் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை வாசியுங்கள்
"அரசாங்கம்,ரசிகர்கள்அல்லது பிரபல கலை நிறுவனங்களிடமிருந்து தங்களுக்கு விருது, பாராட்டு, சன்மானம் வழங்கப்பட்டிருந்தால் அவற்றின் விபரம் குறிப்பிடவும் சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவும்(மறைந்த கலைஞரின் மனைவி விண்ணப்பிப்பாரெனில் கணவர் பாராட்டுப் பெற்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டும்)" நிபந்தனை-8
" தங்களையும் ,தங்களுடைய கலைத்தகுதிகளைப் பற்றியும் நன்கு அறிந்தவர்களை (தங்கள் துறையில் பிரபலமாக உள்ள)இரண்டு கலைஞர்களிடமிருந்து தங்களைப்பற்றிய பரிந்துரைகளைப் பெற்று இத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் பரிந்துரை வழங்கியுள்ள இரண்டு கலைஞர்களின் முகவரிகளையும் குறிப்பிடவும் முக்கியமானதெனக் கருதப்படும் தாங்கள் பங்கேற்றுள்ள கலைநிகழ்ச்சிகளுக்கான அழைப்பு ,அறிவிப்பு , விளம்பரக்குறிப்பு, ஆகியவற்றினையும் தாங்கள் பெற்றுள்ள பாராட்டிதழ்களின் நகல்கள் ஆகியவற்றினையும் கண்டிப்பாக இணைத்து அனுப்பவும்" நிபந்தனை-9
மேலோட்டமாகப் பார்க்கும்போது எளிமையானவைப்போல தோன்றும் இவற்றைப்போன்றே விண்ணப்பத்தின் பல ஷரத்துகளில் பூர்த்திச் செய்யமுடியாதபடிக்கி பல குளறுபடிகள் உள்ளன. முதலில் கலைஞர்கள் என்றால் அரசுக்கும் சரி அதுவியக்கும் இயலிசை நாடக மன்றத்தார்க்கும் சரி புத்தியில் உறைந்துப்போயிருப்பது சினிமாக்காரர்கள்,டிவிக்காரர்கள் ,கர்நாடக இசைமேதைகள், ஆர்மெச்சூர் நாடகக்காரர்கள் கடைசியாக ஒப்புக்குச் சப்பாணியாக கிராமியக்கலைஞர்களில் ஒன்றிரண்டு ஒயிலாட்ட மயிலாட்ட, கரகாட்டக்கலைஞர்கள் .....
தொன்மையானதும், பழமையானதும், கிராமியக்கலைகளில் நுட்பமானதும் தமிழர்களின் ஒப்பற்ற பண்பாட்டு அடையாளமுமான தெருக்கூத்து முதலிய நிகழ்த்துக்கலைகள்
குறித்த பிரக்ஞையும் அக்கறையும் அவர்களுக்கு சுத்தமாகவே இல்லை.
ஒருவேளை கேட்பதற்கு நாதியில்லை என அறிந்தும் அறியாத சிவமணி போல இருக்கிறார்களோ என்னவோ.....
தெருக்கூத்தை அடியாகக்கொண்டு நிறுவப்பட்ட கூத்துப்பட்டறை போன்ற பிரபல கலை நிறுவனங்கள் சினிமாவுக்கு நடிக ,நடிகைகளை உற்பந்தி செய்யும் தொழிற்கூடங்களாகிவிட்டன. அதன் வாரிசுதாரர்கள்
ஆத்தாக்காரி அம்மணமாம் கும்பகோணத்தல கோதானமாம் என்றமானிக்கி மாநகராட்சிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டேல்களில்,பல்கலைவளாககங்களில் அமைந்திருக்கும் ஏசி பொருத்தப்பட்ட அரங்குகளில் தாம் கற்ற நாடகக்கலையை
வளர்த்துவருகிறார்கள்
இன்னும் சில கலை ஆர்வலர்கள், ஆய்வாளர்கள,தமிழ் பேராசிரியர்கள் இருக்கிறார்கள் அவர்கள் கூத்தாடிகளிடம் வந்து முடிந்தமட்டும் சமாச்சாரங்களைச் சுரண்டிக்கொண்டுப் போய் தீசீஸ் எழுதி பணம் பண்ணுகிறார்களேவொழிய தாம் கண்ணாரக்கண்டு காதாறக் கேட்டு தெளிந்த கலைஞர்களின் கலைத்திறமைகளை, கஷ்ட்ட நஷ்ட்டங்களை குறித்து வாய்க்கும் இடத்தில் இதுகாறும் ஒரேவொரு அச்சரத்தைக்கூட உதிர்த்ததில்லை. (சும்மானாச்சிக்குங்கூட)
இவற்றையெல்லாம் நான் ஏன் சொல்லவேண்டியிருக்கிறதென்றால் தடங்கண்டுப்போய் இனங்கண்டு சிறப்பு செய்யவேண்டிய இவர்களே நிகழ்த்துக்கலைஞர்கள் பால் பாராமுகம் காட்டும் போது.............................
இல்லாத பொருளைக் கேட்கிறார்களே(அரசாங்கம், பிரபல கலை நிறுவனங்கள் வழங்கிய விருது, சன்மானம் பாராட்டு சான்றிதழ்கள்) எப்படி
கொடுப்பது?அதோடு மட்டுமல்ல ஆணோ, பெண்ணோ ஒரு கூத்தாடிக்கி எந்த ஊரில் ரசிகர் மன்றமிருக்கிறது? எந்த ஊரில் தெருக்கூத்திற்கு அழைப்பிதல் அச்சிட்டு விநியோகிக்கிறார்கள்?
ஒத்த உரூவாயிக்கி வெற்றிலை வாங்கி ஐந்தோ பத்தோ அதில் வைத்து வந்து ஆடுங்கடா என்று பண்ணாடிகள் ஆணையிட்டால் முப்பது நாற்பது மைல்களுக்கு அப்பால் கூட சொந்தப் பணத்தைச் செலவழித்துக்கொண்டுப் போய் நடத்துகிற தெருக்கூத்து திடீர் மழை காரணமாகவோ, ஊரார்களின் அடிதடி சண்டை போன்ற அசம்பாவிதங்களினால் தடைப்பட்டு இடையில் நின்று விட்டால் போக்குவரத்து செலவுக்குக்கூட பணம் அவுக்க மாட்டார்கள். பத்தாயிரம் இருபதாயிரம் பெறு மதிப்புள்ள நிகழ்ச்சிக்கு ஒரு உரூவா வெற்றிலைதான் அச்சாரம்.
இந்த லட்சணத்தில் இவர்கள் கேட்கும் அழைப்பு, அறிவிப்பு, விளம்பரக்குறிப்பு, இத்தியாதி போன்ற ஆவணச்சான்றுகளுக்கு வெறும் வெற்றிலை சருகைதான் வைத்திருந்துக்கொண்டுப்போய் காட்ட வேண்டும் ...
ஒரு கலைஞராகப்பட்டவர் அரியணையில் அமர்ந்து செங்கோன்மை செலுத்தி வருகின்ற இந்த பொற்கால ஆட்சியில் சதமானத்தின் அடிப்படையில் பார்த்தால் நூற்றுக்கொரு தெருக்கூத்து கலைஞர் கூட (ஒருங்கிணைந்த சேலம், தருமபுரி,ஈரோடு, நாமக்கல் மாவட்ட) நலிந்த நிலையில் வாழும்சிறந்த கலைஞர்களுக்கான நிதியுதவி வழங்கும்
திட்டத்தின் பயனைப் பெறவில்லை என்பதே உண்மை!
எனக்கு தெரிய நான்கைந்து ஆண்டுகளாக இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தை வாங்கி நிரப்புவதிலிருந்து கோட்டாட்சியர், \வட்டாட்சியரின் வருவாய் விசாரணை அறிக்கை, கையெழுத்து மற்றும் முத்திரை பெற்று மன்றத்திற்கு அனுப்பும் பரியந்தம் பல நூறு உரூபாய்களை கடன்பட்டு அதிகாரிகளிடம் தாரை வார்த்துவிட்டு தனது விண்ணப்பம் போனவழி தெரியாமல் அன்னாடம் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று
"பணமும் வரல ஒரு பாடையும் வரல அப்பிடி எதனாச்சிம் வந்தா வூட்டிண்டையே வந்து வாக்கரிசி போடறம் போ'"
என்று போஸ்ட் மாஸ்டரிடம் பாட்டு வாங்கி வரும் பொன்னான் வாத்தியார் கட்டிலில் கிடையாக கிடக்கிறார் . பல விண்ணப்பங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை விட்டு தாண்டுவதேயில்லை.(ஏற்கப்படாத விண்ணப்பங்கள் குறித்த தகவல்கள் அதாவது இன்னின்ன காரணங்கள், குறைப்பாடுகளுக்காக அவ்விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என்ற விபரம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை.)
கோரிப்பெறுவது வெகுமதியன்று.....ஆனால் அன்பர்களே
குரங்கு அப்பம் பங்கியதுப்போல உரியவர்க்கு உரியதை ஈயாமல் தன் வாயில் போட்டுக்கொள்ளும் நாட்டாமைத்தனம் நெடிய நாட்களுக்கு நிலைக்காது.
இடிப்பார் இல்லா எமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்
வெள்ளி, 15 மே, 2009
தோல்பொம்மை தெருக்கூத்துக்கலைஞர் திருமதி.ஜெயா செல்லப்பன் அவர்களுடன் ஓர் நேர்காணல்


சந்திப்பு;தவசிக்கருப்புசாமி
திருமதி ஜெயா செல்லப்பன்.
தோல் பொம்மை / தெருக்¢கூத்துக்கலைஞர். ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் அம்மாபேட்டையில் வசித்து வரும் திருமதி ஜெயா செல்லப்பன் அவர்கள் நாமக்கல். ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்ட அளவில் நன்கறியப்பட்ட தோல் பொம்மை கலைஞர், மட்டுமல்ல அற்புதமான தெருக்கூத்து கலைஞரும் கூட. நிகழ்த்துக் கலைகளில் சவாலானதும், மிகவும் கடினமானதுமான தோல்பொம்மலாட்டத்தை தனியொரு பெண்மணியாக கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திக் கொண்டிருப்பவர். வயோதிகம் அவரை/அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு மேலதிகமாக ஒடுக்கி விட்டிருந்த போதிலும், கைக்கொண்ட கலை மீது எல்லையற்ற அர்ப்பணிப்பு உணர்வையும், ஈடுபாட்டையும் கொண்டு வாழ்ந்து வருகிறார். அருகி மறைந்து வரும் தொல் கலைகளின் விதைநெல் இவரிடம் மூட்டை மூட்டையாக கொட்டிக்கிடக்கிறது. கொள்வாரின்றி செல்லரித்து மக்கி விடுமுன் நல்ல நிலம் பார்த்து விதைக்க வேண்டும்.
தவசி;
எத்தன வயசுல பொம்மையாட்ட வந்தீங்க?
ஜெயா:
அதிருக்குந்தம்பி ஒரு ஏழு எட்டு வயசு. ஒரெட்டு எங்கய்யனுக்கு (அப்பா) பாடறதுக் கில்லாம தொண்டக் கெட்டுப் போச்சி வாயத் தொறந்தா துளிச் சாரீரம் வெளிய வரல. தொழிலேச் சுத்தமாச் செய்ய முடியல. வவுத்துக்கொடும - தாக்குப் புடிக்க முடியல. வழுது தொழிலுந் தெரியாது. துணிஞ்சி ஒருதக்கம் டெண்டக்கட்டி, ஊரக் கூட்டி, டிக்கிட்டுங் குடுத்துட்டாரு. கூட்டமா வந்து குமிஞ்சிருக்குது, பிம்மேளம் கிடி மொழங்குது. தனக்குச் சுத்தமா வாயத்தொறந்து பாடமுடியல. ஒடியாடி வெளையாடிக்கிட்டிருந்த என்னையக் கூப்புட்டு மடியிலக் குந்த வெச்சி என்ற காதுல தாம்பாடி பொம்மையாட்டிக்கிட்டு, அத வாங்கி திலுப்பி என்னய பாடச் சொன்னாரு அன்னைக்கி புடிச்சது இந்த பித்து.
தவசி;
உங்களுக்குமுந்தி உங்கய்யன், அவருக்கு மிந்தி ஆராச்சும் தோல் பொம்மலாட்டம் நடத்தியிருக்கிறாங்களா?
ஜெயா:
அக்கானுங்க, (ஆமாம்) அய்யன், பாட்டன், முப்பாட்டன் ஏழெட்டு தலக்கட்டு முந்தியிருந்தே எங்களுக்கு இதே தொழுவாடுத் தானுங்க.
தவசி;
இதுவரைக்கும் எந்தெந்த கதய/எத்தன கதய தோல்பொம்மையில நடத்தியிருக்கறீங்க?
ஜெயா:
குருபுத்ரன் இறப்பு ராமர் பிறப்புலயிருந்து ராமாயணம் பூர்த்தியா. யயாதி கண்ணாலத்துலயிருந்து தருமரு வைகுந்தம் முடிய மகாபாரதம் பூர்த்தியா. பொறவு நல்ல தங்கா. அரிச்சந்திரன் மயான காண்டம், நள தமயேந்திரிக் கண்ணாலம். இப்பிடி பல கதைங்கள நடத்தறம்.
தவசி;
மொதல்ல தோல் பொம்ம ஆட்டிக் கிட்டிருந்த நீங்க பிற்பாடு தெருக்கூத்துல வேசம்போட்டும் ஆடியிருக்கறீங்க எதனால இந்த மாத்தம்?
ஜெயா:
தோல் பொம்மையாட்டறது நுணுக்கமான வேல மனசுக்குப்புடிச்ச தொழிலுன்னாலும் பத்து பேத்துகஷ்டத்த ஒராளு சுதாரிக்கணும், கதையில மொத வர்ற கோமாளி பொம்மையிலிருந்து ஆணுபொம்ம, பெண் பொம்ம, தோலு, துருத்தி எல்லாத்துக்கும் ஒரே ஆளு பேசி, பாடி ஆட்டணும். கால மடிச்சி குத்துக்காலுப் போட்டு மனையில கோந்து சோத்தாங்கையில கட்டயும் ஒரட்டாங்கையில பொம்மயும் புடிச்சமின்னா பொறவு அஞ்சி பஞ்ச பூதமும் வேலச் செய்யணும், இஸ்காரு சாஸ்தி, நாவரீவ காலமாவ, ஆவ சனத்துக்கு கூத்துமேல நாட்டமாச்சி, போற வாறப் பக்கமெல்லாம் கூத்தே ஆடச்சொன்னாங்க. அந்த பூட்டுல, அதோட கூத்துன்னா ஒரு வேசம் மட்டுந்தான் வேலையும் ரொம்பச் சுளுவு, இருந்தாலும் எடப்பாட தடப்பட எங்கியோ ரெண்டொரு ஊருல தோலு பொம்மையே வேணுமின்னு கேப்பாங்க அங்க பிரியமா நடத்திக் குடுப்பம்.
தவசி;
கூத்துல ஆண்வேசம் கட்டுவீங்களா இல்ல பெண் வேசமா?
ஜெயா:
கதைய பொறுத்து. ஆணு/பொண்ணு எந்த வேசமின்னாலுங்கட்டுவேன், ஒவ்வோரெட்டு கூத்து வுட்டவிங்க கேக்கறமாதரயும் வேசங்கட்டுவம், மாடுபுடிசண்டை வெச்சா நானு உத்தரகுமாரன் கட்டுவன். எம்பட வூட்டுக்காரரு பேடி கட்டு வாப்ல. பவளக்கொடி கண்ணால மின்னா அவரு அல்லி நானு அர்ச்சுனன் பத்மாச்சூர வதமுன்னா அவரு பத்மாசூரன் நானு மோகினி,நல்லதங்கா வெச்சா நானு நல்லதங்கா அவுரு மூளி அலங்காரி.
தவசி;
வேசம் போடறப்ப எத்தன ரக பவுடருப் பொழங்குவீங்க? இன்னின்ன வேசத்துக்கு இன்னின்ன நெறத்துலதாம் பவடருப் போடணுமின்னு எதனாச்சும் வரமொற உண்டா?
ஜெயா;
அடந்தடந்துப் பொழங்கறது, முத்து வெள்ள, மஞ்ச கோபி, நீலம், செவப்பு, செந்தூரம்.ஒரு அரவான், அனுமாரு வேசமுன்னா,பச்சப்பவுடரு,ஒரு பகவான்,பீமன் வேசமுன்னா நீலம், காளி மாரி, தொரவதி வேசமுன்னா செவப்புப் பவுடருப் போடுவம்.
தவசி;
எத்தன தினுசான அடவு ஆடுவீங்க? ஆணு வேசத்துக்கும். பெண் வேசத்துக்கும் தனித்தனியா அடவு உண்டா?
ஜெயா:
தோலுப் பொம்மையாட்டத்துக்கு சுதி நானம் உண்டு, தெருக்கூத்துல அது அறுதி. கண்ட பாவனதான், பண்ணண்டு வக தாளம். எழு வக அடவுதான் இப்ப ஆடறம், ஆணுவேசத்துக்கும் பெண்ணு வேசத்துக்கும் ஆதி. அடதாளம். ரூபகம். சூரடி சாப்பு. ரெண்டடி சாப்பு. நொண்டிச்சிந்து. திறப்பட தாளம். ஒத்த சம்ப ரெட்டச் சம்ப இப்பிடி தாள வரிச ஒண்ணு தான், ஆனாக்கா ஒரு ஆண் வேசத்துல ஆடும்போது பெண்ணாயிருந்தாலும் ஆட்டம் துடியா இருக்கணும். ஏர்வ தாளத்துல எத்து வரிசையா ஆடனும். பெண் வேசத்துல ஆடும்போது அதுவோரு ஆம்பளையாயிருநத்£லும் சீலைக்குள்ளயே நயனமா ஆடனம்.
தவசி;
பல வேசம் போட்டுருக்கீங்க உங்களுக்கு பேர் வாங்கி குடுத்த வேசமென்னன்னு சொல்லுங்க?
ஜெயா:
லவ குசங் கூத்துல சீத வேசந்தாந் தம்பி எனக்கு பேரு வாங்கி குடுத்த வேசம்.
தவசி;
பெண் கூத்துக்கலைஞரா உங்க ஜமாவுல நீங்க வேசம்போட்டு ஆடனாப்ல, மத்த ஜமாவுலயும் பெண்கள் வேசம் போட்டு ஆடியிருக்கறாங்களா?
ஜெயா:
என்ன தம்பி ஆடனாங்களான்னு அவ்வளச் சிலேட்டமா கேக்கறீங்க, எங்க ஜமாவுல நானு, எங்கமாமியா பாப்பா, என்ற கொளுந்தியா காளியம்மா, அங்கம்மா ,குரும்பனூரு புட்டி இப்பிடி பொண்டுங்க ஆடனமா, பொன்னிவூட்டு மண்டயஞ் செட்டுல சித்தாயி. பாவாயின்னு ரெண்டுப் பொண்டுங்க. அதே மாதர சேலங் கொண்டாலாம்பட்டியில பூவாயி செட்டுன்னு ஒரு பொண்டுங்க செட்டே தனியா இருந்தது, அதுல லச்சிமி கந்தாயி. பவுனாம்பா ராஜாமணி ,செல்லம்மா இப்பிடி பல பொண்டுங்க ஆடனங்க.
தவசி;
அப்பிடியா! அவுங்களப்பத்தி கொஞ்சம் வௌக்கமா சொல்லுங்க?
ஜெயா:
தம்பி கண்ணாலத்துக்கு முந்தி எனக்கு பொம்மையாட்ட மட்லுந்தான் தெரியிம், மொட்டயங்கொறவமூட்ல என்னய எங்கய்யங் கட்டிக்குடுத்ததும் எனக்கு கூத்து படிப்பிச்சிது எங்க மாமியா பாப்பா காலடவு சொல்லிக் குடுத்தது,லச்சிமி, லச்சிமின்னு ஒரு அம்மா, பாருங்க இன்னும் நம்ப மேச்சேரி காளிக்கவுண்டனூருல ஆண்வேச துணி தச்சிக்கிட்டு உசுரோட இருக்குது, அந்தம்மா ஆடற ரெட்டடவுக்கு மத்தாளத்த அடிக்க முடியாம எத்தனயோ ஆம்பளைங்க பாதிக்கூத்துல சொல்லாமப் புடிக்காம ஒட்டம் புடிச்சிருக்கறானுங்க. அதே மாதர அவிங்க வர்க்கத்துல அவிங்க பாட்டி பூவாயி, பெரியாயி கந்தாயி,சின்னாயி பவுனாம்பா இவிங்கெல்லாம் பெருங்கொண்ட வேசக்காரு மட்டுமில்ல, பேரேடுத்த கூத்தாடிங்க! காலுமேல காலுப்போட்டு குந்தி, பவுனாம்பா கைப்பைய மொழங்கையில மாட்டிக்கிட்டு, கத்திரி மார்க்கம் சிவரெட்ட பத்த வெக்கறத பாக்கவே பத்திருவது பேரு கூடுவாங்க, தருமன், வீமன், அர்ச்சுனன், ஆயன், துரியோதனன், துர்ச்சாதனன், அய்மன்னன்னு இப்பிடி வேசம் ஆணோ பொண்ணோ ஆரு வேணுமுன்னாலும் கட்டலாம், ஆனா கூடன சவ நெறக் கும்பிடி கோமாளி வேசம் போட்டு அதுமொரு பொம்மனாட்டி சாமான்யத்துல ஆடி செலாமணி பண்ட முடியாது, எங்க காளியம்மா ராமக்கறவத்தாங் (கோமாளி) கட்டி வெளிய வந்தா பாக்கற சனத்துக்கு சிரிச்சி சிரிச்சி வவுறு புண்ணாப்போவும், பேச்சிக்கி பேச்சி சிங்காரம்,,,, அவளாட்டம் பேச இன்னக்கி ஆளு இல்ல.
தவசி;
அவங்கெல்லாம் இப்ப என்னா ஆனாங்க எங்க இருக்கறாங்க? என்னா செய்யறாங்க?
ஜெயா;
ஒடம்புல சத்து இருக்கமட்டும் ஆடனாங்க, வூடு நம்ப பிள்ளைங்க குட்டிங்க பெத்தாங்க. காதுல மூக்குல கெடக்கறத வித்துக்கூட அதுங்களுக்கு சீரு பாரு பாத்தாங்க, இப்ப ஊடுமில்ல வாசலுமில்ல! ஒடம்புல வலுவுமில்ல! நாடோடிங்களா மேச்சேரி வனவாசி, நங்கோளி ஒருக்கோடியா சந்த சந்தைக்கி மொளவுத்தூளு வித்துக்கிட்டு திரியிதுங்க.
தவசி;
உங்களுக்கு அப்பரம் உங்க பொண்ணுங்க. பசங்க ஆராச்சுங் கூத்தாடறாங்களா?
ஜெயா:
எனக்கு ஏழு பொட்டப்பிள்ளைங்க! ரெண்டு பசங்க, ஒருப்பையன் ராரி ஓட்றான். ஒருப்பையன் இங்க சலண்டபுரத்திண்ட சேட்டு ஜமாவுக்கு மத்தாளத்துக்குப் போறான். பிள்ளைங்க ஒவ்வொருத்திக்கும் கால காலத்துல கண்ணாலங்கட்டி குடுத்துட்டம், ஒருத்திக்கிகூட இந்த தொழிலு வோண்டாம்னுட்டம், ஏன்னு கேளுங்க அந்த காலத்துல நானு தோலு பொம்மையாட்டும் போது ஆட்டம் முடிஞ்ச பெறவு டெண்டவுட்டு வெளிய வந்தா பார்ரா பொம்மையாட்ற மவராசி வருதுன்னு நாலுச்சனம் கும்புட கையெடுக்கும், கூத்தாடும் போது பலபட்ற ஆம்பளைங்களோட சச்சமமா நின்னு உடுப்பு மாத்துவம் புடிப்பம் ஒரு தப்புத் தவறு நடக்காது, கன்னியமா நடந்துக்குவாங்க, காசி பணம் இல்லாட்டியும் ஊருநாட்ல மட்டு மருவாதி இருந்திச்சி. ஊருக்கு நூறு வூடு குடியானப்பசங்க, பத்திருவது டிக்கிட்டுங்க தான் பறயமூட்டாரு சக்கிலியூட்டாரு, இவிங்க பாவம் வருசமுச்சூடும் பாடுபட்டு சம்பாரிச்ச பணத்த போட்டு, ஆதிய மறக்கக் கூடாதுன்னு உள்ளூரு நோம்பி நொடிக்கி கூத்துவுட்டா, அத பொறுக்க மாண்டாம எதுத்தாப்பல குடியானப்பசங்க காலேசிப்பிள்ளைங்கன்னு சேலம் கல்லாங்குத்துலருந்து பொம்பளைங்கள கூட்டியாந்து அம்மண ஆட்டம் வுடறாங்க தம்பி! என்ற மகனாட்டம் நீங்க உங்ககிட்ட சொல்ல நாவு கூசுது, ஒசக்க பிளாசிட்டிக்கி தொட்டிய நிறுத்தி பைப்ப போட்டு கீழ தண்ணிய வுட்டு நட்ட நடு டேசியில பொம்பளய நெற அம்மணா நிக்க வெச்சி தண்ணி வாக்கச் சொன்னாங்க தம்பி ஒரு ஊருல. கேட்டா சினிமா பாட்டு அப்பிடியே ஆடறாங்கன்னு சொல்றாங்க! இப்பிடி பாத்து கண்டவிங்க கூத்தாடிப் பொம்பளய வேசம்போட்டு ஆடறவ தானேன்று அப்பிடி சினிமா பாட்டுக்கு ஆடுன்னா நம் கெவுரவம் என்ன ஆவறது தம்பி? அதான் அந்த நாத்தமே ஆவாதுன்னு வுட்டுட்டந் தம்பி.
தவசி;
இதுவரைக்கும் எத்தன கூத்து நடத்தியிருப்பீங்க?
ஜெயா:
வருசத்துக்கு நூறு, நூத்தம்பது ராத்திரி கூத்து கொறவில்லாம நடத்தனம், அம்பது வருசமா தொழிலுச் செய்யறன், எத்தன ராத்திரி கூத்து கணக்கு வருது நீங்களே பாத்துக்கங்க.
தவசி;
கூத்துல வர்ற வரும்பிடி உங்களுக்கு போதுமா?
ஜெயா:
அறக்க-பறக்க பாடுபட்டாலும், படுக்க பாயில்லங்கறாப்பல தானுங்க நம்ப பொழப்பு! அன்னைக்கிம் சரி இன்னிக்கும் சரி என்னமோ வர்ற வரும்பிடி வவுத்து ஈரங்காயாம பாத்துக்கலாம் அவ்வளதானுங்க.
தவசி;
பிரயோசனமில்லாத காரியத்தச் செஞ்சி,என்னங்க புண்ணியம்? வவுத்துக்கு கஞ்சி ஊத்தாத தொழில எனத்துக்குங்கயிப்பிடி வலிவந்தமாச் செய்யினும்?வுட்டுட்டு வேற தொழில எதனாலும் பண்டலாமில்ல?
ஜெயா;
நீங்க சொல்றது நூத்துலவொரு வார்த்தைங்க, எப்பிடிச் சம்பாரிச்சியென்னா? எத தின்னாயென்னா இந்த அங்கமாகப்பட்டது நம்பிப்போயிருஞ் சாமி! ஆனா பாழாப்போன பொந்தி அப்பிடிங்களா?
தவசி;
வருசா-வருசம் அரசாங்கம் உங்க மாதர கலைஞர்களுக்கு பென்சன், உதவித்தொகை,அதுயிதுன்னு பல நலத் திட்டம் அறிவிக்குது. நெறயாபேரு பென்சன் வாங்கறாங்க நீங்க அதுக்கு முயற்சி பண்ணலாமில்ல?
ஜெயா:
அதயேந் தம்பி கேக்கறீங்க! பெருமைக்கி பேசனா எருமைக்கி பில்லு ஆவாது. உங்க மாதர ஒருத்தரு சொல்லுப்பேச்சக் கேட்டுத்தானுங்க அஞ்சி வருசமா வுடாம எழுதிபோடறம். அது எந்த பொறட்டுல கெடக்குதுன்னே தெரியலீங்க. மினிசீப்பு, ஆர்.ஐயி. தாசில்தாருன்னு வருசந்தப்பாம வாக்கரிசி போட்டு உருவா ஐய்யாயிரம் கடம்பட்டதுதாந் தொச்சம்.
திருமதி ஜெயா செல்லப்பன்.
தோல் பொம்மை / தெருக்¢கூத்துக்கலைஞர். ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் அம்மாபேட்டையில் வசித்து வரும் திருமதி ஜெயா செல்லப்பன் அவர்கள் நாமக்கல். ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்ட அளவில் நன்கறியப்பட்ட தோல் பொம்மை கலைஞர், மட்டுமல்ல அற்புதமான தெருக்கூத்து கலைஞரும் கூட. நிகழ்த்துக் கலைகளில் சவாலானதும், மிகவும் கடினமானதுமான தோல்பொம்மலாட்டத்தை தனியொரு பெண்மணியாக கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திக் கொண்டிருப்பவர். வயோதிகம் அவரை/அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு மேலதிகமாக ஒடுக்கி விட்டிருந்த போதிலும், கைக்கொண்ட கலை மீது எல்லையற்ற அர்ப்பணிப்பு உணர்வையும், ஈடுபாட்டையும் கொண்டு வாழ்ந்து வருகிறார். அருகி மறைந்து வரும் தொல் கலைகளின் விதைநெல் இவரிடம் மூட்டை மூட்டையாக கொட்டிக்கிடக்கிறது. கொள்வாரின்றி செல்லரித்து மக்கி விடுமுன் நல்ல நிலம் பார்த்து விதைக்க வேண்டும்.
தவசி;
எத்தன வயசுல பொம்மையாட்ட வந்தீங்க?
ஜெயா:
அதிருக்குந்தம்பி ஒரு ஏழு எட்டு வயசு. ஒரெட்டு எங்கய்யனுக்கு (அப்பா) பாடறதுக் கில்லாம தொண்டக் கெட்டுப் போச்சி வாயத் தொறந்தா துளிச் சாரீரம் வெளிய வரல. தொழிலேச் சுத்தமாச் செய்ய முடியல. வவுத்துக்கொடும - தாக்குப் புடிக்க முடியல. வழுது தொழிலுந் தெரியாது. துணிஞ்சி ஒருதக்கம் டெண்டக்கட்டி, ஊரக் கூட்டி, டிக்கிட்டுங் குடுத்துட்டாரு. கூட்டமா வந்து குமிஞ்சிருக்குது, பிம்மேளம் கிடி மொழங்குது. தனக்குச் சுத்தமா வாயத்தொறந்து பாடமுடியல. ஒடியாடி வெளையாடிக்கிட்டிருந்த என்னையக் கூப்புட்டு மடியிலக் குந்த வெச்சி என்ற காதுல தாம்பாடி பொம்மையாட்டிக்கிட்டு, அத வாங்கி திலுப்பி என்னய பாடச் சொன்னாரு அன்னைக்கி புடிச்சது இந்த பித்து.
தவசி;
உங்களுக்குமுந்தி உங்கய்யன், அவருக்கு மிந்தி ஆராச்சும் தோல் பொம்மலாட்டம் நடத்தியிருக்கிறாங்களா?
ஜெயா:
அக்கானுங்க, (ஆமாம்) அய்யன், பாட்டன், முப்பாட்டன் ஏழெட்டு தலக்கட்டு முந்தியிருந்தே எங்களுக்கு இதே தொழுவாடுத் தானுங்க.
தவசி;
இதுவரைக்கும் எந்தெந்த கதய/எத்தன கதய தோல்பொம்மையில நடத்தியிருக்கறீங்க?
ஜெயா:
குருபுத்ரன் இறப்பு ராமர் பிறப்புலயிருந்து ராமாயணம் பூர்த்தியா. யயாதி கண்ணாலத்துலயிருந்து தருமரு வைகுந்தம் முடிய மகாபாரதம் பூர்த்தியா. பொறவு நல்ல தங்கா. அரிச்சந்திரன் மயான காண்டம், நள தமயேந்திரிக் கண்ணாலம். இப்பிடி பல கதைங்கள நடத்தறம்.
தவசி;
மொதல்ல தோல் பொம்ம ஆட்டிக் கிட்டிருந்த நீங்க பிற்பாடு தெருக்கூத்துல வேசம்போட்டும் ஆடியிருக்கறீங்க எதனால இந்த மாத்தம்?
ஜெயா:
தோல் பொம்மையாட்டறது நுணுக்கமான வேல மனசுக்குப்புடிச்ச தொழிலுன்னாலும் பத்து பேத்துகஷ்டத்த ஒராளு சுதாரிக்கணும், கதையில மொத வர்ற கோமாளி பொம்மையிலிருந்து ஆணுபொம்ம, பெண் பொம்ம, தோலு, துருத்தி எல்லாத்துக்கும் ஒரே ஆளு பேசி, பாடி ஆட்டணும். கால மடிச்சி குத்துக்காலுப் போட்டு மனையில கோந்து சோத்தாங்கையில கட்டயும் ஒரட்டாங்கையில பொம்மயும் புடிச்சமின்னா பொறவு அஞ்சி பஞ்ச பூதமும் வேலச் செய்யணும், இஸ்காரு சாஸ்தி, நாவரீவ காலமாவ, ஆவ சனத்துக்கு கூத்துமேல நாட்டமாச்சி, போற வாறப் பக்கமெல்லாம் கூத்தே ஆடச்சொன்னாங்க. அந்த பூட்டுல, அதோட கூத்துன்னா ஒரு வேசம் மட்டுந்தான் வேலையும் ரொம்பச் சுளுவு, இருந்தாலும் எடப்பாட தடப்பட எங்கியோ ரெண்டொரு ஊருல தோலு பொம்மையே வேணுமின்னு கேப்பாங்க அங்க பிரியமா நடத்திக் குடுப்பம்.
தவசி;
கூத்துல ஆண்வேசம் கட்டுவீங்களா இல்ல பெண் வேசமா?
ஜெயா:
கதைய பொறுத்து. ஆணு/பொண்ணு எந்த வேசமின்னாலுங்கட்டுவேன், ஒவ்வோரெட்டு கூத்து வுட்டவிங்க கேக்கறமாதரயும் வேசங்கட்டுவம், மாடுபுடிசண்டை வெச்சா நானு உத்தரகுமாரன் கட்டுவன். எம்பட வூட்டுக்காரரு பேடி கட்டு வாப்ல. பவளக்கொடி கண்ணால மின்னா அவரு அல்லி நானு அர்ச்சுனன் பத்மாச்சூர வதமுன்னா அவரு பத்மாசூரன் நானு மோகினி,நல்லதங்கா வெச்சா நானு நல்லதங்கா அவுரு மூளி அலங்காரி.
தவசி;
வேசம் போடறப்ப எத்தன ரக பவுடருப் பொழங்குவீங்க? இன்னின்ன வேசத்துக்கு இன்னின்ன நெறத்துலதாம் பவடருப் போடணுமின்னு எதனாச்சும் வரமொற உண்டா?
ஜெயா;
அடந்தடந்துப் பொழங்கறது, முத்து வெள்ள, மஞ்ச கோபி, நீலம், செவப்பு, செந்தூரம்.ஒரு அரவான், அனுமாரு வேசமுன்னா,பச்சப்பவுடரு,ஒரு பகவான்,பீமன் வேசமுன்னா நீலம், காளி மாரி, தொரவதி வேசமுன்னா செவப்புப் பவுடருப் போடுவம்.
தவசி;
எத்தன தினுசான அடவு ஆடுவீங்க? ஆணு வேசத்துக்கும். பெண் வேசத்துக்கும் தனித்தனியா அடவு உண்டா?
ஜெயா:
தோலுப் பொம்மையாட்டத்துக்கு சுதி நானம் உண்டு, தெருக்கூத்துல அது அறுதி. கண்ட பாவனதான், பண்ணண்டு வக தாளம். எழு வக அடவுதான் இப்ப ஆடறம், ஆணுவேசத்துக்கும் பெண்ணு வேசத்துக்கும் ஆதி. அடதாளம். ரூபகம். சூரடி சாப்பு. ரெண்டடி சாப்பு. நொண்டிச்சிந்து. திறப்பட தாளம். ஒத்த சம்ப ரெட்டச் சம்ப இப்பிடி தாள வரிச ஒண்ணு தான், ஆனாக்கா ஒரு ஆண் வேசத்துல ஆடும்போது பெண்ணாயிருந்தாலும் ஆட்டம் துடியா இருக்கணும். ஏர்வ தாளத்துல எத்து வரிசையா ஆடனும். பெண் வேசத்துல ஆடும்போது அதுவோரு ஆம்பளையாயிருநத்£லும் சீலைக்குள்ளயே நயனமா ஆடனம்.
தவசி;
பல வேசம் போட்டுருக்கீங்க உங்களுக்கு பேர் வாங்கி குடுத்த வேசமென்னன்னு சொல்லுங்க?
ஜெயா:
லவ குசங் கூத்துல சீத வேசந்தாந் தம்பி எனக்கு பேரு வாங்கி குடுத்த வேசம்.
தவசி;
பெண் கூத்துக்கலைஞரா உங்க ஜமாவுல நீங்க வேசம்போட்டு ஆடனாப்ல, மத்த ஜமாவுலயும் பெண்கள் வேசம் போட்டு ஆடியிருக்கறாங்களா?
ஜெயா:
என்ன தம்பி ஆடனாங்களான்னு அவ்வளச் சிலேட்டமா கேக்கறீங்க, எங்க ஜமாவுல நானு, எங்கமாமியா பாப்பா, என்ற கொளுந்தியா காளியம்மா, அங்கம்மா ,குரும்பனூரு புட்டி இப்பிடி பொண்டுங்க ஆடனமா, பொன்னிவூட்டு மண்டயஞ் செட்டுல சித்தாயி. பாவாயின்னு ரெண்டுப் பொண்டுங்க. அதே மாதர சேலங் கொண்டாலாம்பட்டியில பூவாயி செட்டுன்னு ஒரு பொண்டுங்க செட்டே தனியா இருந்தது, அதுல லச்சிமி கந்தாயி. பவுனாம்பா ராஜாமணி ,செல்லம்மா இப்பிடி பல பொண்டுங்க ஆடனங்க.
தவசி;
அப்பிடியா! அவுங்களப்பத்தி கொஞ்சம் வௌக்கமா சொல்லுங்க?
ஜெயா:
தம்பி கண்ணாலத்துக்கு முந்தி எனக்கு பொம்மையாட்ட மட்லுந்தான் தெரியிம், மொட்டயங்கொறவமூட்ல என்னய எங்கய்யங் கட்டிக்குடுத்ததும் எனக்கு கூத்து படிப்பிச்சிது எங்க மாமியா பாப்பா காலடவு சொல்லிக் குடுத்தது,லச்சிமி, லச்சிமின்னு ஒரு அம்மா, பாருங்க இன்னும் நம்ப மேச்சேரி காளிக்கவுண்டனூருல ஆண்வேச துணி தச்சிக்கிட்டு உசுரோட இருக்குது, அந்தம்மா ஆடற ரெட்டடவுக்கு மத்தாளத்த அடிக்க முடியாம எத்தனயோ ஆம்பளைங்க பாதிக்கூத்துல சொல்லாமப் புடிக்காம ஒட்டம் புடிச்சிருக்கறானுங்க. அதே மாதர அவிங்க வர்க்கத்துல அவிங்க பாட்டி பூவாயி, பெரியாயி கந்தாயி,சின்னாயி பவுனாம்பா இவிங்கெல்லாம் பெருங்கொண்ட வேசக்காரு மட்டுமில்ல, பேரேடுத்த கூத்தாடிங்க! காலுமேல காலுப்போட்டு குந்தி, பவுனாம்பா கைப்பைய மொழங்கையில மாட்டிக்கிட்டு, கத்திரி மார்க்கம் சிவரெட்ட பத்த வெக்கறத பாக்கவே பத்திருவது பேரு கூடுவாங்க, தருமன், வீமன், அர்ச்சுனன், ஆயன், துரியோதனன், துர்ச்சாதனன், அய்மன்னன்னு இப்பிடி வேசம் ஆணோ பொண்ணோ ஆரு வேணுமுன்னாலும் கட்டலாம், ஆனா கூடன சவ நெறக் கும்பிடி கோமாளி வேசம் போட்டு அதுமொரு பொம்மனாட்டி சாமான்யத்துல ஆடி செலாமணி பண்ட முடியாது, எங்க காளியம்மா ராமக்கறவத்தாங் (கோமாளி) கட்டி வெளிய வந்தா பாக்கற சனத்துக்கு சிரிச்சி சிரிச்சி வவுறு புண்ணாப்போவும், பேச்சிக்கி பேச்சி சிங்காரம்,,,, அவளாட்டம் பேச இன்னக்கி ஆளு இல்ல.
தவசி;
அவங்கெல்லாம் இப்ப என்னா ஆனாங்க எங்க இருக்கறாங்க? என்னா செய்யறாங்க?
ஜெயா;
ஒடம்புல சத்து இருக்கமட்டும் ஆடனாங்க, வூடு நம்ப பிள்ளைங்க குட்டிங்க பெத்தாங்க. காதுல மூக்குல கெடக்கறத வித்துக்கூட அதுங்களுக்கு சீரு பாரு பாத்தாங்க, இப்ப ஊடுமில்ல வாசலுமில்ல! ஒடம்புல வலுவுமில்ல! நாடோடிங்களா மேச்சேரி வனவாசி, நங்கோளி ஒருக்கோடியா சந்த சந்தைக்கி மொளவுத்தூளு வித்துக்கிட்டு திரியிதுங்க.
தவசி;
உங்களுக்கு அப்பரம் உங்க பொண்ணுங்க. பசங்க ஆராச்சுங் கூத்தாடறாங்களா?
ஜெயா:
எனக்கு ஏழு பொட்டப்பிள்ளைங்க! ரெண்டு பசங்க, ஒருப்பையன் ராரி ஓட்றான். ஒருப்பையன் இங்க சலண்டபுரத்திண்ட சேட்டு ஜமாவுக்கு மத்தாளத்துக்குப் போறான். பிள்ளைங்க ஒவ்வொருத்திக்கும் கால காலத்துல கண்ணாலங்கட்டி குடுத்துட்டம், ஒருத்திக்கிகூட இந்த தொழிலு வோண்டாம்னுட்டம், ஏன்னு கேளுங்க அந்த காலத்துல நானு தோலு பொம்மையாட்டும் போது ஆட்டம் முடிஞ்ச பெறவு டெண்டவுட்டு வெளிய வந்தா பார்ரா பொம்மையாட்ற மவராசி வருதுன்னு நாலுச்சனம் கும்புட கையெடுக்கும், கூத்தாடும் போது பலபட்ற ஆம்பளைங்களோட சச்சமமா நின்னு உடுப்பு மாத்துவம் புடிப்பம் ஒரு தப்புத் தவறு நடக்காது, கன்னியமா நடந்துக்குவாங்க, காசி பணம் இல்லாட்டியும் ஊருநாட்ல மட்டு மருவாதி இருந்திச்சி. ஊருக்கு நூறு வூடு குடியானப்பசங்க, பத்திருவது டிக்கிட்டுங்க தான் பறயமூட்டாரு சக்கிலியூட்டாரு, இவிங்க பாவம் வருசமுச்சூடும் பாடுபட்டு சம்பாரிச்ச பணத்த போட்டு, ஆதிய மறக்கக் கூடாதுன்னு உள்ளூரு நோம்பி நொடிக்கி கூத்துவுட்டா, அத பொறுக்க மாண்டாம எதுத்தாப்பல குடியானப்பசங்க காலேசிப்பிள்ளைங்கன்னு சேலம் கல்லாங்குத்துலருந்து பொம்பளைங்கள கூட்டியாந்து அம்மண ஆட்டம் வுடறாங்க தம்பி! என்ற மகனாட்டம் நீங்க உங்ககிட்ட சொல்ல நாவு கூசுது, ஒசக்க பிளாசிட்டிக்கி தொட்டிய நிறுத்தி பைப்ப போட்டு கீழ தண்ணிய வுட்டு நட்ட நடு டேசியில பொம்பளய நெற அம்மணா நிக்க வெச்சி தண்ணி வாக்கச் சொன்னாங்க தம்பி ஒரு ஊருல. கேட்டா சினிமா பாட்டு அப்பிடியே ஆடறாங்கன்னு சொல்றாங்க! இப்பிடி பாத்து கண்டவிங்க கூத்தாடிப் பொம்பளய வேசம்போட்டு ஆடறவ தானேன்று அப்பிடி சினிமா பாட்டுக்கு ஆடுன்னா நம் கெவுரவம் என்ன ஆவறது தம்பி? அதான் அந்த நாத்தமே ஆவாதுன்னு வுட்டுட்டந் தம்பி.
தவசி;
இதுவரைக்கும் எத்தன கூத்து நடத்தியிருப்பீங்க?
ஜெயா:
வருசத்துக்கு நூறு, நூத்தம்பது ராத்திரி கூத்து கொறவில்லாம நடத்தனம், அம்பது வருசமா தொழிலுச் செய்யறன், எத்தன ராத்திரி கூத்து கணக்கு வருது நீங்களே பாத்துக்கங்க.
தவசி;
கூத்துல வர்ற வரும்பிடி உங்களுக்கு போதுமா?
ஜெயா:
அறக்க-பறக்க பாடுபட்டாலும், படுக்க பாயில்லங்கறாப்பல தானுங்க நம்ப பொழப்பு! அன்னைக்கிம் சரி இன்னிக்கும் சரி என்னமோ வர்ற வரும்பிடி வவுத்து ஈரங்காயாம பாத்துக்கலாம் அவ்வளதானுங்க.
தவசி;
பிரயோசனமில்லாத காரியத்தச் செஞ்சி,என்னங்க புண்ணியம்? வவுத்துக்கு கஞ்சி ஊத்தாத தொழில எனத்துக்குங்கயிப்பிடி வலிவந்தமாச் செய்யினும்?வுட்டுட்டு வேற தொழில எதனாலும் பண்டலாமில்ல?
ஜெயா;
நீங்க சொல்றது நூத்துலவொரு வார்த்தைங்க, எப்பிடிச் சம்பாரிச்சியென்னா? எத தின்னாயென்னா இந்த அங்கமாகப்பட்டது நம்பிப்போயிருஞ் சாமி! ஆனா பாழாப்போன பொந்தி அப்பிடிங்களா?
தவசி;
வருசா-வருசம் அரசாங்கம் உங்க மாதர கலைஞர்களுக்கு பென்சன், உதவித்தொகை,அதுயிதுன்னு பல நலத் திட்டம் அறிவிக்குது. நெறயாபேரு பென்சன் வாங்கறாங்க நீங்க அதுக்கு முயற்சி பண்ணலாமில்ல?
ஜெயா:
அதயேந் தம்பி கேக்கறீங்க! பெருமைக்கி பேசனா எருமைக்கி பில்லு ஆவாது. உங்க மாதர ஒருத்தரு சொல்லுப்பேச்சக் கேட்டுத்தானுங்க அஞ்சி வருசமா வுடாம எழுதிபோடறம். அது எந்த பொறட்டுல கெடக்குதுன்னே தெரியலீங்க. மினிசீப்பு, ஆர்.ஐயி. தாசில்தாருன்னு வருசந்தப்பாம வாக்கரிசி போட்டு உருவா ஐய்யாயிரம் கடம்பட்டதுதாந் தொச்சம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)