புதன், 29 ஜூன், 2011

குடிநாசுவன்




கோழிக்கூப்டமித்தியே கண்ணுமுழிச்சவ பாழாப்போன கொலநோவுல எந்திரிக்க கையிலாவாம இன்னுஞ்செத்த விடியிட்டும், இன்னுஞ்செத்த விடியிட்டுமின்னு பாயோடப் பாயாச் சுருண்டுக் கெடந்துட்டு, நெனச்சாப்ல ஓவ்வுனுமேட்டுஞ் சும்மா வெட்டியாப் படுத்துருந்தா வேலைக்காவாது, வாசக்கூட்டி சாணியாச்சந்தொளிக்கலாமின்னு வவுநேரங் கழிச்சி அழவம்மா எந்திரிச்சி வெளிய வந்தா. அந்நேரம் குபேர மூலையக்காட்டி ஒரளான்ட வெள்ளவெளேருன்னு என்னும்மோ நின்னுக்கிட்டுக்கறாப்ல தெம்பட்டதும் நெப்புத் தெரியாமப் பயந்துக்கிட்டு போயி பிருசன எழுப்பலாமின் வந்த வெசயில திலுப்பியும் வூட்டுக்குள்ற ஓட்டம் புடிச்சா. “நாசூத்தி... நாசூத்தி... கேன நாசுவன் எங்கடி?ன்னு கொலுச் சத்தங்கேட்கும்பிடி அவத்திருந்த ஆளு இன்னாருன்னு அவுளுக்குச் சத்தமாப் பிருவாயிப்போச்சி. இந்த தம்பியிண்ணமூட்டு சில்லிவண்டு செகதாப்பிள்ளத்தான்’ வெள்ள வேட்டிய காலுவழியப் போத்திக்கிட்டு கொள்ளிவாவி பெசாதாட்டம் செஞ்செவிக்க நின்னுக்கிட்டிருந்திச்சி. ‘இவ ஆளு எவ்ளுண்டு பொம்பள எவ்ளுண்டு இழுத்துப் புடிச்சி அளந்தா ஒருச்சாண் இருக்கமாட்டா. விடிஞ்சும் விடியாதமின்ன நம்பூட்டு சால்ல வந்து நின்னு தலமேல அடிச்சாப்ல அத்தச்சோடு அம்பளய பேரச் சொல்லிக் கூப்டறாப்பாரு’ன்னு அழவம்மாளுக்கு ச்செட்யான கோவம் வந்துட்டுது. “அதெங்கியோ பீச்சூத்தி, நானென்னத்தக் கண்டன். அவனெஙகப் போனானோ”ன்னு காலாச்சட்டயா ரெண்டொரு வார்த்தயில வதுலச் சொல்லியுஞ் சொல்லாம வத் வேலய மறந்து அடுப்புச் சாம்புலு அள்ளப் போயிட்டா அழவம்மா. பீச்சூத்தின்னுச் சொன்னதுதாம் மாயம், இந்தச் செங்காநண்டு அழுதுக்கிட்டே ஓடி அவங்காயாக்கிட்ட குசலஞ்சொல்ல அவள கையோடக் கூட்டியாந்துட்டா. ஊருக்கவுண்டம் மருமவ ரட்சிமாயி, வௌஞ்சகாட்டுக்குருவி’ மீறுனப்பண்ணாட்டுக்காரி’ பாக்கறதுக்கு பொட்டப் பொம்பளதான், மன்னக்குட்டி வாயத் தொறந்துப் புட்டான்னா அவ்வளதான். சலதாரக் கப்பு எங்கித்தி மூல? அவப் பேச ஆரம்பிச்ச் ஒருப்புளுத்த நாயுங்குறுக்கப்பூதாது. “ஆர்ரிவ பொம்பள வூட்ல? வெளிய வாடி’ உனுக்கு எவ்வள மண்டத்திமுரு இருந்தா எம்பிள்ளையப் பீச்சூத்தின்னு பட்டப்பேரு வெச்சிக்கூட்புடுவ? உன்னு நாசுவக்கிருச என்னுக்கிட்டயேக் காட்ரியா? கூண்டி நாலு வூடு எறந்துக்குடிச்சி வவுறு வளக்கறப்பவே உங்களுக்கு இத்தன நீரேத்தமா? ஆர்ரிவ, கூப்ட கூட்ப குந்தியிருக்கறவ, நீயி வெளிய வரியா, இல்ல நானு உள்ற வந்து உம்மயிர அறுக்குட்டுமா”ன்னு ரட்சிமாயி ச்சும்மா மேலுக்குங்கீழுக்குங் குதிக்கும்பிடி அழவம்மாளுக்கும் ஆத்தரத்தாக்குபுடிக்க முடியல. “இங்கப்பாராயா, காலங்காத்தால வூட்டண்ட வந்து மயித்தறுக்கரன் கயித்தறக்கரன்னு அனாவசியமா பேசற வேல வெச்சிக்காத’ உம்மவ வயசென்ன எம்பிருசன் வயசென்னா? ஒரு கேள்விமொற மனசருங்கற மட்டு மரியாதி இல்ல. வந்து என்னம்மோ ‘நாசூத்தி நாசூத்தி நாசுவன் எங்க’ன்னு கேட்கறா? எங்களக்கண்டா அத்தன எளக்காரமா”ன்னு அவளுந் திலுப்பிப் பேச புடுச்சது பிளுபிளுன்னு அடமழயாட்டம் நாசுவமூட்டாண்டச் சண்ட. “பட்டத்துக்கு பவிசி வந்ததும் பாக்க முடியிலியாம், பட்டுச்சீலக் கிழிஞ்ச்ப்போனா தெய்க்க முடியிலியாம், அடியே டிங்குமாரி டவுனுக்கேப்மாரி, உம்பிருசன் பெரீய்ய கிலுட்டி அவங்காலுக்கு பூப்போட்டு கும்புட்டு தட்டு வருசவெச்சி வாடா மாப்ள வந்துச் செயிடான்னு அழைக்கணுமா? செய்யறதுச் செரைக்கற வேல. அவன நாசுவங்காமப் பெறவு வேற எப்டீறீங்கறது? உமூட்டு வாசல்ல வந்து கூட்புட்டா வெக்கமாயிருக் குதுங்கறவ, அடி மானரோசக்காரி’ வீர்சக்காரி’மழமாரி பேயாம மானங்காஞ்சாலும்வெள்ளாம வௌஞ்சாலும் வௌயாட்டியும் எஞ்சாண்ட வருசம் பத்துவள்ளம் அளந்துட்டு உனுக்கு வாக்கரிச்சி போடறனே’ தூமக்கட்டி எடுத்துக்கிட்டு வந்து திங்கறறேஇ அப்ப இருக்கணும்டி இந்த ஒணவு. குடிநாசுவமூடுன்னு ஊருல உங்க குடிவெச்சிருக்கறது கவுண்டிங்கத்தனம் பண்றதுக்கா? ஏண்டி அய்யனாட்டம் நெதஞ்செரச்சிக்கிட்டு ஒம்பிருசன் ஊருமெரமன வருவான்’ எமூட்டு ஆம்பளைங்க மட்லுஞ் சிண்டும் முடியுமா தாடியுந்தப்புமா பஞ்சத்துல அடிப்பட்ட பரதேசிங்களாட்டந் திரியினுமா? ஒழுங்கா மரியாதியா உம்பிருசன இன்னிக்கி காட்டுக்கப் போயிக் கிருமமாச் சவரம் பண்டச் சொல்லு. நாளைக்கி திலுப்பியொருக்க அவங்கள அப்பிடியே பாத்தன், பொம்பள நடக்கறதே வேற”ன்னு ரட்சிமாயிப் போட்ட போடு பூட்ட வாங்குது’
குளுருக்கு மொடங்கிக் கெடந்தவன் இந்த மூளி அலங்காரி தொறந்த தொறப்புல கண்ணு முழிச்சி அரத்தூக்கத்துல எந்திரிச்சி வந்து, இத இப்பிடியே வுட்ட வெவகாரம் வேற வேறயாப்போயிருமுன்னு ‘ஆ’ன்னு தொறக்கவுட்டாம அழவம்மாள வாயடக்கி அவள உள்ற தள்ளிவுட்டு தாளுப்போட்டு, “ரவுசுப் பண்டாதீங்க ஆயா’ அவக்கெடக்கறா கழுத’ அவளோட உங்குளுக்கு என்னா வாட்லாட்டியம்? சிங்க ஊட்டுக்குப் போங்க, இதா இப்பபோயி பண்ணாடிங்களுக்கு நாம்பாத்துச் செஞ்சிவுடறன்”ன்னு அங்கமுத்து தொஙகுச்சலாம் போட்டு நாலாடம் பல்லக்கெஞ்சி தலய தலய சொறிஞ்சப் பொறவுதான் ரட்சிமாயி அந்த எடத்தவுட்டு அந்தல்லப் போனா. தெனம் பொழுது விடிஞ்சாப் போதும் அங்கமுத்துக்கு ஓரியாட்டம் ஓயறதில்ல. ஊரு நாயிங்க வூட்ல வுழுந்தப் பொணத்துக்கு ஒரு நாப்பொழுதுக்கும் நிமுசு, வுழுவாதப் பொணத்துக்கு அது புளுக்கய விசுறமுட்டும் ஒக்குலு காத்துக்கிட்டு குந்தியிருக்கணும். செத்தா பொழச்சா எங்கியும் போவமுடியாது. அவந்தான் என்னாப் பண்டுவாம் பாவம்’ நூறூட்டுக் கவுண்டமூட்டாருக்கு ஒருத்தஞ் சேவிக்கறதுன்னா சாமானியப்பட்டக் காரியமா? கெழக்க வெளுக்காதமின்ன அடப்பத்தயுங்கத்தியயுங் கமக்கட்டையில அடக்கிட்டுப் பொறப்பட்டான்னா மவராசன் இருட்ட தலமேலப் போட்டுக்கிட்டு வூட்டுக்குத திலும்புமட்டும் காடு கண்டப்பக்கம் பண்ணாடிங்கள கல்லுமேலக் குந்தவெச்சி வெட்னது வெட்னவாக்குல, செறச்சது செறச்ச வாக்குலியே இருந்தாலும், எதோ ஒண்ணு ரெண்டு இப்பிடி தவுறிப் போவுது. கண்ணு வெளிச்சங்கொறஞ்சி மிமிகங்கது, காதும் மத்துவமாயிக்கிச்சி, முடியலையின்னு கருமாத்தரத்த வுடமுடியிதா’ திங்கறச் சோத்துல மண்ணள்ளிப்போட்டுட்டு, பொறவு ரெண்டுகரு சீவிக்கற வழி? புட்டுச்சுட்டு வித்துக்கிட்டுருந்த வேலப்பமூட்டு பாப்பா மேச்சேரியில ஓட்லுக்கட வெச்சிட்டா, கல்கோனா, சவ்வுமுட்டாயி, சளிமுட்டாயி, சோளக்கருது, பேரிக்கா, பனங்கெழங்கு, குச்சிக்கெழங்கு, கொழிஞ்சி முட்டாயின்னு போட்டு கட்லுக்கட வெச்சிருந்த எளயா மூட்டு கிட்ணப்பன் பலசரக்கு கட வெச்சிட்டான் காடு கற களவெட்டிக்கிட்டு, பயிரு நட்டுக்கிட்டு, அவுத்த யிவுத்த சிக்கனத்தாவுலு குததவைக்கிப்புடிச்சி ஒருக்குட்ட ரெண்டுக்குட்ட வெள்ளாமப் பண்டிக்கிட்டிருந்த மண்டமூக்கு ஆண்டியப்பன் ஏரியோரத்துல கங்காணிய்ட்டு நெலத்த வாங்கி வயலடிக்கிறான். சட்லக்கா, புட்லக்கான்ன தறிநேசிக்கிட்டிருந்த செட்டுக்கார கோவாலு சேலத்துல பெரிய்ய சவுளிக்கட வெச்சிட்டான். இந்த அங்கமுத்து நாசுவனும், செங்கோடவண்ணானும் கொட்டுக்கொட்ட நடேசந்தோட்டியும், செருப்பு தெக்கிற செம்மூஞ்சியூட்டாரும் அன்னிக்கிப் பொழச்ச பொழப்ப இன்னிக்கும் அச்சுக்கொலயாம அப்பிடியேத்தான் பொழைக்கறாங்க. எப்பிடி மின்னேறது? என்னிக்கி வந்த தாவு சேர்றது? ச்சேரி. னுத்தன நாளைக்கி இவங்கப் பாடய திலுப்பறது? நாலுப் பேராட்டம் நாம்பளுஞ் சரீங்கறாப்புல பொழைக்கனுமின்னுதான் ஓடி மேட்டுருல இவஞ்சாப்புக்கட வெச்சான். அவன் வாங்கியாந்த வரம்’ தலையெழுத்து’ அவுனுக்குப் பொறந்தது நாலுந் தெல்லவாரிங்க. தாம் பொழைக்கவுந் துப்பு இல்லாம அப்பனாயாளுக்கு ரெண்டுச் சம்பாரிச்சிப் போட்டுத் திங்கடிச்சிக் கெவுணிக்கவுங்கருத்து இல்லாம, கடய ஒரே வருசத்துல வித்து பொறுக்கித் தின்னுப்புட்டு ஆளாளுக்கு ஒவ்வொரு ஊரா அல்லு எடுக்கப் போயிரிச்சிங்க. ஊம்... ஒண்ணப் பெத்தா உரியிலச் சோறு, நாலப் பெத்தா நடுத்தெருவுலச் சோறுங்கறது செரியாப் போச்சி எவ்வளவெடுப்பா, எவ்வளவிறாப்பா குச்சப் புடுங்கிக்கிட்டு ஊரவுட்டுப் போனானோ, அத்தச் சின்னப்பட்டு, சீப்பரத்து, ரோலாயப்பட்டு, திலும்பி வர வேண்டியதாப்போச்சி. அதும்பொறவு ஊருல அவனுக்கு கொஞ்ச நஞ்சமிருந்த யோக்கிதியும் தொச்சமில்லாமக் கெட்டுப்போச்சி. தெனஞ் சித்ரவத ஊத்தவாயக் கழுவாமஇ ஒரு முழுங்கு நீசுத்தண்ணிக்கூட குடிக்காம காத்தாலங்காட்டியும் பண்ணாடியத்தேடித் திலும்புனான் அங்கமுத்து. “எங்கன்னு கண்டு தொழாவுறது? புளிச்சக் கள்ளக் குடிச்சிப்புட்டு தம்பி பண்ணாடி காமாடு தலமாடு தெரியாம எங்கக் கெடக்கறானோ’ இலல எத்த மப்பு எறங்காம இருக்க, சின்னப் பையஞ் சாணனோட கொய்யாமரத்துக்காடு ஒருகோடியா தொப்பலாமூட்டு தோப்புமுட்டும் பனஞ்சாரி எங்க திரியறானோ? மனுசங் கைக்கிச்சிக்கறது அவ்ள லேசுப்பட்ட சமாச்சாரமா, ஆராலடா கடவுளே ஆவறது"ன்னு வெசனம் புடிச்சிக்கிட்டு அங்கமுத்து தேசிகமூட்டு கெணத்தான்டயிருந்து, அப்பிடியே நாயப்பமூட்டு காடு, மெமல யூட்டுக்காடு, மலையாமூட்டுக்காடு, குட்டக்கர, வளயச் செட்டியாமூட்டுக்காடு, முத்தண்ண மூட்டுக்காடு, தூங்கண்ணமூட்டுக்காடுன்னு ஆளத் தொழா அலமோதி கெட்டலஞ்சி கடச்சியா பழனியப்பமூட்டுத் தோப்புல அவனப் புடிச்சி சேத்தனான். “ஏண்டா கேனா, எள நேரத்துல வர்றதுக்கு உன்கென்றா கேடு? வெய்ய நேரத்துல வந்து ஏண்டா எந்தாலிய அறுக்கற? இனுமேட்டு நீ எப்ப செரக்கிறது, நானு எந்நேரந் தண்ணி வாத்துக்கிட்டுச் சோறுக்குடிக்கறது”ன்னு பண்ணாடிக்க அவன பாத்தும் பாக்காதமின்னன்னு நோப்பாளஞ் சீறிக்கிட்டு வந்துட்டது. சவரம் பண்டிக்க மாண்டேன்னு நொம்போ உலுக்கனாரு. அதா இதான்னு என்னான்னவோ தவுமானஞ்சொல்லி ஆளக்கூட்டியாந்து எடஞ்சேத்தறதுக்குள்ள அங்கமுத்து தெணறு தெணறுன்னு தெணறிப்புட்டான். அப்பிடியே சைசாப்பேசி நைசுப்பண்டி கவுண்டரக் குந்தவெச்சி, கத்தியத் தீட்டி மெவறயில வெச்சாம்பா, இருந்தாப்பிடி இருந்து பண்ணாடி சிவுக்குன்னு எழுந்து தென்னமரத்துலச் சாஞ்சி நின்னு வெடுக்குனு கோமணத்த அவுத்துவுட்டு ”அங்க கெடந்தா கெடக்கட்டும், அதவுடுறா, அப்புறம் பாத்துக்கலாம். இங்கப் பண்டுறா மொதல்ல”ன்னு முக்கிலியமான எடத்த காட்டும்பிடி வழுதுப்பேசல அங்கமுத்து. செத்துப்போன மொன்ன பாம்பாட்டம் தெவண்டுப்போயி தொங்கிக்கிட்டு இருந்த உசுரு நெலயச் சுத்தி அடபாசரம், முச மண்டலம், மூத்தர நாத்தம், ஓரேச் சீன்றம். மொடையடிக்கிது, சூரையடிக்கிது என்றனால முடியாதுடாச் செரைக்கன்னு சொல்ல முடியுமா? இல்ல ஏனோதானோ என்னம்மோ அப்பிடி ஒண்ணு ரெண்டாச் செஞ்சித் தப்பிக்க முடியுமா? மூச்... வழிச்சுட்ட வூடாட்டம் சுத்தமா இருக்குனும். வெரலவுட்டு நெரடிப்பாக்கையில எங்கியாச்சும் ஒருமுடி இந்துப்புடிச்சி பொறவு ஈடுதிங்க முடியாது. பண்ணாடி மாருங்களுக்கு கோவம் வந்திச்சி அவ்ளத்தான். புளியாமரத்துலக் கட்டிவெச்சி வெளுத்தா வெளுத்துப்புடுவாங்க. குமிஞ்சவாக்குல என்ன முட்டும் நிக்கறது? இடுப்பு நோவு வேற மின்னலு மின்றாப்லப் பளீர் பளீர்ருங்க மண்டிப்போட்டு வாட்டமா நின்னு நெதானமா பொறுத்து பொறுத்துச் சீருப்பாத்துச் செஞ்சி முடிக்கையில பண்ணாடிக்கு கண்ணச் சொருவிக்கிட்டு தூக்கம் வந்துட்டுது. “எந்திரிங்க சாமி”ன்னு இவந்தொட்டு எழுப்பும்பிடி பண்ணாடி நித்தரக்கலஞ்சி,“என்றா கேனா ஆச்சாடா”ன்னு கேட்டான். “ஆச்சுங்க சாமி”யின்னான் இவன். “என்னோட வந்தவேல முடிஞ்சிப்போச்சின்னு நீப்பாட்டுக்கு லயில்வே கேட்டுக்கு புட்டு திங்கப் போயிராத. அதா அவுத்தகொட்டாயில சின்ன பண்ணாடி இருக்கறாம் போயி அவுனுக்கும் பாத்துச் செஞ்சிப் புட்டுப்போ”ன்னு பண்ணாடிச் சொல்லும்பிடி. “சேரிங்கச் சாமி”ன்னுப்புட்டு. இவன் மொழங்காலு நோவோட மொள்ள எந்திரிச்சி ரெவலா நடந்து மின்ன போயி நின்னான். இவந்தலய கண்டுங்காங்காத மாதிரி கொட்டாயிக்குள்ள கட்டுல்ல படுத்துக்கிட்டு இருந்தான் தம்பியின்ன மவன் பழனியப்பன். இருந்து இருந்து சலிச்சி இருக்க மாட்டாம இவஞ், “சாமீ... சாமீ...”ன்னு ரெண்டுச் சொல்லுக் கூப்புடும்பிடி அந்த மொள்ளமாரி படுத்தவாக்குல கட்லடியக் கெடந்த நெத்துத் தேங்காய எடுத்து ‘ச்சுடேன்னு’ வாசக்காலப் பாத்து விர்ரன்னு வீசனாம் பாத்துக்க இந்த ஈனப்பானங்கெட்டது அடிக்கி தப்பிச்சி ஓரமா ஒதுங்கி நின்னுக்கிட்டு. “சாமீ, பண்ணாடி’ நாந்தாஞ்சாமி குடீநாசுவன் வந்துக்கிறஞ்சாமி”ன் பிருவா வௌம்பி விங்கிணிச்சி சொல்லிச்சி மறுக்க. அதுக்கு அந்த எறப்பாணி பெத்தது, “ஆரு அங்கமுத்து பண்ணாடியா? அடப்பகவானே’ பெரிய்யக் கருப்ராயா, நானு வேற இந்த மொண்டு வாலு நாயிதான் ஒலைக்குதோ தென்னமோன்னு தச்சோட்டு நெத்துக்காய எடுத்து இட்டுப் புட்டனே”ங்குது எகத்தாளமா. திலுப்பியும் இந்த கேடு கெட்ட அங்கமுத்து, “ஐய்யோ, குத்தஞ்சாமி குத்தம். நீங்கபோயி என்னயப் பண்ணாடிங்கறதா, வாண்டாஞ்சாமி வாண்டாம். பாவத்த எங்கப்போயி தொலப்பஞ்சாமி”ன்னு கெஞ்சறாங் கொணாய்க்கிறாஞ் சும்மா. “பின்ன என்றாப் பன்ன? கத இப்ப அப்பிடித்தாண்டா ஓடுது, கூச்சு கூச்சுன்னா வந்து மூஞ்ச நக்கறீங்க? ரேங்கண்டு நீங்களா வந்து செய்யறதில்ல. கெடஞ் சாவுதுன்னு வூட்டுக்கு ஆளுவுட்டுக் கூப்புட்டா பொட்டக்கழுதைங்கள வாயிபேசவுட்டு வேடிக்கப் பாக்கறீங்க. அது வேற ஒண்ணுமில்லீங்க, ராசாவு உங்குளுக்கு துளுரு வுட்டுப்போச்சி. மணிக் கட்டோட கைய நறுக்கி வுட்டுட்டா எல்லாஞ் செரியப் போவும்”மின்னு காதுல நத்தம் முட்றாப்ல பேச்சறான். இவுனும் அதல்லீங்கச்சாமி, இது இல்லீங்கச் சாமி, அது அப்பிடி ஆயிப்போச்சிங்கச்சாமி, இது இப்பிடி ஆயிப்போச்சிங்கச்சாமின்னு ஆயிரத்தெட்டு சாக்குச் சொல்லி அந்த சொட்டத்தலையில சீக்கட்றாப்ல சொறிஞ்சி புண்ணுப்பண்டி, அந்த ஒந்தறக்கண்ண சிமிட்டி, சிமிட்டி பல்ல இளிச்சி அவன சுதாரிச்சி கொண்டி நெல்லிக்கா மரத்தடிய நிறுப்துப்பிடி ஒட்கார தோதா ஒண்ணுஞ்சிக்கல்ல. பொறவு இவம் போயி கல்லுக்கட்டு மேலருந்து ஒரு கருங்கல்ல பேத்துக் கொண்டாந் துப்போட்டு பண்ணாடியக் குந்தவெச்சி தண்ணியத் தொட்டு தடவி மெதுவா அப்பிடியே பூப்பறிக்கறாப்ல துக்ளியூண்டு துக்ளியூண்டா செறயயும் வழிச்சி எடுத்தான். ஏனோ பழனியப்பன் அப்பைக்கும் உர்ர்ருன்னே குந்தியிருந்தான். இன்னும் ஏதாச்சிம் ரெண்டு சமாதானஞ்சொல்லி பண்ணாடியவிக கோவத்த ஆத்தி பொந்திய குளுர வெச்சா எதோ போடிபுட்டுக் காச்சும் காசாவுமுன்னு இந்த திருவாத்தான். “சாமி அறியாப்புள்ளயா இருந்தப்பப் புடிச்சி எத்தனையோத்தரம் உங்குளுக் கெராப்பு வெட்டி வுட்ருக்கறன், கள்ளிச் செதுக்கிவுட்ரு’கறன், மீசக் கத்திரிச்சி ஒதுக்கிவுட்ருக்கறன். ஆனானாக்கச் சாமீ, ஒரே ஒருத்தரங்கூட இன்னிக்கு அமஞ்ச ரட்சணம் உங்க மெவறயில என்னிக்குமே அமஞ்சதில்ல. இந்த கல்லோட ராசியோ என்னமோ ஆளும் உங்க மொகக் கூறும் நீங்க குந்தியிருக்ற கெம்பீரமும் பாத்தா அட அட என்னான்னுச் சொல்றது’ அப்பிடியே அந்த மைசூரு மவராசா தங்க சிங்காதனத்துல குந்தியிருக்கறாப்ல அத்தன அற்புதமா இருக்குதுப்போங்க”ன்னு ஒரு மிஞ்சனப் பழமய மெய்க்க மெய்க்கப் பேசும்பிடி, படக்குனு அந்தக் கவுண்டந் தூக்குடா கேனா கல்ல வூட்டுக்குன்னு உத்தரவு போட்டான் ஒரேடியா. ஹூம்... வெந்தது தின்னு விதி வந்தாச் சாவ கெழுட்டுத் தாயேலி, கல்லச் சொமந்துக்கிட்டு நொறத்தும்ப பண்ணாடிப் பொன பட்டி நாயாட்டம் ஓட்டமெடுத்தான்.

கருத்துகள் இல்லை: